ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? உங்களை கார் வாங்கி நீண்ட தூரம் டிரைவ் போக சொல்லும். சவூதி அரேபியா என்னும் அழகிய தேசத்தை ஒரு முறையேனும் முழுசாய் சுத்தி பார்த்துவிட தூண்டும். அந்த ஒட்டகப் பால் எப்படி இருக்கும், கிடைக்குமா என ஏங்க வைக்கும்? அரபி மொழி கத்துப்போமா என யோசிக்க வைக்கும். மத நம்பிக்கை இருக்கோ இல்லையா ஒரு முறை மெக்கா சென்றுவர தோணும். இறைதூதர் வாழ்க்கை வரலாற்றை படிக்க, காயல்பட்டண காற்றில் இருக்கும் வட்டார மொழி வழக்கினை சுவாசிக்க என பலவும் செய்யும். அப்படியான ரசனையான அதகளமான புத்தகமாக எனக்குப் படுகிறது, மணல் பூத்த காடு.
திரைப்படம் போல மனதில் காட்சிப் படிவங்களாக எழுத்துக்களை சமைப்பதில் வல்லவராக இருக்கிறார் முகமது யூசூப், மணல் பூத்த காடு நாவலின் ஆசிரியர். எனக்கு இவரது எழுத்து மிகவும் பிடித்திருக்கிறது. நாவல் முழுக்கவே டிராவல்தான். சவூதி அரேபியா (17 ஆம் நுற்றாண்டு முதல் தான் சவூதி என்னும் அடைமொழி இணைக்கப்பட்டிருக்கிறது) என்னும் நாட்டின் நீள அகலத்தை, வரலாற்றை, தட்ப வெப்ப சூழலை, மக்களை படிக்க நிச்சயம் இந்த புத்தகம் உதவும். எது குறித்தும் கதையின் நாயகன் அனீசுக்கு எதிர் விமர்சனம் இல்லை, வஹாபியசத்தை தவிர. அவர் அதை கடுமையாக எதிர்க்கிறார், மத கட்டு இறுகுதலை (வலுக்கட்டாயமாக) சிறிதும் விரும்புவதில்லை. நாவலில் வரும் கதாபாத்திரமான தோழப்பா போல வாழும் வரலாறு சொல்லிகள் இன்னும் தமிழகத்திலும் இருக்கின்றனர். அந்த மாதிரி ஆட்களுக்கு தேவை இரு காதுகளும் சில மணி துளி நேரமும் தான். வாழ்க்கையாக உருப்படியாக சுவையாக செய்ய அனீஸ் என்னும் கதாநாயகனுக்கு தோழப்பா ஒரு பெரும் துணை. நமக்கும் தான்.
சரி அதுமட்டுமா நாவல்? இல்லை, அரபு நாட்டு அரசும் அந்நாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளும் இந்நாவலில் விரவி இருக்கிறது. ஒட்டகங்களாக, வெள்ளை உடை அரபிகளாக, பாலைவனங்களாக, ஈவுஇரக்கமற்ற தண்டனை கொடுப்பவர்களாக என்பதாக சவூதி குறித்த நம் சித்திரம் அழகழகாக தவிடு பொடியாகிறது. சவூதியில் 59 டிகிரி வெயிலில் கார் ரேடியேட்டர் உருகிற அளவிற்கு வெயிலோடு, ஜோர்டன் நாட்டு எல்லைப் பகுதி ஒட்டிய ஒரு குளிர் பிரதேசமும் இருக்கிறது மக்களே. அது மட்டுமல்ல, அங்கு அழகான ஆறும் இருக்கிறது, நீர் சுனையும், மலைகளும். சென்னை வாசி அல்லது சவுத் இந்தியன் என்ற சொல் அரபி நாடுவரை தகுதியாக பார்க்கப்படுவதை இந்த நாவலில் மீண்டும் அறுதிப்படுத்தப்படுகிறது.
நாவலாசிரியர் அனீஸின் மொழியாக அவரது கடிதங்களும், ஆங்காங்கே அனீசின் யோசனைகளாக, விவரணைகளாக சொற்களை கோர்த்து மாலையாக்குகிற வித்தையில் நம்மை கிறங்கடிக்கிறார். தமிழ் தான் எப்பேர்ப்பட்ட மொழி. ஒரு இடத்தில் ஒரு கேள்விக்கு இவ்வாறு பதில் வருகிறது, “நீங்கள் மாவீரன் என்று உரக்க கூவி அழைக்கும் அலெக்ஸாண்டர் அவன் தாயின் ஒரு மாதத்து வெளியேறாத உதிரப்போக்கின் கழிவில் இருந்து உண்டானவன்". அட, சொல்ல தோன்றுகிறதா? மற்றொரு இடத்தில், “அவர்கள் சாதுரியத்தின் முன்பு உண்மை குற்றவாளி போல நின்றுள்ளது" என்றும், “செம்மண், களிமண், கரிசல் மண், வண்டல் மண், குறுமண், செம்புறை மண் என ஒவ்வொரு மண்ணுக்கும் நிறம், குணம், தன்மை கொன்ட பலவிதமான வேறுபாடுகள் உண்டு. ஆனாலும், பாலை மண்தான் பூமியின் ஆதி தாய். நிலத்தின் அலங்காரம். மண்ணின் மூத்த குடி. உலகிலேயே வர்ணணையில் வசப்படாத சிறந்த அழகி இந்த பாலை மண்தான்" என்பதாக நூலாசிரியர் நம்மை சிலிர்க்க வைக்கிறார்.
நாவலெங்கும், அரபி பொன்மொழிகள், குரானின் மேற்கோள்கள், தலைவர் கலீல் கிப்ரானின் வரிகள், சூபியிசத்தின் கூறுகள் என அழகு தூவல்கள் விரவி கிடக்கிறது. ஒரு இடம் குறிப்பிட்டாக வேண்டும், அனீஸ் வழக்கமான பாதையிலிருந்து மாறி வேறு பாதையில் வீடு அடைகிறான். வழக்கமான பாதை பாலைவன சூறைக்காற்று அடிக்கும் பகுதி என்பதால், அவன் செக்போஸ்ட் வரவில்லை என்பதை அனீஸின் நிறுவனம் மட்டுமல்ல, அந்நாடே பதைபதைப்புடன் தேடுகிறது என்பது மிக முக்கியம். மேற்கத்திய நாடுகள் வளங்களை கபளீகரம் பண்ண செய்யும் சதி செயல்களாக பலதும் இந்நாவலில் காண கிடைக்கின்றன.
இறுதியாக, லாபம் என்பது மனிதனின் சுயமரியாதை காவு கொள்ளும் என்பதாக நாவல் முற்றுப் பெறுகிறது. அனீஸ் சமயம் பார்த்து நாடு திரும்புகிறான். கடன் முடிந்த ஒரு சிறு வாழ்வு சுகமானதாக வாழ அவன் ஏங்கி நாடு திரும்புகிறான். 448 பக்க நாவல் முடிந்துவிட்டதே என்கிற சோகம் என்னுள் பரவுகிறது.
Comments