Skip to main content

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன்.

அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன்.

வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு.

பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங்களின் பங்குகள் வென்மணி படுகொலை நிகழ்வுக்கு இரு தசாப்தங்களுக்கு முன்பே தொடங்குகையில் திரு.கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் பங்கு படுகொலைக்கு பின்பான காலங்களில் தொடங்குகிறது. செங்கொடி இயக்கத்தின் வரலாறு பல புத்தகங்களில் விரிவாக வந்துள்ளது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு மூலமாக பல விஷயங்கள் வந்துள்ளன. இதில் அநேகமாக திராவிட இயக்கத்தின் பங்களிப்பினை மிக விரிவாக சொல்லியிருக்கும் புத்தகம் அநேகமாக ஒரே புத்தகம் இது என நினைக்கிறேன். அவ்வகையிலும் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கீழதஞ்சையில் பண்ணை பெருந்தலைகளை, மிட்டா மிராசுகளை, மைனர்களை, தலித் மக்களை அடிமைகளாக வைத்திருந்த ஆண்டைகளை, வெண்மணி படுகொலைக்கு சிறிது காலம் முன்பாக வரையிலும் செங்கொடி மற்றும் திராவிட இயக்கங்களின் விவசாய தொழிலாளர் சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வந்தன. இரண்டு இயக்கங்களும் ஒடுக்கப்பட்டு அடிமைகளாக வைத்திருந்த மக்களிடம் சுயமரியாதை பாய்ச்சி, கிளர்த்தெழ செய்து கூலி உயர்வு, மனித உரிமை கோருதல் என்பவைகளை பெற்றுத் தந்து வந்தன. ஒன்றுபட்ட நாகை மாவட்டத்தில் இரண்டு இயக்கங்களின் விவசாய தொழிலாளர் சங்கத்திலும் தலித் மக்கள் பெருந் நம்பிக்கை கொண்டு அந்த இயக்கங்களின் வழிகாட்டலில் பெரும் போராட்டங்களை, கலகங்களை நடத்தினர். ஆண்டைகள் பெருத்த ஏமாற்றத்தையும், அவமானத்தையும் சந்தித்து வேறு வழியின்றி சில உரிமைகளை வழங்க நிர்பந்திக்கப்பட்டனர். தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் கடின உழைப்பில் செழித்து படர்ந்த செங்கொடி இயக்கம் தொடர்ந்து விவசாய மக்களின் கூலி உயர்வு, சங்க உணர்வு மற்றும் மனிதநேய வாழ்விற்கான பெரும் போரை தொடர்ந்தபடி இருக்க, அதுகாறும் செங்கொடி இயக்கத்தோடு தோளோடு தோள் நின்று உழைத்திட்ட திராவிட இயக்கத்தின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிலைப்பாடு பெரியார் அவர்கள் பச்சைத் தமிழன் காமராஜர் அவர்களைத் தேர்தல் சமயத்தில் ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்த பொழுதில் சிக்கலில் ஆழ்ந்தது.

பெரியாரோடு இந்த ஒரு கருத்தில் உடன்பட மறுத்து அதுகாறும் பெரியாரின் சீடராக திராவிடர் கழகத்தின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் இருந்த தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் செங்கொடி இயக்கத்தின் கீழான விவசாய தொழிலாளர் சங்கத்தோடு சேர்ந்து தொடர்ந்து இயக்க வேலைகளில் ஈடுபடுகிறார். அண்ணாதுரை அவர்களும், பெரியார் அவர்களும் காங்கிரஸ் உறவு கொள்ள, கீழத்தஞ்சையின் ஆண்டைகள் இயல்பில் காங்கிரஸாராக இருக்க, சிக்கலில் திராவிடர் கழக விவசாய தொழிலாளர் சங்கம் இருக்க, செங்கொடி இயக்கத்தின் வளர்ச்சி மேலும் கூடுகிறது. இதில் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் தோழர் எவ்வாறு செயல்பட்டார் என்பதோடு பெரியாரிடமிருந்து பெற்ற சுயமரியாதை கருத்துகளும் செங்கொடி இயக்கத்தின் மார்க்சிய கோட்பாடுகளையும் களத்தில் இணைத்து பல வெற்றிகளை போராட்டக் களத்தில் பெற்ற நிகழ்வுகளே இப்புத்தகம். அதை நூலில் இருந்து நீங்கள் படித்து உணர முடியும்.

நூல் ஒரு பெரும் பீடிகையோடு தொடங்குகிறது. அது வெண்மணீ படுகொலை உண்மைக் காரணம் என்ன என்பதாக இருக்கிறது. ஒரு பிரிவு தொடர்ந்து இது வர்க்கப் பிரச்சனை என்பதைவிட வருணபேத எதிர்ப்பே இருக்கிறது என்றே சொல்லி வருகின்றனர். செங்கொடி இயக்கம் மிக பலமாக இது வர்க்க போரே என்று சொல்லிவந்த போதிலும் வர்க்க பேதத்தோடு வருண பேதமும் பிரச்சனைக்குள்ளாக்கினோம் என்றே சொல்லி வருகிறது. பி.சீனிவாசராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறும் தென்பரை முதல் வெண்மணி வரை நூற்கள் அதை மிக சரியாக சொல்கின்றன. அதையேதான் இந்நூலில் தோழர் பசு. கவுதமன் வலியுறுத்துகிறார். ஆனால், வருண பேத எதிர்ப்பு என்பதும் உள்ளது என்றே அழுத்தி சொல்கிறார். மேலும் செங்கொடி இயக்கத்தை விமர்சனம் செய்வதாக சில இடங்கள் இருந்தாலும், திராவிட இயக்க செயல்பாடுகளையும், அதிலிருந்து கிளைத்து எழுந்த திமுகவும் பெரியாரின் காங்கிரஸ் ஆதரவு போக்கும் கூட விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்பதே நிஜம்.

தமிழக வரலாற்று சூழலில் தொடர்ந்து இயக்கங்களின் வரலாறுகள் போராட்டங்களின் நிகழ்வுகள் இன்னமும் சரியாக நூலாக்கம் காணப்படுவதில்லை. ஏன், சமீபத்திய ஜல்லிகட்டு பெருநிகழ்வு போராட்டம் குறித்து சரியான நூல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.. அதாவது யாரால் துவக்கப்பட்டது, எவரெல்லாம் பங்கேற்றனர், மாவட்டங்களில் நடைபெற்ற போராட்ட விவரங்கள் என்பது  உள்ளிட்ட விவரங்கள் இல்லை. இது ஜல்லிக்கட்டு போன்று தன்னெழுச்சி போராட்டங்களுக்கு வேண்டுமானால் சரியாகவோ அது தேவை சிறிதாகவோ இருக்கலாம். ஆனால், இயக்கங்கள் கட்டமைக்கும் போராட்டங்களில், பெற்ற வெற்றிகளில், சிந்திய உயிர்களில் என இவை முறையாக தொகுக்கப்பட வேண்டாமா? இந்த நூலில் திரு.ஏ.ஜி. கஸ்தூரிரங்கன் அவர்கள் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அந்த வீரதிரமிக்க விவசாய சங்க தொழிலாளர்கள் சங்கத்தின் (செங்கொடி இயக்கம்+ திராவிடர் இயக்கம்) பல தோழர்களை இங்கு பட்டியலிடுகிறார். தோழர் மீயன்னா பற்றிய குறிப்பு அற்புதம். (பாரதி புத்தகாலயம் தனியே மீயன்னா தோழர் குறித்து ஒரு பிரசுரம் வெளியிட்டு இருக்கிறது) .  

அநேகமாக செங்கொடி இயக்கம் எடுத்த சில போராட்டங்கள் குறித்த புதிய பதிவுகள் இந்நூலில் இருக்கிறது. அதே சமயம் அப்போராட்டங்கள் சில மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும் பதிவாகிறது. ஒட்டுமொத்தத்தில் இரண்டாக இந்நூலினை பார்க்கலாம் என நினைக்கிறேன். ஒரு போராளியின் வழியே கீழதஞ்சையில் ஆண்டாண்டுகளாய் மனிதருக்கும் கீழாய் வைக்கப்பட்ட மக்களின் விடியலுக்காய் அவர்களை சங்கமாக திரட்டி நடைபெற்ற ஒரு பெரும் வீரெழுச்சி போராட்டம். மற்றொன்று ஆதிக்க சாதியில் பிறந்தாலும், நடக்கும் நிகழ்வுகளில் கிளர்ச்சியுற்று, சமூக அடுக்குகளில் கீழாக வைக்கப்பட்டிருந்த மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு போராளியின் வாழ்க்கை வரலாறு.  பெரியார் மீது காலம் காலமாக வைக்கப்படும் ஒரு செய்தியும் இங்கே தகர்க்கப்பட்டு இருக்கிறது. அவர் வெண்மனி படுகொலை குற்றவாளி கோபாலகிருஷன் நாயுடுவை சந்தித்தார் என்பது. அது இல்லை என இப்புத்தகத்தில் ஆணித்தரமாக நிறுவபப்ட்டு இருக்கிறது.


இந்நூலில் தர்க்கத்திற்கு நிறைய இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட வருத்தம் ஒன்று இருக்கிறது. செங்கொடி இயக்க விவசாய சங்க வரலாறு என்றாலே தோழர். பி.சீனிவாசராவ் அவர்களை குறிப்பிடாமல் எவரும் இதுவரை எழுதியதே இல்லை. ஆனால் இந்நூலில் அவர் பெயரை ஒரு முறை கூட குறிப்பிடவில்லை. தோழர். பி. சீனிவாசராவ் அவர்களின் காலத்திற்கு பிறகுதான் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் தோழர் வருகிறார் என்றாலும், செங்கொடிக்கு ஒரு பெரிய எழுச்சி உண்டானது கீழதஞ்சையில் தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் அணுகுமுறையும் இருக்கிறது அல்லவா, பின் அவரை ஏன் குறிப்பிடவில்லை என தெரியவில்லை?

ஆனால் நூலில் ஒரு இடத்தில் தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் சொல்கிறார், “போராட்டக் களத்தில் இரண்டு இயக்கங்களும் சங்கமித்தே பல வெற்றிகளை பெற்றிருக்கின்றன" என்று. அதுதான் இந்நூல் சொல்ல விழையும் பெரும் செய்தி என நான் எண்ணுகிறேன். 

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

  20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது . மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது . அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன் . என் தலைவன் தோழர் பேராசிரியர் நா . மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார் . அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்த “ வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் ”. பேரா . எஸ் . சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது . முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது . தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தை யும் வாசித்ததே இல்லை . புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்து நடை வெகு சுவாரசியம் . கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா ? தெரிய...

தொடர்ந்து தோற்கும் என் அம்மாவிற்கு....

அன்பு அம்மாவிற்கு, என்ன நல்லா இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் சௌக்கியமா? தங்கச்சி வந்துச்சா? கொஞ்ச நாளா உங்ககிட்டேயிருந்து வருகிற தொலைபேசி அழைப்புகளையும், உங்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறேன் என்பது உண்மைதான். என்ன செய்றது? எனக்கு வேற வழியில்ல, அதான். அம்மா, எனக்கு இந்த கடிதத்தைத் தவிர வேறு வழி தெரியலே, என்னோட வேதனையை சொல்றதுக்கு. யார் கிட்ட சொல்ல முடியும்? அம்மா, எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தாய் எப்படி தன் மகன் தோல்வி அடையணும் என்று எதிர்பார்க்கிறாள்? நினைக்கவே பயமாயிருக்கு. ஆமாம்மா, எனக்கு தோல்விதான் தொடர்ச்சியாக. என் மனைவி, மக்கள் என்ற ஒரு கட்டத்திற்கு வந்தபின்னும் அவர்கள் சம்பந்தமான முடிவினை எடுக்க முயலும்போதெல்லாம் எனக்கு தோல்விதான் ஏற்படுகிறது. முதலில் மனைவி, இப்போது நீங்கள். அம்மா, நீங்களே எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கீங்க‌, உங்களுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். நான் நல்லா வருவேன்னு முன்கூட்டியே ஜோசியம் சொன்னவங்க நீங்கதான். அப்படியே நான் இப்ப எல் ஐ சியில ஒரு நல்ல வேலையில இருக்கேன். ...

மரணத்தை நோக்கி பேரணியாய் சென்ற மனிதன்

ஆகஸ்ட் 6, 1942. மனித குல வரலாற்றில் இதுவும் ஒரு மறக்க முடியாத(கூடாத) நாள். இடம். போலந்து நாட்டு வார்சா மாநகரம். நேரம்: காலை 7 மணி. சுமார் 192 குழந்தைகள் மற்றும் 10 மூத்தவர்கள். இதில் குழந்தைகள் நால்வர் நால்வராய் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தூரத்தில் 10 மூத்தவர்கள் இடைவெளிவிட்டு பேரணியாய் நின்றிருந்தார்கள். நின்றிருந்த ஏவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் காணப்படவில்லை. பேரணி கிளம்பிற்று. முதலாய் ஒரு முதியவர் இரு கையிலும் இரு குழந்தைகள் ஏந்தி வழிகாட்டி சென்றார். வழி நெடுகிலும் மனித வெள்ளம், பெருங்கவலையுடனும் வியப்புடனும். பேரணி சுமார் ஒரு மைல் தூரம் கடந்தபோது மேலும் பல குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்தனர். சுமார் 4000 குழந்தைகள், மரணத்தை நோக்கி. ஆம், இங்கே இந்தியாவின் மோடி, சாவர்க்கர் கூட்டத்தின் போற்றுதலுக்குரிய ஜெர்மனியின் ஹிட்லரின் விஷவாயு மரணக்குகை நோக்கி. ட்ரெப்லின்கா என்கிற விஷவாயு குகை நோக்கிய ரயில் அடுத்த நரபலிக்கு கிளம்ப தயாராயிற்று. குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோரும் பெருங்குரலெடுத்து அலறினர், கதறினர். ஆனால் அம்முதியவரும் அவரைச் சேர்ந்தவர்களும்...