கொடி காட்ட வந்தவன் – இந்நூலினை வாங்க முன்பதிவு செய்யுங்கள் என விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் ஆதி வள்ளியப்பன் என முகநூலில் இட்ட மாத்திரமே முடிவு செய்து புத்தகத்தை முன் பதிவு செய்து பெற்றேன். நேற்றுதான் இப்புத்தகம் கையில் வந்து சேர்ந்தது. இடையில் இவர்களின் முகநூல் பக்கத்தில் இப்புத்தகத்தின் அறிமுகவிழா நடந்ததையும் அதில் பேசியவர்கள் பேச்சு காணொளியாக கிடைப்பதையும் போட்டிருந்தார்கள். அதில் எழுத்தாளர் பாலபாரதியும் இடம் பெற்றிருந்தது வேறு இன்னும் சுவாரசியத்தை கூட்டியது.
அப்புறம் என்ன, வந்து சேர்ந்த உடனே வாசிக்க துவங்கினேன். சின்ன புத்தகம் தான். வாசிக்கவும் எளிது. நடையும் சரளமாக இருந்தது. இப்புத்தகத்திற்கும் எனக்கும் ஒரே வயது. புத்தகம் கூட மறுபதிப்பு கண்டுவிட்டது. புத்தக வாசிப்பு அனுபவத்திற்கு போவதற்கு முன் இப்புத்தகத்தை தேடி கண்டடைந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். சிறார் நூலாசிரியர் ரேவதி அவர்களுக்கு எப்படிப்பட்ட ஒரு அனுபவமாக இது இருந்திருக்கும்? நினைக்கையிலே சிலிர்க்கிறது.
ஒரு அரசியல் வரலாற்று நிகழ்வுப்போக்கினை குழந்தைகளுக்கு எப்படி கடத்துவது? காந்தி என்ற தனிமனிதர் அல்லர், காந்தியின் சிந்தனைகள், அவரின் கொள்கைவழி செயல்பாடுகள் என அவற்றை எப்படி எளிதாக குழந்தைகளிடம் கடத்துவது அதுவும் சுவாரசியமாக என கேட்டால் இந்நூல் அதற்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு. பாலமித்ரா, அம்புலிமாமா படித்தவர்களுக்கு பழக்கமான அதே எளிய சொல்லாடல், சிறு வாக்கியங்கள் என அதே உத்திதான். ஆனால் மிகவும் சக்தி வாயந்த ஒரு உத்தி. இன்னமும் 25 வரிகள் சேர்ந்தாற் போல் இருக்கிற ஒரு பத்தியை படிக்க கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. தெரிந்தோ தெரியாமலோ ஒரு அயர்ச்சியை தருகிறது, பார்க்கையிலேயே. 50 வயதை நெருங்கிவிட்ட எனக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என நான் நினைத்திருக்கிறேன். பல நேரங்களில் என் பார்வை கொண்டு சிறார் வாசிப்பு அனுபவத்தை அணுகி மொக்கை வாங்குவதும் உண்டு.
அதிசயங்கள் நீத்துப் போய் விட்ட வாழ்வு என்னவாக இருக்கும்?! வியந்து போகாத மனித இனம்.. நினைத்தே பார்க்க முடியவில்லை. ஆனால் சோஷியல் மீடியா காலம் அப்படியாகத்தான் இருக்கிறதோ என நான் அஞ்சுகிறேன். காலம் இப்படியிருக்க, பூமர் ஆகிய நான் இப்புத்தகத்தின் செய்திகளை வியந்து வியந்து படித்தேன். தெரிந்த செய்திகள் தான், ஏற்கெனவே வாசித்து அறிந்தவை தான். ஆனால் திரும்பி பார்க்கையில், என்னவெல்லாம் இந்த மண்ணில் நடந்தேறியிருக்கிறது,, எவ்வளவு தூரம் முன் சென்றிருக்கிறோம், எட்ட தொலைவு இன்னும் பல பல மடங்கு என்ற போதிலும், எட்டு வைத்திருக்கிறோம் என்ற திருப்தியும் கிடைக்க செய்கிற ஒரு புத்தகம்.
புத்தகம் வாசித்து மகிழ்ந்து போன அதே நேரத்தில், தோழர் ஆதி வள்ளியப்பன் எழுத்தில் லெனின் குறித்தும் மார்க்ஸ் குறித்தும் அவர் சிறார்களுக்கென எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட அந்த சிறப்பு நூல்களும் நினைவில் வந்து போனது. பாரதி புத்தகாலயம் அதை தொடர் வேண்டும். கொடி காட்ட வந்தவன் நூல் பதிப்பித்த கதைவண்டியும் இப்பணியை தொடர் வேண்டும்.
கொடி காட்ட வந்தவன் கையில் சேர்த்தமைக்கு அருமை தோழர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு மிக்க நன்றி. மற்றுமொரு சிறார் இலக்கிய முன்னத்தி ஏரினை கண்டறிந்தமைக்கும் நன்றிகள், கதை வண்டி பதிப்பகத்தாருக்கு.
#புத்தகம் #சிறார்நாவல் #சிறார்இலக்கியம் #கொடிகாட்டவந்தவன் #காந்தி #கதைவண்டி #தமிழ் #வாசிப்பு

Comments