Skip to main content

கலிலியோ - எஸ்.சிவதாஸ் -- நூல் அறிமுகம்

 20 வருடங்கள் கழிந்த பின்னும் அந்த வாசிப்பு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிய பேருந்து பயணத்தில் முழுக்க நின்றுகொண்டே வாசித்த அந்த புத்தகமும் அந்த வாசிப்பு அனுபவமும் பசுமையாக இருக்கிறது. அப்போது தான் நான் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்திருந்தேன். என் தலைவன் தோழர் பேராசிரியர் நா. மணி அவர்கள் தான் இந்தப் புத்தகத்தை வாசித்து பாருங்க என கொடுத்தார்.

அந்தப் புத்தகம் தான் அறிவியல் வெளியீட்டில் வந்திருந்தவாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்”. பேரா. எஸ்.சிவதாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் எழுத்து தமிழில் அழகிய மொழிபெயர்ப்பாக வந்திருந்தது. முதன்முதலில் அவர்கள் வெளியிட்ட அந்த வடிவம் (landscape) மிக சிறப்பானது. தமிழில் வழவழ தாளில் அப்படி ஒரு லேஅவுட்டில் நான் இதுவரையிலும் கூட எந்த ஒரு புத்தகத்தையும் வாசித்ததே இல்லை. புத்தக வடிவமைப்பை விடவும் அந்த எழுத்துநடை வெகு சுவாரசியம். கதைகளின் வழியே அறிவியல் சொல்லல் என சொல்லலாமா? தெரியவில்லை. ஆனால், இருவரின் உரையாடல் வழியே அறிவியலை இயற்கை சுவாரசியங்களை உண்மைகளை மிக எளிமையாக வாசகருக்கு இதமாக சொல்வது என உறுதியாக சொல்ல முடியும்.

அன்றிலிருந்து பேரா.எஸ்.சிவதாஸ் என்ற பெயர் எங்கு தென்பட்டாலும் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் உடனே வாங்குவதும் அவரின் புத்தகங்களை பலரும் படிக்க பரிந்துரைப்பதும் என தொடர்கிறேன். அந்த வகையில் புக்ஸ் பார் சில்ரன் வெளியீட்டில் மாத்தன் மண்புழுவின் வழக்கு என்ற புத்தகமும் வெகு சிறப்பான ஒன்று. வானம் வெளியீட்டிலும் ஒரு புத்தகமும் தோழர் உதயசங்கர் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. அதுவும் சிறப்பான ஒன்றே.



அந்த வரிசையில் நான் வாசித்த அடுத்த புத்தகம் கலிலியோவின் வாழ்க்கை வரலாறு. இம்முறையும் பேராசிரியர் எஸ்.சிவதாஸ் அவர்கள் கையிலெடுத்து இருப்பது உரையாடலான நாடக வடிவமே. உரையாடல் என்பதில் வாசகனுடனான ஒரு தோழமை இருக்கிறது என்பதை உண்மையாக நம்புகிறார் என்றே தோன்றுகிறது.  

கலிலியோ கண்டுபிடித்தது என்ன என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் மதநம்பிக்கை கொண்ட ஒருவராக இருந்துகொண்டு மதம் அதுகாறும் சொல்லிவந்த உண்மை என்ற ஒன்றை அறிவியலால் பொய் என கண்ட கலிலியோ அறிவியலின் பக்கம் அதாவது உண்மையின் பக்கம் சொல்ல என்ன பாடுபட்டார், என்ன ஆனது அம்மகா உண்மை என்பதை சுவையாக நாடக வடிவில் காட்டுகிறது இப்புத்தகம்.

அதுவரை உலகமே நம்பியிருந்த ஒன்றை இல்லை என மறுத்து சொல்வதென்றால் எத்துனை தைரியம் வேண்டும்? அசட்டு தைரியம் அல்ல அது, ஆழ்ந்து ஆய்வு செய்து கண்டுகொண்ட உண்மை. முற்போக்காளர்கள் இத்தகைய புத்தகங்களை தமிழகம் எங்கும் எடுத்து செல்ல, சொல்ல வேண்டும். பள்ளிகள் தோறும் இப்புத்தகம் வேண்டும். குழந்தைகளை வாசித்தும், வாசித்து நாடகமாக நடத்தவும் பழக்க வேண்டும். சீ.. சீ.. அறிவியல் என்ற காய்ச்சல் இல்லாமல் தைரியமாக எளிமையாக கொண்டு செல்லக் கூடிய புத்தகம் இது என்பதை முற்போக்காளர்கள் அவசியம் படித்து உணர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

என் நம்பிக்கை என உண்மை எதுவோ அதைப் பற்றிய கவலை ஏதும் இல்லாமல் என தான் நம்பியதே உண்மை என்று அதனையே பலரும் ஏற்று ஆக வேண்டும் எனவும் மீறினால் வெறுப்புதான் என்பதான உலகமாக இக்காலம் இருப்பதால் அவசியம் இது போன்ற புத்தகங்களை முற்போக்காளர்கள் கொண்டு செல்ல வேண்டும்.

 அசராமல் சமூகத்துக்கு தேவையான புத்தகங்களை கொண்டு வந்து தரும் பாரதி புத்தகாலயத்தாருக்கு மிக்க நன்றி. 

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற