Skip to main content

எனக்கு ஏன் இல்லை கல்வி - களப்பணிக்கான கையேடு


எப்போதும் போலத்தான் அன்றும் அபிகுட்டி ஒரு கேள்வி கேட்டது. ஒரு போக்குவரத்து சிக்னலில் வண்டியுடன் காத்திருந்த அந்த அரும்பொழுது. “ஏம்ப்பா, அவர் யாரு?”, “அவரா பிச்சைக்காரர்ம்மா”. உடனே அடுத்த கேள்வி, “அவர் ஏன் இப்படி இருக்காரு”, “அவர் அப்படித்தான்ம்மா, அவருக்கு வேலை செய்ய முடியாது அதனாலதான் மற்றவங்ககிட்ட காசு வாங்கி அந்தக் காசுல சாப்பாடு வாங்கி சாப்பிடுவார்ம்மா”.  இப்படித்தான் குழந்தைகள் ஒரு கேள்விக்கு அவர்கள் திருப்தியடைகிற பதிலை நாம் சொல்லிவிட்டால் கேள்விகளை சரம்சரமாக தொடுப்பார்கள். அப்படி தொடரும் கேள்விகள் நம்மால் விடை காண இயலாவிட்டாலோ அல்லது அவர்களுக்கு புரியும்படி சொல்லத் தெரியாவிட்டாலோ பட்டென்று அறும்.  “அவர் எப்பப்பா வேலை முடிப்பாரு, அவர் வீடு எங்கிருக்கு, எனத் தொடங்கி அவர் பசங்கள் எல்லாம் எந்த ஸ்கூல்ல படிப்பாங்க? என்ற கேள்விக்கு என்ன சொல்வது என விளங்காமல் நான் விழி பிதுங்கி நிற்க அபிக்குட்டி ச்சே, போப்பா“ என்ற ஒற்றை முனகலுடன் கேள்விகளை அப்போதைக்கு முடித்துக்கொண்டது. எனக்குத்தான் மிகப் பாவமாக போய்விட்டது.

ஆமாங்க, அவருக்கு குடும்பம் என்ற ஒன்று இருக்கிறதா? அப்படி இருந்தால் அவர்கள் எங்கே இருப்பார்கள்? அவர்கள் வீட்டு குழந்தைகளின் கல்வி என்னவாகும்? ஒருவேளை அவரே என்ன படித்திருப்பார்? படிக்காதனால் தானோ அவர் இப்படியிருக்கிறார்? அவருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா? அவரால் படிக்காமல் போய்விட்ட காரணம் என்னவாக இருக்கும்? அவரை கல்வி கற்க விடாமல் தடுத்தது என்ன? ஆமாங்க, சரியான பதிலை எதிர்பார்க்கும் போது நாமும் விடை காண சரம்சரமாக கேள்விகளை தொடுக்கிறோம். ஆனால் விடை காண முயல்கிறோமா என்பதுதான் நமக்கும் குழந்தைக்கும் உள்ள் இடைவெளி. ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தின் இறக்கங்களை எப்போது நாம் கேள்விக்குள்ளாக்கி விடைகாண முயற்சி செய்ய போகிறோம்?

நம்மில் ஒரு சிலர் மட்டுமே விடை காண முயல்கின்றனர் என்பது கூட இல்லாமல் மிகச்சிலரே கேள்விகளையாவது எழுப்புகின்றனர் என்பதே உண்மை. அவர்களாலேதான் இந்த சமூகம் தன்னுடைய இறக்கங்களை சமன்படுத்த ஒரு சில முயற்சிகளையாவது எடுக்கிறது. அப்படியொரு முயற்சியைத்தான் என் நண்பர் தோழர் ந.மணி எடுத்திருக்கிறார். அதன் விளைவே பாரதி புத்தகாலயத்தின் பெருமைக்குரிய அடுத்த வெளியிடு “கல்வி உரிமைச் சட்டம் இவர்களுக்கு ஏன் இல்லை கல்விஎன்கிற ரூ.25/- விலையிலான புத்தகம். நடுத்தர ஓட்டல்களில் விற்க்கப்படும் ஒரு சாதா தோசையினை விட குறைவான விலை கொண்ட சமூகத்தின் மிகப்பெரும் சாபத்தை கேள்விக்குள்ளாக்கும் இப்புத்தகம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவரும், ஈரோடு கலைக்கல்லூரி பொருளாதார பேராசிரியருமான ந.மணி அவர்களுடைய மூன்றாவது புத்தகம். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்என்ற முதுமொழி இவரது எழுத்தில் தெரிகிறது.

ஈரோடு நகரில் உள்ள சில சிறார் தொழிலாளர்களை மணி அவர்கள் வாழிடம் தேடிச் செல்கிறார். வாழிடம் என்ற சொல்லிற்கு பொதுப்புத்தியில் உள்ள் அர்த்தம் உடைபடுவதை கண்டு கொதிக்கிறார். அக்குழந்தைகளை கனிவோடு விசாரித்து அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டிருப்பதற்கான காரணங்களை கண்டறிகிறார். காரணங்களில் சில அவர்களின் வறுமை, குடும்பப் பிண்ணனி என இருந்தாலும், சில பள்ளிக்கூடங்களாகவும், ஆசிரியர்களாகவும் இருக்கின்றன என்பதே அதிர்ச்சி தரும் சோகம். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்ச்சியான போராட்டத்தால் தலைமுறைகள் பல கடந்து புரட்சிக்கு பின்னரே நீங்கும். பொருளாதார காரணங்களால பள்ளிக்கல்வி மறுக்கப்படுதல் என்பதை நடிகர் சூர்யாவின் அகரம் போன்ற தொண்டு நிறுவனங்களால் சில குழந்தைகளுக்காவது நீங்கலாம். இந்த ஆய்வின் அடிப்படையாக நான் பார்ப்பதும், அநேகமாக இந்நூலாசிரியர் வேண்டுவதும் பள்ளியில் ஏற்படும் சில விஷயங்களால பள்ளிப்படிப்பை பாதியிலேயே முறிக்க நேரிடும் அப்பாவப்பட்ட குழந்தைகளை அவசர அவசரமாக காப்பாற்றவே என்பது திண்ணம்.

எத்தனை கொடுமையானது ஆசையோடு மிஸ்” “சார்எனக்கூப்பிடும் குழந்தைகளை போ உனக்குப் படிப்பு ஏறாது”, “நீ லாயக்கில்ல” என்று சொல்லி விரட்டுவது?  ஓர் எழுத்து “ஷ்வராத பென் குழந்தைக்கு அந்த ஒரு காரணத்திற்காகவே கல்வி மறுக்கப்படுகிறது. யுகங்கள் கடந்த போராட்டத்தின் பின் கல்விச்சாலைக்கு வந்த ஒரு பெண் குழந்தையை ஓர் எழுத்து விரட்டுவது என்பது சொல்லொண்ணா கொடுமை. இந்நூலாசிரியர் அப்பிரச்சனைக்கு செய்த தீர்வு என்பது ரொம்ப புத்திகூர்மை தேவைப்படுகின்ற ஒன்றல்ல. மாறாக அதற்கு தேவை மனசாட்சி, ஒரு சிறு அர்ப்பணிப்பு, கனிவு, கல்வியின் இன்றியமையாமை உணர்ந்த அறிவு இவ்வளவே. ஓர் எழுத்து மட்டுமல்ல பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை விரட்டுவதில் டீசி இல்லை, ரொம்ப அழுக்காக வருகிறான், கை சுத்தம் இல்லை, மற்ற பிள்ளைகளை அடிக்கிறான், எப்போதும் பேசுகிறான் என்பவையும் சேர்கின்றன என்பதுதான் உள்ளார்ந்த சோகம். உளவியலாய் பிரச்சனைகளை அணுகி தீர்வு காண வழி தெரியாமல் கையறு நிலையிலேயே பள்ளிக்கூட விரட்டல்கள் நடக்கின்றன.

ஆசிரியர் தகுதிக்கு படிப்பும், போதாதென்று பின் தேர்வும் வைக்கின்ற அரசுகள் உண்மையிலேயே ஆசிரியராக மாறுவதற்கு என்ன செய்கிறது என்கிற கேள்வியும் எழுகிறது? அரசு தனியார் பள்ளிகளை கண்காணிக்காமல் விடுவதில், ஆங்கில வழி கல்வியை முன்னிறுத்துவதில், காண்டிராக்ட் முறையில் ஆசிரியர் நியமிப்பதில் என தன் அரசியலை சரியாகத்தான் செய்கிறது. ஆசிரியர் சங்கங்கள்? 80களின் இறுதியில் ஆசிரியர் சங்கங்கள் தங்களின் சம்பள உயர்வுக்கு ஆகப் பெரிதான போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டன. அதே சமயம் இன்றும் வகுப்பறைகளை மலரச் செய்வதில், ஆசிரியர் மாணவர் உறவினை மேம்படுத்துவதில், பள்ளிக்கூடங்களை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர் சங்கங்களின்(இடதுசாரிகளுடையதும்) பங்களிப்பு என்பது கேள்விக்குறியாயிருப்பது நிச்சயம் விமர்சனத்திற்குரியது, கவலைக்குரியது. மாநில அரசுகள் தாய்மொழிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை குறைத்து ஆங்கில வழி கல்வியை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டுகிற சமயத்தில் ஆசிரியர் சங்கங்கள் முயன்று வகுப்பறைகளை மேம்படுத்துவது, ஆசிரியர் மாணவர் உறவு சீராக வைப்பது போன்ற விஷயங்களே தாய்மொழிவழி கல்வியை காப்பாற்றும், குறைந்து வரும் அரசுப்பள்ளிகளின் சேர்க்கையை அதிகரிக்கவும் உதவும்.

கர்நாடகா அரசு கன்னட மொழி செம்மொழியானதை கொண்டாட கன்னட மொழி செவ்விலக்கியங்களை மலிவு விலையில் அச்சிட்டு ஒரு இயக்கமாக மாநிலம் எங்கும் கொண்டு சேர்த்தது. அதேபோன்றதொரு முயற்சியாக ஆசிரியர் மாணவர் உறவினை பேசும் நூல்களை, கல்விக்கான நூல்களை (எ.கா. டோட்டா ஜான், பகல் கனவு, எனக்குரிய இடம் எங்கே, பள்ளிக்கூட தேர்தல், ஆயிஷா) தமிழகத்தின் ஆசிரியர் சமூகத்தின் வாசல் தேடி கொண்டு போய் சேர்ப்பதை ஆசிரியர் சங்கங்கள், முற்போக்கு இயக்கங்கள் இயக்கமாக எடுத்தல் காலத்தின் கடமையாக இருப்பதை இந்தப் புத்தகம் சொல்கிறது, வேண்டி நிற்கிறது. எங்க வாத்தியாருப்பா என்கிற வார்த்தையை பள்ளி விட்டு வந்தும் மரியாதையுடன் சொல்லி மகிழும் அநேகரை ஆசிரியர் சமூகம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். வீட்டில் வறுமையை தாண்டி, குடிகார பெற்றோரைத் தாண்டி, சமூக கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து என பல்வேறு கஷ்டங்களை தாண்டி கல்வியை நாடி வரும் குழந்தை செல்வங்களை பள்ளிக்கூடமும், ஆசிரியர்களும் இரு கை நீட்டி வாரி அணைத்தலே எக்காலத்தும் தேவை. கல்வியே எங்கள் வறுமையை தீர்க்கும் என்ற பெரிதான அரசியலை புரிந்து இருக்கிற சாமானியர்களுக்கு, ஏழைகளுக்கு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யாத சமூகம் பின்னோக்கியே செல்லும்.


இறுதியாக, மணியின் இந்தப் புத்தகம் நமது மனசாட்சி தொட்டு எழுப்புகிற கேள்விகளுக்கு விடை காணும் அதே நேரத்தில், கேள்விகளையாவது தொடர்ந்து எழுப்புதல் சமூகத்தின் கவனத்தில் இப்பிரச்சனையை வைத்தலுக்கு உதவும். ஆசிரியர் சமூகமே, கல்வியாளர் (முழுமையான அதன் பொருளில்) சா. மாடசாமி சொல்வது போல் குழந்தைகள் அகமும் முகமும் மலருகின்ற வகுப்புகள் உள்ள பள்ளிக்கூடங்களை உருவாக்குவதை உறுதிப்படுத்துங்கள், முற்போக்காளார்கள் உங்கள் துணை நிற்பார்கள். கடும் சிரமத்திற்கு இடையிலும் தமிழ்கத்தின் மூலைகளில் எங்கோ இரவு பாடசாலை நடத்தும் அறிவியல் இயக்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற முற்போக்கு இயக்கங்களுக்கு இப்புத்தகம் சமர்ப்பணம். 

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற