Skip to main content

மணல் பூத்த காடு - நூல் அறிமுகம்

ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? உங்களை கார் வாங்கி நீண்ட தூரம் டிரைவ் போக சொல்லும். சவூதி அரேபியா என்னும் அழகிய தேசத்தை ஒரு முறையேனும் முழுசாய் சுத்தி பார்த்துவிட தூண்டும். அந்த ஒட்டகப் பால் எப்படி இருக்கும், கிடைக்குமா என ஏங்க வைக்கும்? அரபி மொழி கத்துப்போமா என யோசிக்க வைக்கும். மத நம்பிக்கை இருக்கோ இல்லையா ஒரு முறை மெக்கா சென்றுவர தோணும். இறைதூதர் வாழ்க்கை வரலாற்றை படிக்க, காயல்பட்டண காற்றில் இருக்கும் வட்டார மொழி வழக்கினை சுவாசிக்க என பலவும் செய்யும். அப்படியான ரசனையான அதகளமான புத்தகமாக எனக்குப் படுகிறது, மணல் பூத்த காடு.
திரைப்படம் போல மனதில் காட்சிப் படிவங்களாக எழுத்துக்களை சமைப்பதில் வல்லவராக இருக்கிறார் முகமது யூசூப், மணல் பூத்த காடு நாவலின் ஆசிரியர். எனக்கு இவரது எழுத்து மிகவும் பிடித்திருக்கிறது. நாவல் முழுக்கவே டிராவல்தான். சவூதி அரேபியா (17 ஆம் நுற்றாண்டு முதல் தான் சவூதி என்னும் அடைமொழி இணைக்கப்பட்டிருக்கிறது) என்னும் நாட்டின் நீள அகலத்தை, வரலாற்றை, தட்ப வெப்ப சூழலை, மக்களை படிக்க நிச்சயம் இந்த புத்தகம் உதவும். எது குறித்தும் கதையின் நாயகன் அனீசுக்கு எதிர் விமர்சனம் இல்லை, வஹாபியசத்தை தவிர. அவர் அதை கடுமையாக எதிர்க்கிறார், மத கட்டு இறுகுதலை (வலுக்கட்டாயமாக) சிறிதும் விரும்புவதில்லை. நாவலில் வரும் கதாபாத்திரமான தோழப்பா போல வாழும் வரலாறு சொல்லிகள் இன்னும் தமிழகத்திலும் இருக்கின்றனர். அந்த மாதிரி ஆட்களுக்கு தேவை இரு காதுகளும் சில மணி துளி நேரமும் தான். வாழ்க்கையாக உருப்படியாக சுவையாக செய்ய அனீஸ் என்னும் கதாநாயகனுக்கு தோழப்பா ஒரு பெரும் துணை. நமக்கும் தான்.

சரி அதுமட்டுமா நாவல்? இல்லை, அரபு நாட்டு அரசும் அந்நாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளும் இந்நாவலில் விரவி இருக்கிறது. ஒட்டகங்களாக, வெள்ளை உடை அரபிகளாக, பாலைவனங்களாக, ஈவுஇரக்கமற்ற தண்டனை கொடுப்பவர்களாக என்பதாக சவூதி குறித்த நம் சித்திரம் அழகழகாக தவிடு பொடியாகிறது. சவூதியில் 59 டிகிரி வெயிலில் கார் ரேடியேட்டர் உருகிற அளவிற்கு வெயிலோடு, ஜோர்டன் நாட்டு எல்லைப் பகுதி ஒட்டிய ஒரு குளிர் பிரதேசமும் இருக்கிறது மக்களே. அது மட்டுமல்ல, அங்கு அழகான ஆறும் இருக்கிறது, நீர் சுனையும், மலைகளும். சென்னை வாசி அல்லது சவுத் இந்தியன் என்ற சொல் அரபி நாடுவரை தகுதியாக பார்க்கப்படுவதை இந்த நாவலில் மீண்டும் அறுதிப்படுத்தப்படுகிறது.
நாவலாசிரியர் அனீஸின் மொழியாக அவரது கடிதங்களும், ஆங்காங்கே அனீசின் யோசனைகளாக, விவரணைகளாக சொற்களை கோர்த்து மாலையாக்குகிற வித்தையில் நம்மை கிறங்கடிக்கிறார். தமிழ் தான் எப்பேர்ப்பட்ட மொழி. ஒரு இடத்தில் ஒரு கேள்விக்கு இவ்வாறு பதில் வருகிறது, “நீங்கள் மாவீரன் என்று உரக்க கூவி அழைக்கும் அலெக்ஸாண்டர் அவன் தாயின் ஒரு மாதத்து வெளியேறாத உதிரப்போக்கின் கழிவில் இருந்து உண்டானவன்". அட, சொல்ல தோன்றுகிறதா? மற்றொரு இடத்தில், “அவர்கள் சாதுரியத்தின் முன்பு உண்மை குற்றவாளி போல நின்றுள்ளது" என்றும், “செம்மண், களிமண், கரிசல் மண், வண்டல் மண், குறுமண், செம்புறை மண் என ஒவ்வொரு மண்ணுக்கும் நிறம், குணம், தன்மை கொன்ட பலவிதமான வேறுபாடுகள் உண்டு. ஆனாலும், பாலை மண்தான் பூமியின் ஆதி தாய். நிலத்தின் அலங்காரம். மண்ணின் மூத்த குடி. உலகிலேயே வர்ணணையில் வசப்படாத சிறந்த அழகி இந்த பாலை மண்தான்" என்பதாக நூலாசிரியர் நம்மை சிலிர்க்க வைக்கிறார்.

நாவலெங்கும், அரபி பொன்மொழிகள், குரானின் மேற்கோள்கள், தலைவர் கலீல் கிப்ரானின் வரிகள், சூபியிசத்தின் கூறுகள் என அழகு தூவல்கள் விரவி கிடக்கிறது. ஒரு இடம் குறிப்பிட்டாக வேண்டும், அனீஸ் வழக்கமான பாதையிலிருந்து மாறி வேறு பாதையில் வீடு அடைகிறான். வழக்கமான பாதை பாலைவன சூறைக்காற்று அடிக்கும் பகுதி என்பதால், அவன் செக்போஸ்ட் வரவில்லை என்பதை அனீஸின் நிறுவனம் மட்டுமல்ல, அந்நாடே பதைபதைப்புடன் தேடுகிறது என்பது மிக முக்கியம். மேற்கத்திய நாடுகள் வளங்களை கபளீகரம் பண்ண செய்யும் சதி செயல்களாக பலதும் இந்நாவலில் காண கிடைக்கின்றன.
இறுதியாக, லாபம் என்பது மனிதனின் சுயமரியாதை காவு கொள்ளும் என்பதாக நாவல் முற்றுப் பெறுகிறது. அனீஸ் சமயம் பார்த்து நாடு திரும்புகிறான். கடன் முடிந்த ஒரு சிறு வாழ்வு சுகமானதாக வாழ அவன் ஏங்கி நாடு திரும்புகிறான். 448 பக்க நாவல் முடிந்துவிட்டதே என்கிற சோகம் என்னுள் பரவுகிறது.

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற