Skip to main content

பாரதியை பயில்வோம்


                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான். 

                நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?

      முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப் பார்க்கின்றனர். 
              “சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி, சாத்திரம் சொல்லுமாயின் அது சதியெனக் காண்போம்” 
       என்ற வரியை இதுவரை மெட்டமைத்து எவரேனும் பாடியதுண்டா? இலக்கிய மேடைகளிலும், இடதுசாரி மேடைகளிலுமே இவ்வரிகள் அமரத்துவம் பெற்றன. 

              இவர்கள் இப்படியென்றால், தமிழ் தேசியவாதிகளும், திராவிட கட்சிகளும் இவரை புறக்கணிக்கின்றன. தமிழ் இன அடையாளமாக பாரதியைக் கொள்வதில் இவர்களுக்கு என்ன சிக்கல் என்பது எனக்கு புரியவில்லை. (சீமான் தனது தம்பி படத்தில், தனது கட்சியின் பேனர்களில் எல்லாம் உலகம் முழுமைக்கும் பொதுவானவன் நான் என்று சொல்லிய தோழர் சே குவாராவின் உருவப்படங்களை வைத்து ஒரு தனி இன பெருமை பேசுவது விசித்திர முரண்) பாரதி ஒரு நாத்திகனில்லை, ஆயினும்,
“மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்து – பல
        கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
     காட்டவும் உள்ளீரோ” – எனவும் பாடியுள்ளானே அதை எப்படி பார்ப்பது. அவர் பார்ப்பான் என்பதே அவர்களுக்கு தடை. கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்து பின் தான் அதை மறுத்தானே, அப்பூணூலை இப்போது இவர்கள் அணிந்து கொண்டு பார்ப்பனியம் பேசுகிறார்கள். பார்ப்பனியம் என்பது பிறப்பால் வருவதல்ல, வாழும் வாழ்க்கையால் வருவது. ஏன், தலித்தியமும் அப்படித்தான்.

        பாரதியைக் கைகொள்வதில் உள்ள சிக்கல்கள் பலவும்தான். அவன் ஒரு ஆத்திகனா, நாத்திகனா என்பது தொடங்கி நீளும் கேள்விகளுக்கு சான்றோருடைய தமிழுலகம் இதுவரை உருப்படியாக எந்த முயற்சியும் செய்யவில்லை. 

       பாரதி கணபதி கடவுளிடம் கோருவது,
    “மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள்
    புற்பூண்டு, மரங்கள்
   யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
          இன்புற்றன்புட ணிணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் “
         
           …..எல்லா பிணியும் நீங்கி சார்ந்த பல்லுயிரெல்லாம்
   இன்புற வாழ்க என்பேன்! இதனை நீ அருள்க.
              என்று பல்லுயிர் பாதுகாப்பு கோருகிறான். அதற்காக உழைத்திடவே அருள் கோருகிறான். அன்புடன் என்பதோடு நிற்காமல் அன்புடன் இணங்கி என்னும்போதே பாரதி மகாகவியாகிவிடுகிறான். 

          ஒரு இடத்தில்,
“வையகம் காப்பவரேனும் – சிறு
வாழைப்பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யகலத்தொழில் செய்தே – பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர். என்று சமத்துவத்தையும்,

       “உடன் பிறந்தார்களைப் போல – இவ்வுலகில்
மனிதரெல்லாருக்கும் இடம் பெரிதுண்டு வையத்தில் – இதில்
எதுக்கு சண்டைகள் செய்வீர்? என்றும் சமாதானம் கோருகிறான்.

       இறுதியாக, பாரதியைப் புரிந்து கொள்வதில், பாரதியை பார்ப்பதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு முதற்கட்டமாக தமிழக அரசு அவன் பாடல்களை, கட்டுரைகளை எல்லாம் காலவரிசையில் தொகுக்க வேண்டும். அதற்கு ஒரு பெரு முயற்சி செய்ய வேண்டும். இதுவரை தொகுக்கப்படவில்லை என்பதே பாரதியை ஒரு சார்புடையவனாக சித்தரிக்கும் சதியோ என்று வினவத் தோன்றுகிறது. பாரதி ஒரு மகாகவி என்னும் வெற்று பெருமை பேசி பயனில்லை, அவனை உலகமுழுமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ் இனப் பெருமை என்பது வெற்று உணர்ச்சி முழக்கமாக, இனவெறி தூண்டுவதற்காக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு, பாரதியே கூறியதுபோல்,
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
       இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
       நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
       வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
       தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
       பரவும் வகை செய்தல் வேண்டும்.
                                         - நாம் அதற்கு உழைப்போம்.




   


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்...