Skip to main content

THE MURDERER, THE MONARCH AND THE FAKIR - நூல் அறிமுகம்

 யாவரும் அறிந்த உண்மைகளிலும் ஒரு உண்மை ஒளிந்துக் கொண்டே தான் உள்ளது போலும். அது போலவே பலரும் அறிந்த உண்மையையும் மீண்டும் பல காலம் கழித்து அதன் உண்மைத்தன்மையை எவரேனும் காரியமாக அசைத்திட முற்படுகையில் அந்த உண்மையை மீண்டும் மீண்டும் அறுதி செய்ய வேண்டி உள்ளது காலத்தின் தேவையாகிறது. அவ்வாறான சில உண்மைகளை திரும்பவும் உறுதியாக சொல்வதும் ஒளிந்திருந்த அல்லது அவ்வளவாக கவனம் பெறாத சில உண்மைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சும் ஒரு முக்கியமான புத்தகம் தான் இது.  THE MURDERER, THE MONARCH AND THE FAKIR.

 


காந்தியடிகளின் கொலை என்பது ஒன்றும் மர்மமான ஒன்றல்ல. எவர் சுட்டார் எதற்காக சுட்டார் என்பதெல்லாம் தெரிந்த உண்மைகள். உண்மையில் சுட்டவன் தன்னை யார் என்று ஒளித்து வைக்கவில்லை, அவனுடைய நோக்கமும் தெளிவானதே. இதிலென்ன சுவாரசியம் மீண்டும் மீண்டும் வருகிறது? கோட்சே ஆம் நாந்தான் சுட்டேன் என நீதிமன்றத்தில் சொன்னானே பிறகென்ன? ஆனால், இவ்வளவுதானா உண்மைகள்…? கோட்சேவின் தனிப்பட்ட கோபத்தினால் மட்டுமே விளைந்ததா இக்கொலை? நாந்தான் சுட்டேன் என்று சொன்னதின் பின்னே ஏதேனும் உண்மை மறைக்கப்பட்டதா? இவையெல்லாம் இப்புத்தகம் பேசும் விஷயங்கள். இந்த விஷயங்களை திரும்ப திரும்ப நம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிற காலமாக இக்காலம் இருப்பதால் தான் இப்புத்தகம் முக்கியமான ஒன்றாக மாறுகிறது.

 

ஆவணங்களைப் பாதுகாப்பதில் உள்ள அபாயங்களை அறிந்த அரசுதான் அதை அழித்துவிட எல்லா முயற்சிகளையும் செய்யும். அதையும் மீறி தப்பி இருக்கும் சில ஆவணங்கள் இப்புத்தகத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. அப்படியான ஆதாரங்களை திரட்டி காந்தி கொலைக்குப் பின் உள்ள சில உண்மைகள் மீது வெளிச்சம் பாய்ச்சி பொதுமக்கள் திரள் முன்னே நினைவூட்டும் ஆம் நினைவூட்டும் மிக முக்கியமான வேலையை இப்புத்தகம் செய்துள்ளது.

 

காந்தி கொலை என்பது ஒன்றும் ஒரு நாள் முடிவல்ல. அது திட்டமிட்ட சதி.. மிக நன்றாக திட்டமிட்டு ரிகர்சல்கள் எல்லாம் பார்த்து சில சோதனைகள் தோல்வியில் முடிந்ததற்குப் பின்னே கொலையுண்ட காந்தியே தன்னை கொலை செய்யவிருக்கிறார்கள் என நன்கு தெரிந்தே நடந்த விந்தையான சதி. இவையெல்லாம் நாம் அறிந்தவை. விஷயம் ஆனால் ஏதோ தனிப்பட்ட கோபத்தினால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விஷமிகள் அவரை கொலை செய்ய எத்தனித்து தோல்வியுற்று பின் இறுதி பெற்றார்கள் என்பதாக வரலாறுகளில் பேசப்படுவது போல் இல்லை காந்தி கொலை என்பதையே இப்புத்தகம் அறுதியிட்டு கூறுகிறது.

 

கோட்சேவிற்கு மட்டுமா கோபம்? அந்த கோபம் பலருக்கும் இருந்திருக்கிறது. ஆம் ஹிந்துமகாசபா என்னும் அமைப்பிற்கு அந்த கோபம் பிரதானமாக இருந்திருக்கிறது. அதன் ஆதரவாளரான சாவர்க்கருக்கும் இருந்திருக்கிறது. அக்கோபம் கொலை செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்கிறது இப்புத்தகம். காந்தியாரை கொலை செய்யப்பட பயன்படுத்தப்பட்ட பைரட் வகை துப்பாக்கி உட்பட அதற்கு தேவையான பணம், திட்டம், ஆட்கள் என எல்லாம் தேர்ந்தெடுத்து தரவும் சில ஆட்களும் அவர்கள் அமைப்பாகவும் இருந்திருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்க வேண்டுமல்லவா? அவர்களை அப்பட்டமாக இப்புத்தகம் தோலுரிக்கிறது.

 

கோட்சேவும் அவனோடு குற்றம் சாட்டப்பட்ட பலரும் நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் இருக்க அவர்கள் பக்கம் தன் கண் பார்வை கூட ஒரு நிமிடமும் விழுந்துவிடாமல் இறுகி கிடந்து தன்னை அக்குற்றத்தில் இருந்து விலக்கி வைக்கிறான் சாவர்க்கர். கோட்சேவும் தானே செய்ததாக மட்டுமின்றி தன் பின்னே வேறு அமைப்புகள் இல்லை என்பதாகவும் சொல்லி அமைப்பை பாதுகாத்திட தன் உயிரையும் பணயம் வைக்கிறான் என சொல்கிறது இப்புத்தகம்.

 

சரி, இந்தக் கோபம் ஏன்? இந்திய மக்களின் பகுதியான இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்தார் காந்தி என்பதே கோபம். பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்க வேண்டிய 50 கோடி ரூபாய் கொடுத்திட வேண்டும் என காந்தி நிர்பந்தித்துதான் கோபம். அடுத்த கேள்வி, ஹிந்து மகா சபாவிற்கு இஸ்லாமியர்கள் மீது அப்படியென்ன கோபம்? இன்னமும் தொடரும் அவர்களின் வழக்கமான ஆதாரம் ஏதுமற்ற ஒரு குற்றச்சாட்டை வைத்து அதற்கு அவர்களே உருவாக்கிய ஆதாரம் என்ற ஒன்றையும் வைத்தே வெறுப்பை விதைப்பது என்னும் சதி அன்று தான் தொடங்கியிருக்கிறது. முஸ்லீம் லீக் இஸ்லாமிய மக்கள் மத்தியில் விரைவில் ஆங்கிலேயர் போன பின் இஸ்லாம் அடிப்படையில் இந்தியாவை முகலாயர் காலம் போல் கைப்பற்றுவோம் என டைப் அடித்து சுற்ற்றிக்கை விட்ட்தாக ஒரு பேப்பரை வைத்தே ஹிந்து மதம் அழியப் போகிறது என கம்பி கட்டியிருக்கிறார்கள் என இப்புத்தகம் ஆதாரத்தோடு சொல்கிறது.

 


இவர்களைத் தவிர, மற்றொரு கூட்டமும் காந்தியை கொலை செய்ய ஆதரவு தந்து இருக்கிறது அல்லது ஹிந்து மகா சபாவோடு நெருக்கம் பாராட்டியிருக்கிறது, அது அக்காலத்தில் இந்தியாவில் இருந்த சமஸ்தானங்களில் சில என்னும் முக்கியமான உண்மையையும் இப்புத்தகம் வெளிச்சமிட்டு காட்டுகிறது. அவர்கள் ஏன் கோபம் கொள்ள வேண்டும்? புரட்சி நடத்தி சமஸ்தானங்கள் தூக்கியெறியப்பட்டுள்ளதை நாம் வரலாறு நெடுக பார்த்திருக்கிறோம். இந்தியாவும் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றால் அப்படி ஒரு நிகழ்வு நடந்து உண்மையான மக்களாட்சி நிகழும் என்பதாகத்தானே இயற்கையாக வரலாறு இருக்க வேண்டும். ஆனால் அஹிம்சை வழி நின்ற காந்தி இந்த சமஸ்தானங்களிடம் நீங்களாகவே மக்களாட்சியோடு இணையுங்கள் என அமைதிவழி சொன்னாலும் உறுதியாக சொல்கிறார். இதை கொஞ்சம் பரிசீலியுங்கள் என சொன்ன சமஸ்தானங்களுக்கு உறுதியாக மறுக்கிறார். மக்களாட்சி தான் அடுத்து என உறுதியாக நின்றார் காந்தி. இந்து மகாசபாவோ இல்லை, இல்லை, இந்திய விடுதலைக்குப் பின் இந்த சமஸ்தானங்களின் கீழ் தான் இந்தியா இருக்கும் என உறுதியளிக்கிறது. ஆம், இடையே தொலைந்து போன அவர்களின் பொற்காலம் திரும்பும் என ஆசைவார்த்தைகளை விதைத்திட, காந்தியோ மறுத்திட இயல்பாக காந்தி மீது அவர்களின் கோபம் திரும்புகிறது என ஆதாரங்களோடு இப்புத்தகம் சொல்கிறது.

 

இவ்வளவு முக்கியமான கொலைச்சதியை என்ன காரணத்தினாலோ அப்போதிருந்த காவல்துறையும், உள்துறையும் விசாரிக்க தவறியதன் மர்மத்தையும் கவனப்படுத்துகிறது இப்புத்தகம். அதன் மூலம் அரசின் முக்கிய இடங்களிலும் ஹிந்துமகாசபாவின் செல்வாக்கினையும் கோடிட்டுக் காட்டுகிறது இப்புத்தகம்.

 

காந்தியடிகளின் கொலை என்பது ஆழமாக வளர்த்தெடுக்கப்பட்ட அப்பட்டமான வெறுப்பின் விளைவு என்பதை இப்புத்தகம் மிகவும் அழுத்தமாக சொல்கிறது.

 

மிக முக்கியமான புத்தகம். அவசியம் படித்திட வேண்டுகிறேன்.

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற