இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.
நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?
முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப் பார்க்கின்றனர்.
“சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி, சாத்திரம் சொல்லுமாயின் அது சதியெனக் காண்போம்”
என்ற வரியை இதுவரை மெட்டமைத்து எவரேனும் பாடியதுண்டா? இலக்கிய மேடைகளிலும், இடதுசாரி மேடைகளிலுமே இவ்வரிகள் அமரத்துவம் பெற்றன.
இவர்கள் இப்படியென்றால், தமிழ் தேசியவாதிகளும், திராவிட கட்சிகளும் இவரை புறக்கணிக்கின்றன. தமிழ் இன அடையாளமாக பாரதியைக் கொள்வதில் இவர்களுக்கு என்ன சிக்கல் என்பது எனக்கு புரியவில்லை. (சீமான் தனது தம்பி படத்தில், தனது கட்சியின் பேனர்களில் எல்லாம் உலகம் முழுமைக்கும் பொதுவானவன் நான் என்று சொல்லிய தோழர் சே குவாராவின் உருவப்படங்களை வைத்து ஒரு தனி இன பெருமை பேசுவது விசித்திர முரண்) பாரதி ஒரு நாத்திகனில்லை, ஆயினும்,
“மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்துவெறுங்கதைகள் சேர்த்து – பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் உள்ளீரோ” – எனவும் பாடியுள்ளானே அதை எப்படி பார்ப்பது. அவர் பார்ப்பான் என்பதே அவர்களுக்கு தடை. கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்து பின் தான் அதை மறுத்தானே, அப்பூணூலை இப்போது இவர்கள் அணிந்து கொண்டு பார்ப்பனியம் பேசுகிறார்கள். பார்ப்பனியம் என்பது பிறப்பால் வருவதல்ல, வாழும் வாழ்க்கையால் வருவது. ஏன், தலித்தியமும் அப்படித்தான்.
பாரதியைக் கைகொள்வதில் உள்ள சிக்கல்கள் பலவும்தான். அவன் ஒரு ஆத்திகனா, நாத்திகனா என்பது தொடங்கி நீளும் கேள்விகளுக்கு சான்றோருடைய தமிழுலகம் இதுவரை உருப்படியாக எந்த முயற்சியும் செய்யவில்லை.
பாரதி கணபதி கடவுளிடம் கோருவது,
“மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள்
புற்பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்புற்றன்புட ணிணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் “
…..எல்லா பிணியும் நீங்கி சார்ந்த பல்லுயிரெல்லாம்
இன்புற வாழ்க என்பேன்! இதனை நீ அருள்க.
என்று பல்லுயிர் பாதுகாப்பு கோருகிறான். அதற்காக உழைத்திடவே அருள் கோருகிறான். அன்புடன் என்பதோடு நிற்காமல் அன்புடன் இணங்கி என்னும்போதே பாரதி மகாகவியாகிவிடுகிறான்.
ஒரு இடத்தில்,
“வையகம் காப்பவரேனும் – சிறு
வாழைப்பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யகலத்தொழில் செய்தே – பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர். என்று சமத்துவத்தையும்,
“உடன் பிறந்தார்களைப் போல – இவ்வுலகில்
மனிதரெல்லாருக்கும் இடம் பெரிதுண்டு வையத்தில் – இதில்
எதுக்கு சண்டைகள் செய்வீர்? என்றும் சமாதானம் கோருகிறான்.
இறுதியாக, பாரதியைப் புரிந்து கொள்வதில், பாரதியை பார்ப்பதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு முதற்கட்டமாக தமிழக அரசு அவன் பாடல்களை, கட்டுரைகளை எல்லாம் காலவரிசையில் தொகுக்க வேண்டும். அதற்கு ஒரு பெரு முயற்சி செய்ய வேண்டும். இதுவரை தொகுக்கப்படவில்லை என்பதே பாரதியை ஒரு சார்புடையவனாக சித்தரிக்கும் சதியோ என்று வினவத் தோன்றுகிறது. பாரதி ஒரு மகாகவி என்னும் வெற்று பெருமை பேசி பயனில்லை, அவனை உலகமுழுமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ் இனப் பெருமை என்பது வெற்று உணர்ச்சி முழக்கமாக, இனவெறி தூண்டுவதற்காக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு, பாரதியே கூறியதுபோல்,
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.
- நாம் அதற்கு உழைப்போம்.
Comments