நாள்தோறும் நான் காணும் மனிதர்கள், சூழல்கள் இவற்றில் நாம் எவ்வாறு “வினை” புரிகிறோம் என்பது ஒரு முக்கியமான அரசியல். அந்த அரசியலை முன் வைக்கிறது பரிந்துரைக்கிறது இந்த நூல் என்றே நினைக்கிறேன். ரமேஷ் பாபுவின் எழுத்துக்கள் எனக்குப் புதிதல்ல. ஆனாலும் ஒன்றாக தொகுப்பாக பார்க்கையில் இன்னும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த நூலில் சமூகத்தின் இருண்ட வெளி மக்கள் மீதான கனிவும், அவர்களின் தேவை குறித்த புரிதலும், அவர்களோடு உறவாட, இணைந்து செயல்பட நினைக்கும் பரிவும், வரலாற்றை மறுவாசிப்பு செய்தலும் என எல்லாம் இருக்கிறது. ”மனிதர்களை உற்றுப் பார்ப்போம்”- இந்த நூலில் ஆக சிறந்தது என நிச்சயமாய் சொல்லலாம். மேம்பாலத்தில் வாழ்க்கை நடத்தும் முதியவர் ஒருவரோடு ரமேஷ் பாபு நிகழ்த்திய உரையாடல். நான் அன்றாடம் சந்திக்கும்(கண்ணுறுகிறோமா?!) சாதாரணர்கள் பின்னான வாழ்க்கை குறித்த ரமேஷ் பாபுவின் பார்வை நிச்சயமாய் நாமும் கை கொள்ள வேண்டியது. கணப்பொழுதுவில் இம்முதியவர்களை நாமும் கடந்து வருகிறோம், பல சமயங்களில் நம் சிந்தனையில் அவர்கள் பதிவதுமில்லை. மேம்பால கைப்பிடிச் சுவர்களும் இவர்களும் ஒன்றாகவே காலப்போக்கில் நமக்கு படுகிறது. அ...