Skip to main content

என் "இனிய" தமிழ் மக்களுக்கு..........

நவம்பர் 14: உலக டயாபடீஸ் தினம்

என் "இனிய" தமிழ் மக்களுக்கு..........
எஸ் வி வேணுகோபாலன்

நவம்பர் 14, குழந்தைகள் தினம் மட்டுமல்ல, உலக 'டயாபடீஸ் தினமும் கூட. டயாபடீஸ் என்ற சொல்லுக்கு சர்க்கரை நோய் என்று எழுதுவதற்குக் கைவர மறுக்கிறது. ஏனென்றால், சர்க்கரை நோய் என்பது முழுதும் சர்க்கரை தொடர்பானதுமல்ல, அந்தப் பிரச்சனை நோயும் அல்ல. நீரிழிவு பிரச்சனை என்று சொல்வது பரவாயில்லை போல் தோன்றுகிறது. பெயர் பொருத்தம் ஒருபுறம் இருக்கட்டும். விஷயத்திற்கு வருவோம்.



டயாபடீஸ் பிரச்சனை உள்ளவர்கள் பற்றிய பேச்சு ஊடகங்களில் எப்போதும் இருப்பது தான். இந்தப் பொருள் மீது ஒரு லட்சம் நகைச்சுவை துணுக்குகளாவது எழுதப்பட்டிருக்கக் கூடும். ஆனால், உலக தினமாக அது அனுசரிக்கப்படும் வேளையில், இதன் மீதான கவன ஈர்ப்பு அதிகமாக எழுகிறது. அப்படி பேசப்படுவதில் நல்ல அம்சங்களும் உண்டு. மிரட்டல் வேலைகளும் உண்டு.

இப்படியான ஒரு உலக டயாபடீஸ் தினத்தன்று, தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வந்தது. காட்சியின் துவக்கத்தில், ஒரு தேக்கரண்டியிலிருந்து சர்க்கரை கொட்டப்படுகிறது. அது கொட்டக் கொட்ட மலையாகக் கீழே நிறைகிறது. பின்னர், அது கிராபிக்ஸ் வேலை மூலமாக ஒரு உடைவாளாக மாறுகிறது. அந்தக் காலத்துப் படங்களில் எம்.ஜி.ஆர் கையில் மின்னுமே அது மாதிரி மின்னியபடி, சரக்கென்று எங்கோ போய் குத்துகிறது. அதுவரை, என்ன நடக்கப் போகிறது என்று பார்வையாளர்களுக்குத் தெரியாது. வேறெங்கே, (பார்ப்பவர்களின்) இதயத்தில்தான் அது வந்து சொருகி நிற்கிறது. என்னமோ ஏதோ என்று நீங்கள் உற்றுப் பார்க்கும்போது, பின்னணியிலிருந்து ஒரு குரல் உருக்கமாகக் கேட்கிறது: "நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியா?" "ஆம்" என்ற பதிலை அதுவாக ஊகித்துக் கொண்டுவிடுகிறது. இப்போது குரல் கொஞ்சம் கனிவான மிரட்டலாக ஒலிக்கிறது: 'அப்படியானால், உங்களுக்கு மாரடைப்பு வரலாம்'. நீங்கள் போதுமான அளவு பயத்திற்கு ஆளாக்கப்படுவதற்கான அவகாசம் கொடுத்துவிட்டு அந்தக் குரல் இப்போது உங்களுக்கு ஒரு அன்பு ஆலோசனை வழங்குகிறது. இன்ன மருத்துவமனைக்குச் சென்று உங்களுக்கு இருதய பரிசோதனை செய்து கொண்டு உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். பெரிய தனியார் மருத்துவமனை ஒன்றின் விலாசம், மற்ற விவரங்கள் திரையில் ஓடுகின்றன. விளம்பரம் முடிந்துவிடுகிறது. திரையில், அடுத்து மீண்டும், விட்ட இடத்தில், 'சிரிப்போ சிரிப்பு' பகுதியில் நகைச்சுவை காட்சி தொடர்கிறது. நீங்களோ சோகக் காட்சியின் பாத்திரமாகி உட்கார்ந்திருக்கிறீர்கள்...

மாரடைப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், தேவையானவர்கள் இருதய பரிசோதனை செய்து கொள்ளலாம். அது வேறு. ஆனால், ஏதோ டயாபடீஸ் இருந்தாலே மாரடைப்பு ஏற்படும் என்று மிரட்டுவது ஆரோக்கியமான மருத்துவ பிரச்சாரம் அல்ல, வியாபார வன்முறை. எச்சரிக்கை எடுத்துக் கொள்வது வேறு, பொழுதன்றைக்கும் நடுநடுங்கிக் கொண்டிருப்பது வேறு. எனவே, நீரிழிவு பிரச்சனை இருப்போர்களுக்கு உதவுவது என்பது உடல்நலம் சார்ந்த உருப்படியான குறிப்புகள் தானே தவிர, அர்த்தமற்ற அச்சமூட்டுதல் அல்ல.

நீரிழிவு என்பது ஒரு குறைபாடு. உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் சுரக்கும் இன்சுலின் உற்பத்தி போதாமை அல்லது பயன்பட முடியாத தன்மை சார்ந்த பிரச்சனை அது. திடீர் எடைக்குறைவு, உடல் சோர்வு, உறக்க ஏற்பாட்டில் சிக்கல் போன்றவை சிலநேரம் அறிகுறிகளாக அமையும். நீரிழிவு வம்சாவழியாகவும் வரக்கூடும். நம்மிடமிருந்தே கூட துவங்கக் கூடும். உரிய பரிசோதனை முறைகள் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதலாக உள்ளதா, குறைவாக உள்ளதா என்று அறிந்து மருத்துவர் வழிகாட்டுதலோடு இதனை எதிர்கொள்ளலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும், நம் வாழ்க்கையே இதோடு சுவாரசியமற்றுப் போய்விட்டது என்று நொந்துவிட வேண்டியதில்லை.

இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுவதற்கு உணவு உட்கொள்ளும் முறை, கால இடைவெளி போன்றவற்றைக் கவனித்துக் கொண்டாலே போதும். மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை உரிய உணவை உண்பது அவசியம். சாப்பிட்டு 1 ½ மணி நேரம் பொறுத்துத் தான் இன்சுலின் உற்பத்தி நடக்கும். அடுத்த 1 ½ மணி நேரத்திற்கு அதுபற்றிய கவலை இல்லை. பார்த்துக் கொள்ளும். பிறகு மீண்டும் அடுத்த சுழற்சியைத் துவக்க சாப்பிட வேண்டும். அதற்காகத் தான் இந்த 3 மணி நேர ஏற்பாடு. இதை விட்டுவிட்டு நீண்ட இடைவெளி விடுவதால் தான் சோர்வு முதற்கொண்டு பல பிரச்சனைகள் உண்டாகிறது.

தங்களுக்கு உகந்த, தனக்கு ரசிக்கும்படியான சுவையான உணவை உரிய விகிதத்தில் மகிழ்ச்சியோடு சாப்பிடும் பாக்கியம் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு உண்டு. மேற்சொன்ன ஆலோசனையைக் கணக்கில் கொண்டால் போதும். மருத்துவரது வழிகாட்டுதலை முறையாகக் கடைப்பிடித்து வந்தால் அஞ்சுவதற்கு எதுவுமில்லை.

ஆனால் நடைமுறையில் பார்ப்பதென்ன. ஒன்று, எதையுமே தொட பயந்து, உளரீதியாகவும் சோர்வு, உடல்ரீதியாகவும் பிரச்சனை என்று வாழ்வோர் ஒரு சாரார். இதற்கு நேரெதிர் துருவமாக, இன்னொரு சாரார்! எது பற்றியும் கவலையில்லாமல், வீட்டிலும் சரி, விருந்துகளிலும் சரி, சும்மா பிளந்து கட்டுவது, அப்புறம் இஷ்டத்திற்கு மாத்திரைகளை விழுங்கிவிட்டால் சரிசெய்து கொண்டுவிடமுடியும் என்றிருக்கின்றனர்.

இரண்டுமே சரியான வழிமுறை கிடையாது. சொல்லப் போனால், ஒரு முறைப்படுத்தப்பட்ட அட்டவணைப்படி உணவு, வாழ்க்கை முறை அமைத்துக் கொண்டுவிட்டால், சாதாரண மனிதர்களைவிட, நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்க்கையினை அனுபவிக்கமுடியும். பச்சை காய்கறிகள், அனுமதிக்கப்பட்ட பழவகைகளை நிறைய எடுத்துக் கொண்டால், பசி அடங்குவதோடு புத்துணர்ச்சியும் ஏற்படும்.

சர்க்கரை தானே சாப்பிடக் கூடாது, என்று அன்பர்கள் சிலர் டீக்கடையில் எண்ணெய் பிழியப் பிழிய பஜ்ஜி, சமோசா என்று வெளுத்து வாங்குவார்கள். பிறகு நல்ல பிள்ளையாக, 'வித்தவுட் சுகர்' பவ்வியமாகச் சொல்லி சர்க்கரையற்ற தேநீர் வாங்கி உறிஞ்சிக் கொண்டிருப்பார்கள். கலோரி அடிப்படையில் பார்த்தால், ஒரு கிராம் எண்ணெய், ஒரு கிராம் சர்க்கரையைப் போல் இரண்டு மடங்கு கலோரிகளை வழங்கும். சிக்கல் அதிகமாகத் தான் ஆகும். இதைச் சொன்னால், சிலர் ஒழுக்கமாக எண்ணெய் ஊற்றாத தோசை கேட்டு வாங்கிக் கொண்டு, தொட்டுக் கொள்ளும் மிளகாய்ப் பொடியின் தலையில் ஒன்றுக்கு மூன்று பங்கு எண்ணெய் பொழிந்து சேர்த்துக் கலக்கிக் கொண்டிருப்பார்கள். இதில் எல்லாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நீரிழிவு பிரச்சனை தோன்றுவதற்கோ, ஏற்கெனவே இருப்பது சிக்கல் ஆவதற்கோ மன உளைச்சல் முக்கிய காரணி என்று சொல்லப்படுகிறது. பதட்டமான வாழ்க்கை முறை, பகிர்ந்து கொள்ளாத உணர்வுகள், சந்தேகமும் அச்சமும் நிழலாடிக் கொண்டிருக்கும் சிந்தனைப் போக்கு....போன்றவை இதற்கு ஊட்டச்சத்து போடுகின்றன. தொட்டதற்கெல்லாம் அலுப்பும், சலிப்பும், நிம்மதியற்ற தொடர் அலைக்கழிப்பான எண்ண ஓட்டங்களும் உடல்நல பாதுகாப்பிற்கு எதிர்த்திசை பயணத்தில்தான் இட்டுச் செல்லும். நம்மளவில் தெளிவு பெற்று மாற்றி அமைத்துவிட முடிகிற விஷயங்களுக்கு ஒருவித அணுகுமுறையும், சமூக ரீதியான பரந்த ஏற்பாட்டில் தொக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு அதற்குரிய அணுகுமுறையும் மேற்கொள்வதுதான் இறுக்கமற்ற அன்றாட வாழ்க்கை வாழ உதவும். இந்த அம்சம் உளைச்சலைத் தவிர்க்கும் பொதுவான உபாயம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

யோசித்துப் பார்த்தால், இந்தியாவில் நவம்பர் 14 குழந்தைகள் தினமாகவும் அமைவதால், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் குழந்தைகள் போல குதூகலமாகவே இந்த தினத்தை அனுசரிக்கலாம்.


-மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன், எம்.டி..(ஓமியோபதி) அவர்களது ஆலோசனைக் குறிப்புகளிலிருந்து

தோழர்களே, இது என்னுடைய 25வது பதிவு. நான் எதிர்பார்த்தது போலவே என் முதல் பதிவும் இதுவும் தோழர். எஸ்.வி.வி. அவர்களுடையது. என்னுடைய எழுத்துக்கள் அச்சேறுவதை என்னை விடவும் இவரே மிகவும் ஆர்வம் காட்டுகிறார். நன்றி தோழரே.

Comments

Anonymous said…
அன்புள்ள ராம்கோபால்,
இன்று உங்கள் பிளாக் பார்த்தேன். தீக்கதிரில் நான் எழுதிவரும் சில அறிவியல் செய்திகள் அதில் இடம் பெற்றிருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். பிரகாஷ் காரத் நேர்காணல் மிகச் சிறப்பாக இருந்தது.
வாழ்த்துக்கள்.
கே. ராஜு

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்

புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்கள ாக இருக்கிறார்கள். அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு. தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடு...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்...