Skip to main content

ஆங்கில செய்தி சேனல்கள்




நேற்று முன் தினம் ஏதேச்சையாய் TIMES NOW சேனலை ரிமோட்டில்திருப்பியபோது (அப்பாடா, அர்னாப் கோஸ்வாமி இல்லை), வழக்கம்போல ஒரு"breaking news" ஓடிக்கொண்டிருந்தது. "Democracy at low" என்ற தலைப்பிட்டு ஒருபெண்மணி கையில் மைக்கோடு கத்திக் கொண்டிருந்தார்.

விஷயம் இதுதான். கேரள மாநில மேதகு(!) ஆளுநர் அவர்களுக்கு சௌதி யில் இருந்து ஒருகொலை மிரட்டல் வந்ததாம். 24 மணி நேரத்திற்குள் அவர் கொலைசெய்யப்படலாம் என்று. சி.பி.எம் கேரள மாநில செயலர் தோழர் பினராயி விஜயன்மீது CBI விசாரணை நடத்த உத்தரவிட்ட அந்த அதிநியாய செயலுக்குத்தான் இந்தமிரட்டலாம். ஒரு ஆளுநர் மீது கொலை மிரட்டல் என்பது உயர்ந்த இந்தியஜனநாயகத்திற்கு எத்தனை பெரிய அவமானம் என்று திரும்ப திரும்ப அந்தபெண்மணி கிட்டதட்ட அலறிக்கொண்டிருந்தார். ஆங்கில செய்தி சேனல்கள் இப்படிப்பட்டவர்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். மைக்கை கையில் வைத்துக்கொண்டு ஏன் கத்துகிறார்கள் என்பது என் சிற்றறிவுக்கு மட்டும் ஏனோ எட்டமாட்டேன் என்கிறது.


என்னங்க, என்ன சொல்ல வர்றீங்க? "ஆயிலா" புயலில் வங்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சிக்கித் தவிக்கையில் அந்த மாநில முதலமைச்சர் நிவாரணத்திற்காக ஒரு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டும்போதும் வரமாட்டேன்என்று அராஜகமாக மறுத்தும், மத்திய அரசின் நிவாரண நிதியை மாநில அரசுக்குதரக்கூடாது என்ற‌ மம்தா பானர்ஜியின் செய்கைகளும் ஜனநாயகத்திற்குஆபத்தில்லையா? பல லட்சம் கோடி ஊழல், "சினிமா டிக்கெட்" போல டென்டர் தரப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றமே சொன்னபோதும் மீண்டும் ஊழல் செய்த அமைச்சருக்கே அந்தத் துறையினை தந்ததும், அந்த ஊழல் குறித்து விசாரணையே தேவையில்லை ன்றும் சொன்ன இந்நாட்டின் மிக நல்லவர் மன்மோகனின்செய்கை ஜனநாயக விரோதமில்லையா? தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முன்னமே அமெரிக்காவின் பிரதிநிதி இந்திய மாநில அரசியல்வாதிகளை சந்தித்து பேசியது என்ன ரொம்ப நல்லதா? கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கைவரையில் பின்னுக்கு இருந்த வேட்பாளர் பங்குசந்தை சிதம்பரம் இறுதியில் ஜெயித்ததாக அறிவித்தது என்ன வகை? (குறிப்பு : ஒரு மிக ஆபத்தான விஷயம் பலரும் பேசாதது : போட்டியிட்டு தோற்ற ராஜ. கண்ணப்பன் இதுவரைவழக்கேதும் தொடுத்ததாக தெரியவில்லை). அட போங்க, நீங்க எப்பவும் இப்படித்தான், ஏதேதோ பேசிக்கிட்டு.

இதுதான் அவைகளின் வர்க்கப்பாசம். இடது சாரிகள் நடந்து முடிந்த தேர்தலில்ஒரு சரிவை சந்தித்தபோது மிக அசிங்கமாக எக்காளம் செய்து கொண்டாடியது இந்த சேனல்கள்தான். ஒரு சேனலி ல் விவாதத்திற்கு வந்த ஒரு மேதை "ஆகா, கம்யூனிசம் முன்பு கேரளா, கொல்கட்டா, சீனாவில்தான் இருந்தது, இப்போது சீனாவில் மட்டும்தான்" என்று தனது மேதாவித்தனத்தை உரைத்தபோது அந்த panelists எல்லாம் ஆமாம் சாமி போட்டார்கள். அமெரிக்க நாடுகள் பலவற்றிலும், சமீபமாக ஐஸ்லாந்திலும் இடதுசாரிகள் ஜெயித்திருப்பது இவர்களுக்குதெரியாததல்ல. இப்போது மட்டுமல்ல, 2004 தேர்தலில் இடதுசாரிகளின்தலைமையோடு ஆட்சி அமையவிருக்கும் தருவாயில் பங்கு சந்தை வீழ்ச்சிகண்டபோது சீதாராம் யெச்சூரியே காரணம் என்று புது கண்டுபிடிப்பை செய்தவர்கள் இவர்கள். உலகெங்கும் பொருளாதார வீழ்ச்சி கண்டப்பொழுதில் பங்குசந்தை 20,000 புள்ளிகள் சுருண்டு 9000 புள்ளிகள் கண்டபோது இவைகளின் மௌனம்பெரும் சத்தமாக இருந்தது. தற்கொலை செய்துகொண்டு மந்தையாய் மந்தையாய் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் மடிந்த வேளையில் வேறு வழியில்லாமல்அரை மனதோடு சென்ற அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தபோது பங்குச்சந்தை வீழ்ச்சி கண்டதே, அப்போது பங்கு சந்தை என்பது இந்நாட்டின் உழைப்பாளிகளுக்கு எதிரானது என்பதை இவ்வூடகங்கள் சொன்னதா? அதுமட்டுமா இந்த கடன் தள்ளுபடி என்பது நாட்டின் வளர்ச்சிக்கும் , நாடு குறித்தஅயல் நாடுகளின் பார்வைக்கும் கேடு விளைவிக்கும் என்றொரு கண்டுபிடிப்புசெய்து அதை விவாதம் என்ற பெயரில் பல மேதாவிகளை வைத்து பிரச்சாரமும்செய்து மகிழ்ந்தன. வங்கிகள், LIC, பொதுத்துறை நிறுவனங்கள், ஓய்வூதியம் எனஅனைத்தும் தனியார்மயம் என்று மன்மோகன் இப்போது அறிவித்திருப்பதற்கு பங்குச்சந்தையும், இந்த சேனல்களும் அல்லாது மகிழ்ந்தவர்கள் யார்?

நீங்கள் இதைப் படித்துவிட்டு CNN-IBN என்றொரு செய்தி சேனலில் இரவு 10 மணிக்கு வரும் சகாரிகா போஸ் என்பாரை கொஞ்ச நாள் கவனியுங்களேன். இடது சாரிகள் என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும்போது அவர் கண்களில்ஒரு வெறுப்பு, வாயில் ஒரு ஏளனம் என்பது நிச்சயமாய் இருக்கும். நந்திகிராம் பிரச்சனையை இவர்கள் காட்டியபோது ஒவ்வொரு நாளும் இந்தப் பெண்மணியின் கண்ணில் ஒரு குரூரம் தென்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். இவர்கள்தான் இப்போது இந்த மண்ணில் படித்த மற்றும் குறிப்பாக கணிணிதுறைசாப்ட்வேர் இளைஞர்களுக்கும் உலக அறிவினை சொல்பவர்கள். 2007ல் சிறந்தஅரசியல்வாதி என்று NDTV பரிசளித்த அத்வானி இன்று என்ன ஆனார்?

நண்பர்களே, இதுதான் லெனின் சொன்னது, "ஆளும் வர்க்கத்தின் குணத்திற்கேற்பவே அரசும், நீதியும் இருக்கும்". ஊடகங்களும் இப்படித்தான். காந்தியை ஒரு பைத்தியக்காரன் என்று வர்ணித்த TIMES பத்திரிகை இன்றுஅவரை மாமனிதர் என்று சொல்கிறது. அப்படியென்றால், திருந்திவிட்டதா என்ன? இல்லை, அது காலத்தின் கட்டாயம். மாறி இருக்கும் சூழலின், அரசியலின் விளைவு. காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்ஸே ஒரு பிராமணன் என்பதை அன்றும் இன்றும் தமிழுலகத்தின் பல முன்னணி பத்திரிகைகள் சொல்வதில்லை. எங்கே, பல இலட்சம் இஸ்லாமிய சகோதரர்களை எழுத்தில் வடிக்க இயலா குரூர கொலை வெறியாட்டம் (டீஸ்டா சீதல்வாத் COMMUNALISM COMBAT பத்திரிகையில் ஒரு இடத்தில் எரிந்து முடிந்த போயிருந்த ஒரு மண்டையோட்டினை கையில் சூலம் கொண்டிருந்த சிலர் ஒருவருக்கொருவர் காலால் உதைத்து விளையாடினர் என சொல்கிறார்) நடத்திய மோடிக்கு அடுத்த பிரதமராகும் அருகதை இருக்கிறது என்றும், அவர் திறமையான வகையில் ஆட்சிசெய்கிறார் என்றும் மகுடம் சூட்டுகின்றன இச்சேனல்கள். (குஜராத் மாநிலத்தில் 110 பள்ளிகளில் தேர்வு விழுக்காடு பத்துக்கும் கீழ் என்பது ஒரு செய்தி).

இந்திய நாட்டின் மிக மதிப்புமிக்க விருதான பத்மஸ்ரீ விருதினை ஏற்க மறுத்த சாய்நாத் சொன்னது, "பத்திரிகையாளர்களுக்கு அரசு விருது கொடுப்பதும், அதைஅவர்கள் ஏற்பதும் சரியல்ல. அது எந்த ஒரு கம்பெனியின் கணக்குகளை நாம் கணக்கீடு செய்கிறோமோ அந்தக் கம்பெனியிடமே விருதினை பெறுவதற்கு சமம்". இந்த விருதினை ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத், சேகர் குப்த போன்ற இதர் ஏற்றனர். விதர்பா மாநிலத்தின் விவசாயிகளின் போராட்ட குழு (விதர்பா ஜனன்ஆந்தோலன் சமிதி), "தோழர் சாய்நாத் விருது பெறுவது என்பது எங்களுக்கு மிக்கமகிழ்ச்சியே, ஆனாலும் எந்த அரசின் நாசகர கொள்கைகளின் மூலம் 1,82,000 விவசாயிகளை தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டனரோ அந்த அரசின் விருதினை அவர் எப்படி ஏற்க முடியும்?" என்று சொன்னது. வழக்கம்போல் ஊடகங்கள் சாய்நாத் விருது பெற மறுத்த செய்தியை சொல்லாமல், அந்தபரிசளிப்பு விழாவிற்கு தோனி வராதது ஏன் என்ற ஒரு பெரிய ஆராய்ச்சியில்இருந்தனர்.




Comments

kamaraj said…
பை நிறைய்ய புத்தகங்களையும்,
வாய் நிரைய்ய புகையையும்,
மனசு நிறய்ய அன்பையும் சுமந்துகொண்டு
பார்க்கிறவர்களுக்கெல்லாம் வாரிக்கொடுக்கும்
அந்தக்கருத்தப் பொரியாளனுக்கு நன்றி.
ராம்கோபால், நான் காமராஜ்.
உங்கள் வலைப்பக்கம் வந்தேன்
முழூசும் படிக்கவில்லை, படிப்பேன்.
நமக்கு நிறைய்ய வேலை இருக்கிறது.
ramgopal said…
நன்றி நண்பருக்கு. அந்தக் கருத்த பொரியாளனோடு கழித்த நாட்கள் மறக்க முடியாதவை. நன்றி அவருக்கும். மீண்டும் வரவும்.
ramgopal said…
நன்றி என்னைப் எப்போதும் ஊக்குவிக்கும் எஸ்.வி.வி. அவர்களுக்கும்