Skip to main content

நியாய விலைக் கடைகளில் பொருட்களுக்கு பதிலாக பணமாக கொடுக்கப்படும் என்பது...



நியாய விலைக் கடைகளில் பொருட்களுக்கு பதிலாக பணமாக கொடுக்கப்படும் என்பது...


நியாய விலைக்கடைகளை அரசு நடத்துவது என்பதே பொருட்கள் வெளிச்சந்தையில் நியாய விலைக்கு கிடைப்பதில்லை என்கிறபோது அரசு பொருட்களுக்கு பதிலாக பணம் கொடுப்பது என்பது வெளிச்சந்தையில் பொருட்களை அதிக விலைக்கு கொடுத்து வாங்கும் மோசமான நிலைக்கு மக்களை தள்ளும். 

வெளிச்சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுவதை குறைக்கவுமே அரசு தொடர்ந்து நியாய விலைக்கடைகளை நடத்தி வருகிறது என்ற நிலையில் தற்போது அரசு பொருட்களுக்கு பதிலாக பணம் தருவதென்பது மேலும் வெளிச்சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுவதை அரசே ஊக்குவிப்பதாக இருக்கும். புதுவையில் தானே புயல் தாக்கப்பட்டபோது புதுவை அரசின் பான்லே பால் அதன் பார்லர்களில் மட்டுமே அதன் உரிய விலையில் கிடைக்க, வெளிச்சந்தையில் ஈவு இரக்கமில்லாமல் ரூ. 40க்கும் ரூ. 50க்கும் விற்றதே இதற்கு சாட்சி. 

நியாய விலைக்கடை என்பது வெளிச்சந்தையில் பொருட்களின் விலைவாசி ஏறும்போதும், சாதாரண மக்களுக்கு அதன் பாதிப்பினை தவிர்த்து மக்களை காக்கும் அருமருந்தாக இருக்கும்போது, பொருட்களுக்கு பணம் என்ற நிலை வந்தால் நாளும் ஏறும் விலைவாசியில் மக்களை காக்க அரசின் வசம் எந்தத் திட்டமும் இல்லை.

நியாய விலைக்கடையில் பொருட்களுக்கு பதிலாக பணம் என்பது அப்பணம் அப்பொருட்களை வெளியில் வாங்குவதற்காகத்தான் பயன்படுகிறது என்பதை எப்படி கணக்கிட முடியும்? ஒரு உடனடி மருத்து சேவை உள்ளிட்ட வேறு தேவைகளுக்கு மக்கள் அப்பணைத்தினை செலவு செய்துவிட்டால், பின் எப்படி பொருட்கள் வாங்குவது? மேலும், புதுவை மாநிலம் போன்று மது அருந்துவது என்பது வீட்டிலுள்ள ஆண்களிடம் ஒரு பெரிய மோசமான பழக்கமாக இருந்து வரும் நிலையில் பொருட்களுக்கான பணம் என்பது மது அருந்துதல் போன்ற விஷயங்களுக்காக செலவிடப்படாமல் இருக்க அரசு உத்தரவாதம் ஏதும் தர இயலா நிலையில், பொருட்களுக்கான பணம் என்பதை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் மக்களுக்கு உரிய பொருட்களின் திருட்டை தவிர்க்க முடியவில்லை என்று சொல்லி அதனால்தான் நேரடியாக அப்பொருட்கள் வாங்குவதற்கான பணத்தை தருகிறோம் என்று சொல்லும் அரசு, இதில் மட்டும் ஊழலினை தவிர்க்க முடியும்  என்பதை எப்படி சொல்கிறது?

நாளும் ஏறும் விலைவாசிக்கேற்ப நாங்கள் பணத்தின் மதிப்பையும் ஏற்றித் தருவோம் என்று அரசு கூறுவதை நம்ப முடியாமல் இருப்பதற்கு, அரசின் மகாத்மா காந்தி 100 நாள் ஊரக வேலைத்திட்டத்தின் கூலித்தொகையே சாட்சி. விலைவாசி விஷம் போல் ஏறும்போதும், ஊரக வேலைத்திட்டத்தின் கூலித்தொகை அப்படியொன்றும் உயரவில்லை என்பது நிதர்சன உண்மை.

நியாய விலைக்கடைகளில் அரசு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரித்தான விலை கொடுத்து கொள்முதல் செய்து மக்களுக்கு பொருட்களை கொடுத்து வருகிறது. இப்போது மக்களுக்கு பொருட்கள் இல்லை பணம் என்றானால், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரித்தான விலை அரசு கொடுக்காது, கொள்முதலும் செய்யாது விவசாயிகளை முற்றாக கைவிடும். ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பாவில் தற்கொலை செய்துகொண்ட 21/2 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் போன்றே நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு விரும்புகிறதா என்பது கேள்வி? விவசாயிகள் விவசாயத்தினை கைவிடும்போது, நாட்டில் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகி, பஞ்சம் பட்டினி போன்ற பாதக சூழ்நிலையினை நாட்டில் அரசே உருவாக்கும். 

பொருட்களை நேரடியாக வாங்குவதற்கு படிப்பறிவோ, தொழில்நுட்பமோ தேவையில்லை. வீட்டிலுள்ள யாரும் வாங்கலாம். ஆனால் வங்கிகளில் அப்படியல்ல. படித்த மக்களே வங்கியில் பணம் எடுக்க மிகவும் சிரமப்படும்போது, கல்வியறிவில்லாதவர்கள், கிராமப்புற மனிதர்களின் நிலை என்ன ஆகும்? மேலும், வங்கியில் கணக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே பணம் கொடுக்க்ப்படும் என்பதால், தினக்கூலிக்கு செல்லும் மக்கள் தங்கள் ஒரு நாள் கூலியினை இழந்து தவிக்கும் நிலைக்கு அரசே தள்ளலாமா?

நியாய விலைக்கடைகள் நகரத்தின் பல முக்கிய பகுதிகளிலும், எல்லா கிராமங்களிலும் என எண்ணிக்கையில் நிறைய இருக்கும். ஆனால், வங்கி வசதிகள் அப்படியில்லை என்கிறபோது மக்கள் பணத்தை எடுக்க மிகவும் சிரமப்பட நேரிடும். மேலும் வங்கி ஊழியர்கள் ஏற்கெனவே அதிகமான வேலை பளுவில் தவிக்கும்போது, இந்த வேலையும் சேர்ந்தால், சேவை பாதிக்கப்படாதா? அரசு இதற்கு என்ன பதில் தரப்போகிறது. தன் வீட்டிற்கு அருகில் ரேஷன் கடைகள் இருக்குபோது தொலைவில் இருக்கும் வங்கிகளுக்கு போ என்று அரசு சொல்வது பொருத்தமற்றது. சமீபத்தில் சந்தைபுதுக்குப்பத்தில் நடந்த சாதி மோதலுக்குப் பின்னர் தலித் பகுதியில் தனியே ரேஷன் கடை துவக்கப்பட்டு அவர்களின் பசியை போக்கியது அரசு. இதுபோன்ற புறசூழ்நிலைகளில் அரசின் இத்திட்டம் தோல்வியில் முடியும் என்பது உறுதி. 

மாதாமாதம் தரவேண்டிய முதியோர் பென்ஷன், தியாகி பென்ஷன் போன்றவையே பல நேரங்களில் காலதாமதம் ஆகின்றபோது, ரேஷன் பணம் தாமதமாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? மத்திய அரசிடமிருந்து உரிய நிதி கிடைக்காமல் பல்வேறு மாநில அரசுகள் சிரமப்பட்டு மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் பாதிப்பு அடைவதை நாம் நன்றாக அறிவோம். புதுவை அரசு ஒவ்வொருமுறையும் நிதி கிடைக்க எவ்வளவு சிரமப்பட்டு, பல சமயங்களில் அரசு ஊழியர்களின் சம்பளம் கூட பல மாதங்கள் தாமதமாகின்ற நிலையில், ரேஷன் பொருட்களான பணம் என்ற திட்டத்தின் நிலை என்னவாகும்? 

தலித் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டம் போன்றவற்றின் நிதி கூட வேறு திட்டங்களுக்கு திருப்பிவிடப்படும்போது, இத்திட்டத்திற்கான நிதியும் திருப்பிவிடப்படாது என்பதற்கு அரசு உத்தரவாதம் தருமா?

நியாய விலைக்கடைகளில் இன்னின்ன பொருட்கள் இன்னின்ன நாளில் கிடைக்கும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு மக்களுக்கு சேவை கிடைக்கின்றபோது, வங்கிகளில் எப்போது பணம் இடப்படும் என்பதற்கு ஏது அறிவிப்பு?, என்ன ஏற்பாடு என்பதை அரசு தெளிவுப்படுத்திய பின்னரே திட்டத்தை அமுல் செய்ய வேண்டும். 

ஆதார் கார்டுகள் கொண்டு பயனாளிகள் அடையாளம் காணப்படுவர் என்று மத்திய அரசு சொல்வது இன்னும் ஆதார் கார்டுகள் நாடு முழுவதும் சென்றடையவில்லை, ஏன் வடகிழக்கு மாநிலங்களில் துவங்கவேயில்லை என்னும் போது, அரசின் கூற்று பம்மாத்தாகிறது. புதுவையில் உரித்தான பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் அட்டைகள் போய் சேரவில்லை என்பதும், போலியான சிவப்பு ரேஷன் அட்டைகள் குறையவில்லை என்பதும் இன்றும் உண்மையாக இருக்கும்போது பொருட்களுக்கான பணம் என்ற திட்டம் போலியானது, உரிய மக்களுக்கு போய்ச் சேராது என்பதும் தெளிவு. 

அரசு மக்களுக்கு பொருட்கள் கொடுக்காமல் பணம் கொடுக்கும்போது, அது பொருட்களை விவசாயிகளிடமிருந்து வாங்கவேண்டிய தேவையில்லை. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை இனி அரசு வாங்காது. அப்போது FOOD CORPORATION OF INDIA வின் கிடங்குகளில் இனி எம் மக்களுக்கு கிடைக்காத உணவு தானியங்கள் வழக்கமாக சாப்பிட்டு வரும் எலிகளுக்கும் இல்லை.  ஏனென்றால் FCIதான் மூடப்படுமே. பேரிடர் காலங்களில் (காத்ரீனா புயல் தாக்கிய போது கையறு நிலையிலிருந்த அமெரிக்க அரசு போல) நமது அரசும் கைகட்டி வேடிக்கை பார்க்கும். 

இந்த விஷயங்கள் அரசுக்கு தெரியாததல்ல. திட்டமிட்டே மத்திய கார்ப்பரேட் அரசு இதை செய்துவருகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தனியார் மருத்துவமனைகள் துவங்கிய போது அதற்கு இலவசமாக 99 வருஷத்திற்கு நிலம் தந்து அது இறக்குமதி செய்யும் மருந்துகள், உபகரணங்களுக்கு வரிவலுக்கு என சலுகைகளை அவர்கள் தங்கள் மருத்துவமனையின் படுக்கைகளில் 25% படுக்கைகளை சமூகத்தில் அடித்தள மக்களுக்காக ஒதுக்க வேண்டும் என்ற சரத்தின் கீழ் தந்தது. ஆனால் நிலைமை என்ன என்பது நாம் அப்போலோ, மியாட் உட்பட பகாசுர மருத்துவமனைகளை பார்த்தாலே தெரியும். எங்களால் உங்களுக்கு சுகாதார வசதிகள் செய்து தர இயலாது, ஆனால் உங்களுக்கு தனியார் மருத்துவமனைகளை திறக்க அனுமதி தந்து அவர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள் என முதலில் மக்களுக்கான அடிப்படை உரிமையான சுகாதாரத்தை அரசு கைவிட்டுவிட்டது. 

பல்வேறு போராட்டங்கள், பல வருட கோரிக்கைகளுக்கு பின்னர் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. அதில் மேலும் அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதற்கு பதிலாக தனியார் பள்ளிகளில் 25% சதமான இடங்களை சமூக அடித்தட்டு மக்களுக்காக என ஒதுக்கி கல்வி என்னும்  மக்களின் அடிப்படை உரிமையையும் அரசு கைவிட்டுவிட்டது.

இதோ அடுத்த அடிப்படை உரிமை பறிப்பாக ரேஷன் பொருட்களையும், ரேஷன் என்ற ஏற்பாட்டினையும் அரசு காவு கொடுக்க தயாராகிவிட்டது. டெல்லி மாநிலம் துவங்கி படிப்படியாக பல்வேறு மாநிலங்களில் சோதனை ஓட்டம் பார்த்து எங்கள் ஊர் புதுவையிலும் வந்துவிட்டது. ரேஷனில் இனி மண்ணெண்ணைக்கு பதிலாக பணம் கொடுப்பார்களாம். அதுவும் அவர்களின் வங்கி கணக்குகளில் இடப்படுமாம். நமது அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள கார்பரேட் கூலி பிரனாப் முகர்ஜி வகையறாக்கள் சந்தோஷப்படுவார்கள். 

நண்பர்களே, நாமும் நமது பிரதமர் மௌன(கபட)முனி திருவாளர் மன்மோகன் சிங் போல் அமைதி காப்பது சரியா?

குறிப்பு : இன்று 20.07.2012 புதுவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிட்டத்தட்ட 30 இடங்களுக்கும் மேலான ரேஷன் கடைகள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுவையில் இதே விஷயங்களை கண்டித்து தமிழகத்தில் தனியாக சிபிஎம் கட்சியும், புதுவையில் இடதுசாரிகள் கூட்டாகவும் மறியல் செய்ய உள்ளனர். 


Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற