கூடம்

மனித பேச்சு உலகை மாற்றும்-- ‍ பாவ்லோ பிரைரே

Saturday, 20 February 2021

DESPITE THE STATE - நூல் அறிமுகம்


 


Despite the state. கடந்த 15-20 நாட்களாக ஒரே புத்தகத்துடன் சுற்றி வருகிறேன். உலகமயத்திற்கு பின்னான இந்தியாவில் எப்படி மாநிலங்களில் "state”அதாவது அரசு என்னும் identityஎன்ன role play செய்கிறது என்ற ஆய்வும் அதைத் தொடர்ந்து எழுப்பும் கேள்விகளும் கருத்துக்களுமே இந்நூல். இயக்கங்களில் இருப்பவர்கள் இப்புத்தகத்தை படித்தால் நல்லது. ஏனெனில் நாம் வழக்கமாக உபயோகிக்கும் rhetoricவசனங்களின் பின்னே இருக்கும் வெறுமையும், நாம் எதிர்பாராத திசையில் ஒளிந்திருக்கும் உண்மைகளும், கண் முன்னே நடந்தாலும் ஒரு மூடு திரை நம் கண் முன் ஒரு மகத்தான உண்மைநிலையை மறைப்பதை கண்டுணர முடியும். மிசோரம், ஒரிசா, பீகார், தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத் என இந்த மாநிலங்களுக்கு சென்று அங்கே நடப்பவைகளை கண்டுணர்ந்து பிரச்சனைகளின் தன்மையை உணர stakeholdersஎனப்படுவோரை பேட்டி கண்டும் தான் வாசித்தவற்றில் இருந்தும் சில உண்மைகளை கண்டடைவது என அசல் ஆய்வினை நடத்தியுள்ளார் இப்பத்திரிகையாளர். இது தப்பாக புரிந்து கொள்ள வாய்ப்பிருந்தும் சொல்கிறேன், மீடியாக்களில் விவாதத்தை சரிவர நடத்துபவர்கள் மட்டுமே பெரிய பத்திரிகையாளர்கள் என ஒரு கருத்து பெரிதாக எழுந்துள்ள சூழலில், ராஜசேகர் என்னும் பத்திரிகையாளர் ஒரு பத்திரிகையாளர் எப்படி இருக்க வேண்டும் என சொல்கிறார், அர்த்தமாய் இருக்கிறார்.


மற்ற மாநிலங்களை விட்டு தமிழகம் குறித்து அவர் என்ன சொல்கிறார்? ஒவ்வொரு மாநிலத்தையும் குறித்து அவர் அறிமுகப்படுத்த துவங்கும் முறை ஒன்றாக இருக்க, தமிழகத்தில் அவர் இளவரசன் திவ்யா மூலம் நுழைகிறார் என்றால் தமிழகத்தின் பெரிய பிரச்சனை என்ன என்பது புரிகிறது. அதே சமயம் வெற்று கோஷங்கள் பின்னே சிக்காமல் உண்மை நிலைகளை கண்டறிகிறார். ஆம், வெண்மணியின் காலத்தில் அவ்வளவாக இல்லாத ஆணவப் படுகொலைகளும், பொருளை விட ஆளையே கொன்றழித்த நிலைமைகளும் ஏன் இப்போது மாறின என யோசிக்கிறார். அதாவது, நத்தக் கொல்லையில் ஆட்கள் கொல்லப்படாமல் குறியாக சான்றிதழ்களும், மின்னனு சாதனங்களும் அடித்து நொறுக்கப்பட்டத்தை சொல்கிறார். ஆம், கல்வி மற்றும் நகர்ப்புறங்களை நோக்கிய அடித்தட்டு மக்களின் நகர்வு என எல்லாம் தலித் மக்களின் பொருளாதார நிலைகளை மாற்றியமைத்திட கொஞ்சம் முடிந்திட்ட சூழலில் அவ்வாறான பொருளாதார முன்னேற்ற நிலைகளை அடையாத இடைத்தட்டு MBCமக்கள் தங்கள் வாழ்வாதாரம் தேங்கிய அசல் காரணங்களையோ அல்லது தங்கள் வாழ்வாதாரம் மேம்பட தாங்கள் செய்ய வேண்டிய, கேட்க வேண்டிய விஷயங்களை கேட்காமல் எப்படி கலாச்சாரம் என்னும் மோசடியை கையில் எடுக்கின்றனர் என சொல்கிறார். இதற்கு பாமகவின் ராம்தாஸ் தான் விஷ விதையை முதன் முதலில் தூவியவர் என்பதையும், தாங்கள் சமூக நீதி பார்வையில் பயணிக்கிறோம், சாதி பேதமில்லை என்று சொல்லிய ஆட்சியில் இருந்திட்ட திராவிட இயக்கங்கள் எப்படி சாதி மேலாதிக்கத்தை போஷித்தன என்பதையும் கவனப்படுத்துகிறார். மேம்பாடு என்பதை அப்படி ஒன்றும் பெரிதாக தலித் மக்கள் கண்டடையாத போதும், மேம்பட்டுவிட்டதாக ஒரு பூடகத்தை கட்டி எழுப்பி சாதிய வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாக குறிப்பிடும் வேளையில், MBC என்ற பிரிவின் கீழ் 108 சாதி மக்கள் 20% சதவீத ஒதுக்கீடு பெறுகிற சமயத்தில், SCஎன்ற பிரிவின் கீழ் 16% சதமான இடஒதுக்கீட்டின் பலன்களை 2 பிரிவு சாதி மக்களே பெறுவதை ஒருவர் அங்கலாய்ப்பதையும் சொல்கிறார். ஒரு பக்கம் தலித் மக்கள் மேம்பட்டு விட்டதாக ஒரு கற்பித்தத்தில் வன்முறைகள் விசிறி விடப்பட, மறுபக்கம் ரேஷன் கடையில் தலித் ஒருவருக்கு வெறும் 20 கிலோ அரிசி மட்டுமே கிடைக்க, மற்ற சாதியினர் 20 கி அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் பெறுவதை சுட்டிக்காட்டி எப்படி அரசு நிறுவனங்களாக இருந்த போதிலும் சாதிய ஒடுக்குதல் நிகழ்கின்றன என்பதை படம் பிடித்து காட்டுகிறார்.


வெற்றி நடைபோடும் தமிழகமே என ஆளும் அரசு பீற்றிக் கொண்டு இருப்பது ஒருபுறம் இருக்க, என்னவாக இருந்தாலும் தமிழகம் முன்னேறியே இருக்கிறது, திராவிட அரசியல் சமூக நீதி அரசியல் எனவும் பேசப்படும் பொழுதில், சில அதிர்ச்சிகர உண்மைகளை இப்புத்தகம் காட்டுகிறது. குறிப்பாக தமிழகத்தின் பெருமைகளாக பேசப்படும் கல்வி வாய்ப்புகள், சுகாதாரம் ஆகியவைகளின் உண்மை நிலையையும் இப்புத்தகம் பேசுகிறது. சமூக நீதி இலக்குகளின் பயணத்தில் உண்மையிலேயே அக்கறை தொடர்ந்திருக்குமானால் மிகப்பெரிய மாற்றங்களை தமிழகம் கண்டிருக்கும் என நியாயமான அங்கலாய்ப்பில் தொடர்கிறார். ஒரு பக்கம் குழந்தைகள் இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் என்பவை இந்தியாவே பாராட்டுகிற அளவுக்கு குறைந்து வரும் வேளையில், உலகமய சூழல் என்பது தமிழகத்தையும் ஆட்டுவித்து இங்கும் கான்டிராக்ட் முறையும் ஆள் குறைப்பும் வர எளிய மக்களின் சுகாதாரம் பாதிப்பு அடைந்துள்ளதையும் அதை மோசடியான கணக்குகள் மூலம் மறைப்பதையும் சொல்கிறார். எல்லாவற்றையும் விட என்னதான் அரசு மருத்துவர்கள், ஆஷா நர்சுகள் என்பவர் மூலமாக சுகாதாரத்தை முன்னேற்ற முனைந்தாலும் அடிப்படை விஷயங்களான வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு என்பவை இல்லாமல் அடையும் முன்னேற்ற அடைவுகள் ஒரு கட்டத்தில் stagnate ஆவது மட்டுமல்ல, குறையவும் தொடங்கும் என சுட்டுகிறார்.


இலவச லேப்டாப், tab என இவை கொடுப்பது populist measures என இவற்றை இலவசமாக தருவதாக பீற்றிக் கொள்ளும் அரசுகள் பொதுக்கல்வியை உதாசீனப்படுத்தி அடிப்படையே தகர்க்கிறது என சொல்கிறார். ஆண்டுக்காண்டு பாஸ் விகிதம் கூடுகிறது என்பதின் பின்னே உள்ள பிம்பத்தை ஒரே ஒரு வரியில் இவ்வாறு சொல்கிறார், “75% சதமான மாணவர்களை பாஸ் செய்து வெளியேற்றினால் தான் கல்லூரிகளுக்கு 200000 மாணவர்கள் கிடைப்பர், தமிழகத்தில் அநேகம் கல்லூரிகள் தனியாரிடம் இருக்கின்றன". இங்கே எம்ஜிஆரின் வாரிசு நான் தான் நான் தான் என பெருமை கொள்ள நடக்கும் போட்டி நடக்க, காமராஜர் தொடங்கி வைத்த சமூக நீதி பார்வையிலான மக்கள் திட்டங்கள் என்பதை நாசமாக்கிய பணியை துவக்கி வைத்தவரும், எதிர்ப்புகளை இரும்பு கரம் கொண்டு அடக்க தொடங்கியவர் புண்ணியவானும் அவரே என்பதையும் இந்நூல் சொல்கிறது.


2002-2003 காலத்தில் விவசாய வருமானம் என்பது 24,864 ரூபாய்களாக இருந்தது 2012-2013 காலத்தில் ரூ.83760 என உயர்ந்திட்ட போதும் இதே கால இடைவெளியில் விவசாயிகளின் லாபம் உயரவில்லை என சொல்கிறார். அதாவது முதலீடு 3000 என இருந்த 70களில் வருமானம் 4000 என இருந்தது, இப்போது 40000 ரூபாய் என இருப்பது வருமானமாக 43000 தருகிறது என்பதிலிருந்து புரிகிறது.

விவசாயம் அரசின் ஆதரவினை இழந்துவிட்ட பின்னணியில் ஏற்கெனவே தனியாரிடம் சிக்கி தவித்து விவசாயம் செய்து வாடும் விவசாயிகளுக்கு பேரிடியாக, ஆற்றுப் படுகையில் மணல் அள்ளுதல் என்பதும் பெருத்த சேதத்தை விளைவிக்கிறது என்பதையும் ஆழமாக சொல்கிறார். ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 250 கோடி ரூபாய்கள் மணல் விற்பதின் மூலமாக வருவாய் என காட்டும் அரசு மறைமுகமாக 20000 கோடி ரூபாய்கள் இழைப்பை சந்திக்கிறது என்பதையும் சொல்கிறார். அவ்வாறாக வரும் பணத்தில் தான் தேர்தலை சந்திக்கின்றன். முதலில் அரசியல்வாதிகளுக்கு பணம், பின் அதிகாரிகளுக்கு, அதற்குப் பிறகு அப்பகுதி மக்களுக்கு அவ்வப்போது பணம் என மணல் அள்ளும் மாபியாக்கள் எப்படி மாறியிருக்கின்றன என இந்நூல் சொகிறது.

சரி, இவ்வளவு பிரச்சனைகளுக்கு பின்னும் மக்கள் ஏன் போராடுவதில்லை, அமைதி தழுவும் மாநிலமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு தமுஎகசவின் மாநில தலைவர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் இந்நூலில் சொல்வது, “தன்னைப் நேரிடையாக பாதிக்காத விஷயங்களுக்காக தான் ஏன் செலவழிக்க வேண்டும், அக்காசு இருந்தால் தனக்கு எப்படி பயன்படும் என தன்னை சுருக்கிப் பார்க்க இந்த பொருளாதார சமூக சூழல் இருக்கிறது. ஒரு காலத்தில் 1000 பேரிடம் 100ரூ வாங்கி கலைவிழா நடத்துவோம், அது 10 பேரிடம் 1000 வாங்கி என சுருங்கி இப்போது ஒரு ஸ்பான்ஸரை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளோம். ஒன்னுக்கும் பயன்படாத மண் என சொல்லிய ஓசூர் நகரை தொழிலாளிகள் உழைப்பாளிகள் மாற்றிக் காண்பித்தனர், இப்போதோ அரசு அவர்களை உதறி தள்ளுகிறது, உதாசீனப்படுத்துகிறது, அவமதிக்கிறது".

140 எழுத்துருக்கள் இருக்கிற ஒரு டிவிட்டர் மெசேஜை கூட குறைத்து செய்தியை சொல்ல வேண்டும் என்பதான காலத்தில் ஒரு புத்தகத்தில் இவ்வளவிற்கு மேல் சொல்லுதல் சரியல்ல என அவசர அவசரமாக முடிக்கிறேன்.

இப்புத்தகத்தில் afterwordஎழுதியுள்ள தோழர் வ. கீதா, திராவிட அரசியலின் குறியீடு வெற்று கோஷங்களும், நடைமுறை இடைவெளிகளும் தான் என்றும் ஒரு ஆழமான திட்ட வகுத்தலும் அதனைத் தொடர்ந்த செயலாக்கமும் என்பதற்கு பதிலாக இங்கே welfarismஎன்பதே இருக்கிறது என்பதோடு குடிகள் தங்கள் உரிமைகளை கோருபவராக கருதாமல் அரசின் கடைக்கண் பார்வையை நாடி நிற்பவர்களாக மாற்றிவிட்டது என சொல்கிறார். அதாவது, CITIZENS CAME TO BE VIEWED AS RECEPIENTS OF GOOD WILL RATHER THAN BEARER OF RIGHTS, AS PERMANENTLY NEEDY YET DESERVING ONLY THE BARE MINIMUM என சொல்கிறார்.

இறுதியாக ஒரு mainstream பத்திரிகை மீடியாக்கள் எதிலும் mrajasekharஎழுதியுள்ள கட்டுரைகள் பதிவாகவில்லை. அது சமூக வலைத்தளத்தில் உள்ள scroll.in இல் பதிவான கட்டுரைகளே என்பதில் சமூக நிலையும் நன்றாக பிரதிபலிக்கிறது. மக்களே, குஜராத் குறித்து அவரது எழுத்துக்களும் படிக்கப்பட வேண்டும். சோசலிச முகாமின் தகர்விற்கு பின்னே உலகமயம் மக்களை எப்படி சூறையாடி இருக்கிறது என்பதையும், சமூக ஜனநாயக குறியீடுகளை நசுக்கியுள்ளது என்பதையும், இறுதியாக மக்களை மதம் சாதி என்பதாக பிரித்தாளுவதிலேயே அரசு இந்த உலகமய சூழலில் தங்கள் பிடியை தக்க வைப்பதை இப்புத்தகம் ஆழமாக சொல்கிறது.

அவசியம் படிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும். அதோடு உருவாக்கி வைத்துள்ள கற்பிதங்களை உடைத்து உண்மைகளை கண்டறிந்து மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதான இலக்கை வைத்திருப்போர் அந்த குறைந்த சதத்தினர் மட்டுமாவது அவசியம் படித்திட வேண்டும்.



Posted by ramgopal at 23:53 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: despite the state, mrajshekhar, scroll.in, நூல் அறிமுகம்

Sunday, 20 September 2020

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன்.

அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன்.

வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு.

பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங்களின் பங்குகள் வென்மணி படுகொலை நிகழ்வுக்கு இரு தசாப்தங்களுக்கு முன்பே தொடங்குகையில் திரு.கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் பங்கு படுகொலைக்கு பின்பான காலங்களில் தொடங்குகிறது. செங்கொடி இயக்கத்தின் வரலாறு பல புத்தகங்களில் விரிவாக வந்துள்ளது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு மூலமாக பல விஷயங்கள் வந்துள்ளன. இதில் அநேகமாக திராவிட இயக்கத்தின் பங்களிப்பினை மிக விரிவாக சொல்லியிருக்கும் புத்தகம் அநேகமாக ஒரே புத்தகம் இது என நினைக்கிறேன். அவ்வகையிலும் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கீழதஞ்சையில் பண்ணை பெருந்தலைகளை, மிட்டா மிராசுகளை, மைனர்களை, தலித் மக்களை அடிமைகளாக வைத்திருந்த ஆண்டைகளை, வெண்மணி படுகொலைக்கு சிறிது காலம் முன்பாக வரையிலும் செங்கொடி மற்றும் திராவிட இயக்கங்களின் விவசாய தொழிலாளர் சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வந்தன. இரண்டு இயக்கங்களும் ஒடுக்கப்பட்டு அடிமைகளாக வைத்திருந்த மக்களிடம் சுயமரியாதை பாய்ச்சி, கிளர்த்தெழ செய்து கூலி உயர்வு, மனித உரிமை கோருதல் என்பவைகளை பெற்றுத் தந்து வந்தன. ஒன்றுபட்ட நாகை மாவட்டத்தில் இரண்டு இயக்கங்களின் விவசாய தொழிலாளர் சங்கத்திலும் தலித் மக்கள் பெருந் நம்பிக்கை கொண்டு அந்த இயக்கங்களின் வழிகாட்டலில் பெரும் போராட்டங்களை, கலகங்களை நடத்தினர். ஆண்டைகள் பெருத்த ஏமாற்றத்தையும், அவமானத்தையும் சந்தித்து வேறு வழியின்றி சில உரிமைகளை வழங்க நிர்பந்திக்கப்பட்டனர். தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் கடின உழைப்பில் செழித்து படர்ந்த செங்கொடி இயக்கம் தொடர்ந்து விவசாய மக்களின் கூலி உயர்வு, சங்க உணர்வு மற்றும் மனிதநேய வாழ்விற்கான பெரும் போரை தொடர்ந்தபடி இருக்க, அதுகாறும் செங்கொடி இயக்கத்தோடு தோளோடு தோள் நின்று உழைத்திட்ட திராவிட இயக்கத்தின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிலைப்பாடு பெரியார் அவர்கள் பச்சைத் தமிழன் காமராஜர் அவர்களைத் தேர்தல் சமயத்தில் ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்த பொழுதில் சிக்கலில் ஆழ்ந்தது.

பெரியாரோடு இந்த ஒரு கருத்தில் உடன்பட மறுத்து அதுகாறும் பெரியாரின் சீடராக திராவிடர் கழகத்தின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் இருந்த தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் செங்கொடி இயக்கத்தின் கீழான விவசாய தொழிலாளர் சங்கத்தோடு சேர்ந்து தொடர்ந்து இயக்க வேலைகளில் ஈடுபடுகிறார். அண்ணாதுரை அவர்களும், பெரியார் அவர்களும் காங்கிரஸ் உறவு கொள்ள, கீழத்தஞ்சையின் ஆண்டைகள் இயல்பில் காங்கிரஸாராக இருக்க, சிக்கலில் திராவிடர் கழக விவசாய தொழிலாளர் சங்கம் இருக்க, செங்கொடி இயக்கத்தின் வளர்ச்சி மேலும் கூடுகிறது. இதில் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் தோழர் எவ்வாறு செயல்பட்டார் என்பதோடு பெரியாரிடமிருந்து பெற்ற சுயமரியாதை கருத்துகளும் செங்கொடி இயக்கத்தின் மார்க்சிய கோட்பாடுகளையும் களத்தில் இணைத்து பல வெற்றிகளை போராட்டக் களத்தில் பெற்ற நிகழ்வுகளே இப்புத்தகம். அதை நூலில் இருந்து நீங்கள் படித்து உணர முடியும்.

நூல் ஒரு பெரும் பீடிகையோடு தொடங்குகிறது. அது வெண்மணீ படுகொலை உண்மைக் காரணம் என்ன என்பதாக இருக்கிறது. ஒரு பிரிவு தொடர்ந்து இது வர்க்கப் பிரச்சனை என்பதைவிட வருணபேத எதிர்ப்பே இருக்கிறது என்றே சொல்லி வருகின்றனர். செங்கொடி இயக்கம் மிக பலமாக இது வர்க்க போரே என்று சொல்லிவந்த போதிலும் வர்க்க பேதத்தோடு வருண பேதமும் பிரச்சனைக்குள்ளாக்கினோம் என்றே சொல்லி வருகிறது. பி.சீனிவாசராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறும் தென்பரை முதல் வெண்மணி வரை நூற்கள் அதை மிக சரியாக சொல்கின்றன. அதையேதான் இந்நூலில் தோழர் பசு. கவுதமன் வலியுறுத்துகிறார். ஆனால், வருண பேத எதிர்ப்பு என்பதும் உள்ளது என்றே அழுத்தி சொல்கிறார். மேலும் செங்கொடி இயக்கத்தை விமர்சனம் செய்வதாக சில இடங்கள் இருந்தாலும், திராவிட இயக்க செயல்பாடுகளையும், அதிலிருந்து கிளைத்து எழுந்த திமுகவும் பெரியாரின் காங்கிரஸ் ஆதரவு போக்கும் கூட விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்பதே நிஜம்.

தமிழக வரலாற்று சூழலில் தொடர்ந்து இயக்கங்களின் வரலாறுகள் போராட்டங்களின் நிகழ்வுகள் இன்னமும் சரியாக நூலாக்கம் காணப்படுவதில்லை. ஏன், சமீபத்திய ஜல்லிகட்டு பெருநிகழ்வு போராட்டம் குறித்து சரியான நூல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.. அதாவது யாரால் துவக்கப்பட்டது, எவரெல்லாம் பங்கேற்றனர், மாவட்டங்களில் நடைபெற்ற போராட்ட விவரங்கள் என்பது  உள்ளிட்ட விவரங்கள் இல்லை. இது ஜல்லிக்கட்டு போன்று தன்னெழுச்சி போராட்டங்களுக்கு வேண்டுமானால் சரியாகவோ அது தேவை சிறிதாகவோ இருக்கலாம். ஆனால், இயக்கங்கள் கட்டமைக்கும் போராட்டங்களில், பெற்ற வெற்றிகளில், சிந்திய உயிர்களில் என இவை முறையாக தொகுக்கப்பட வேண்டாமா? இந்த நூலில் திரு.ஏ.ஜி. கஸ்தூரிரங்கன் அவர்கள் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அந்த வீரதிரமிக்க விவசாய சங்க தொழிலாளர்கள் சங்கத்தின் (செங்கொடி இயக்கம்+ திராவிடர் இயக்கம்) பல தோழர்களை இங்கு பட்டியலிடுகிறார். தோழர் மீயன்னா பற்றிய குறிப்பு அற்புதம். (பாரதி புத்தகாலயம் தனியே மீயன்னா தோழர் குறித்து ஒரு பிரசுரம் வெளியிட்டு இருக்கிறது) .  

அநேகமாக செங்கொடி இயக்கம் எடுத்த சில போராட்டங்கள் குறித்த புதிய பதிவுகள் இந்நூலில் இருக்கிறது. அதே சமயம் அப்போராட்டங்கள் சில மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும் பதிவாகிறது. ஒட்டுமொத்தத்தில் இரண்டாக இந்நூலினை பார்க்கலாம் என நினைக்கிறேன். ஒரு போராளியின் வழியே கீழதஞ்சையில் ஆண்டாண்டுகளாய் மனிதருக்கும் கீழாய் வைக்கப்பட்ட மக்களின் விடியலுக்காய் அவர்களை சங்கமாக திரட்டி நடைபெற்ற ஒரு பெரும் வீரெழுச்சி போராட்டம். மற்றொன்று ஆதிக்க சாதியில் பிறந்தாலும், நடக்கும் நிகழ்வுகளில் கிளர்ச்சியுற்று, சமூக அடுக்குகளில் கீழாக வைக்கப்பட்டிருந்த மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு போராளியின் வாழ்க்கை வரலாறு.  பெரியார் மீது காலம் காலமாக வைக்கப்படும் ஒரு செய்தியும் இங்கே தகர்க்கப்பட்டு இருக்கிறது. அவர் வெண்மனி படுகொலை குற்றவாளி கோபாலகிருஷன் நாயுடுவை சந்தித்தார் என்பது. அது இல்லை என இப்புத்தகத்தில் ஆணித்தரமாக நிறுவபப்ட்டு இருக்கிறது.


இந்நூலில் தர்க்கத்திற்கு நிறைய இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட வருத்தம் ஒன்று இருக்கிறது. செங்கொடி இயக்க விவசாய சங்க வரலாறு என்றாலே தோழர். பி.சீனிவாசராவ் அவர்களை குறிப்பிடாமல் எவரும் இதுவரை எழுதியதே இல்லை. ஆனால் இந்நூலில் அவர் பெயரை ஒரு முறை கூட குறிப்பிடவில்லை. தோழர். பி. சீனிவாசராவ் அவர்களின் காலத்திற்கு பிறகுதான் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் தோழர் வருகிறார் என்றாலும், செங்கொடிக்கு ஒரு பெரிய எழுச்சி உண்டானது கீழதஞ்சையில் தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் அணுகுமுறையும் இருக்கிறது அல்லவா, பின் அவரை ஏன் குறிப்பிடவில்லை என தெரியவில்லை?

ஆனால் நூலில் ஒரு இடத்தில் தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் சொல்கிறார், “போராட்டக் களத்தில் இரண்டு இயக்கங்களும் சங்கமித்தே பல வெற்றிகளை பெற்றிருக்கின்றன" என்று. அதுதான் இந்நூல் சொல்ல விழையும் பெரும் செய்தி என நான் எண்ணுகிறேன். 

Posted by ramgopal at 09:09 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன், ச, ரிவோல்ட், வெண்மணி

Wednesday, 22 April 2020

தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} - சு. தியடோர் பாஸ்கரன்


தமிழ் வாசகர்களுக்கு தியடோர் பாஸ்கரன் என்ற பெயர் ஒன்று போதும் புத்தகத்தை எடுக்க. சினிமா குறித்ததாகட்டும், இயற்கை குறித்ததாகட்டும் இவர் ஒவ்வொரு புத்தகத்திற்கு செய்யும் ஆய்வுகள், எடுக்கும் தரவுகள் என எல்லாம் அந்த புத்தகத்திற்கு மிகவும் சிறப்பு சேர்ப்பவை.

எளிய மக்களை வெகுவாக கவரும் வெகுசன கலைகளாக உருவெடுத்த மேடை நாடகம், அதை தொடர்ந்து வந்த மௌன படங்கள், பின் வந்த முழுநீள பேசும் படங்கள் ஆகியவவை 1880இல் தொடங்கி 1945 வரைக்குமான காலகட்டத்தில் இந்திய மக்களை அக்கால தமிழகம் அல்லது மெட்ராஸ் ராஜதானி பகுதி மக்களை ஆட்கொண்ட விதமே இந்நூல். சும்மா எதுவும் சொல்வதில்லை, தியடோர் பாஸ்கரன் அவர்கள். ஒவ்வொரு தலைப்பின் பின்னும் தான் எடுத்தாண்ட தரவுகள் குறித்து ஒரு பெரும் பட்டியலே இடுகிறார். ஆம் மக்களே, The message bearers என்ற பெயரில் 1981 காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் 35 வருடங்களுக்கு பின் தமிழ் வாசகர்களுக்கு அகநி பதிப்பகத்தின் நல்ல வடிவமைப்பில் வந்திருக்கிறது.

வெகு சுவாரசியமான பல்வேறு தகவல்கள் நூல் முழுக்க. “வெள்ளை வெள்ளை கொக்குகளா" என நாடக மேடையில் பாடி கே.பி. ஜானகியம்மாள் வெள்ளையர்களை வெரூட்டியதும், தியாக பூமி என்னும் திரைப்படம் வெள்ளையர்களால் தடை செய்யப்பட்டதுமே எனக்கு நினைவில் வரக்கூடிய சுதந்திரத்திற்கு முன்னான நாடக திரை தகவல்கள். ஆனால் இப்புத்தகம் படித்து முடித்த பின் எவ்வளவு கலாச்சார பண்பாட்டு தலையீடுகள் நாடகங்கள், மௌனப் படங்கள், திரைப்படங்கள் வழியாக தமிழக சென்னை ராஜதானி மக்களை இந்த காலக்கட்டத்தில் ஆட்கொண்டு இருக்கிறது என மலைப்பாக இருக்கின்றது.

முன்னது மேடை நாடகம், அதனைத் தொடர்ந்து மௌன படங்கள், பின்னாக பேசும் முழுநீள படங்கள், இறுதியாக விடுதலைகால படங்கள் என நான்கு பகுதிகளாக நூல் பிரிந்துள்ளது. ஒவ்வொரு பகுதி முடிவிலும் குறைந்தது 3 பக்கங்களுக்கு மிகாமல் தரவுகள். அதில் ஆசிரியரது உழைப்பு தெரிகிறது.

நவீன மேடை நாடகங்கள் எளிதாக மக்களை சென்றடைவதற்காக புராணங்களையே பேசுபொருளாக முதலில் கையில் எடுத்தன. இதில் சுவாரசியம் என்னவென்றால் இதே பாதையை தான் முழு நீளப் பேசும் படங்களும் எடுத்தன. சமூக நீதி, பாலின பேதம், தேசிய விடுதலை ஆகியவை குறித்தான பரீட்சார்த்த முயற்சிகளாக செய்யப்பட்ட சின்ன சின்ன தலையீடுகள் எப்படி பிரதான கருபொருட்களாக மாற்றம் கொண்டது என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. வெறும் தலையாட்டல்கள், கைதட்டல்களோடு முடிந்துவிடுகின்ற கலைஞன் பார்வையாளன் உறவு கலை பார்வையாளனிடம் எழுப்பும் கேள்விகள் மூலமே தொடர்கிறது. பின் அந்த உறவும் அது தரும் இணக்கமுமே கலைகளின் வடிவத்தை உள்ளடக்கத்தை தீர்மானிக்கின்றன. ஆம், இப்படித்தான் என்பதற்கு சாட்சியாக புராணங்களை பேசுபொருளாக கொண்டு இயங்கிய மேடை நாடகங்கள் முழுநீள திரைப்படங்கள் பின் எவ்விதம் வெள்ளைக்காரர்களுக்கு தலைவலி கொடுக்க துவங்கியது என்பதையும் அதனால் கொண்டுவரப்பட்ட தணிக்கை முறை இவை குறித்து இப்புத்தகம் சிறப்பாக பேசுகிறது.

இராமர் சீதை காதையில் கதர் சட்டை மகிமையும், நாடகத்தின் பாடல்கள் பாட்டுப் புத்தகங்களாக வந்ததும், டூரிங் டாக்கீஸ் என்ற பெயர் வந்த விபரமும், கார் உதிரி பாகங்கள் விற்பனையாளர் படம் எடுத்ததும், சிறைக்கு பின் சுப்பிரமணியம் சிவா நடத்திய மேடை நாடகங்கள் - அரிசி விளைதல்-மகாபலிபுரம் சிற்பங்கள் - திருவிழாக்கள் - என இவையெல்லாம் மௌனப் படங்களின் கருப்பொருள்களாக ஆனதும்- மௌனப் படங்களை அடுத்து வந்த பேசும் படங்களில் ஸ்லைடு போட்டு பேசியதும் - வசனங்களை பேசுவதற்காக திரைக்கு முன்னதாக ஒருவர் பேசுவதும் - வாத்தியார் என்ற பெயர் ஆசிரியரோடு மட்டுமல்லாமல் கலைகளின் ஆசான் என்பதாக மாறிய கதையும் - மௌன படக் காலங்களில் ஸ்டூடியோ என்ற ஒன்றின்றி வெறும் வெட்டவெளியில் எடுக்கப்பட்டதும் - போர் காலங்களில் சினிமாக்களுக்கு அரசு ஆதர்வு எதிர்ப்பு - என சின்ன சின்ன சுவாரசியங்கள் செய்திகள் புத்தகத்தை வெகு சுவாரசியமாக கொண்டு செல்ல உதவுகின்றன.

அந்தந்த காலகட்டங்களில் அரசியல்வாதிகள் அல்லது ஆதிக்க அரசியலை எதிர்ப்பவர்களது ஆதரவும், தலையீடுமே கலைகளை வீரியமாக்கி இருக்கிறது, அர்த்தமுள்ள ஒன்றாக மக்களுக்கு நெருக்கமான ஒன்றாக மாற்றி இருக்கிறது. கடைசியாக, அதிகாரத்தை மிரட்டி இருக்கிறது, நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது, தடை செய்ய வைத்திருக்கிறது. வெகுசன மக்களின் பிரச்சனைகளை சமுக அவலங்களை எளிதாக மக்களின் மொழியில் சொல்கையில் அவை உத்வேகம் பெறுகின்றன, எழுச்சி கொள்கின்றன.

அ. மங்கையின் மொழிபெயர்ப்பு சிறப்பித்து சொல்ல வேண்டியது. எளிய வாக்கியங்களில் எளிதான வார்த்தை பிரயோகங்களில் செய்தியை வாசகர்களுக்கு கடத்துவதில் சிரமம் ஏதுமில்லை. தண்டோராக்காரர்கள் என்னும் பெயரும் வெகு பொருத்தம்.

சமூக அரசியல் கூறுகளை அலசி ஆராய்வதற்கான ஒரு பண்பாட்டு வழிமுறை ஒவ்வொரு சமூகத்திற்கும் தேவை என்பதாக ஒரு வரி வருகிறது. ஆம், அவை எளிய மக்களை தொடும் வகையில் இருந்தால் அக்கலையும் வளர போஷிக்கப்பட, அதனால் அக்கலை பேசும் பேசுபொருளும் மக்கள் உணர்வாக மாறும் என்பதுமே இப்புத்தகம்.

தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} - சு. தியடோர் பாஸ்கரன், தமிழில் அ.மங்கை, அகநி வெளியீடு, விலை 220. பக்கங்கள் 239.






Posted by ramgopal at 19:11 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: அ.மங்கை, அகநி, தண்டோராக்காரர்கள், தியடோர் பாஸ்கரன், நூல் குறித்து, வாசிப்பு

Saturday, 11 April 2020

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது. அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது. எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர். தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு. ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது. புதைக்க கூட இடமில்லை. இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை. இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில்.

இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில், ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது, அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல. ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஆம், மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்றனர். சேதம் அதிகம் உள்ள புத்தகங்களை தவிர்த்து மீதம் இருப்பவற்றை சேகரிக்கின்றனர். சுத்தம் செய்கின்றனர். முறையாக நூலகங்களில் அடுக்குவது போல் எண்ணிட்டு அடுக்குகின்றனர். இவ்வளவும் செய்த பிறகு அந்த கேள்வியை அவர்கள் எதிர்கொள்கின்றனர். நூலகத்திற்கு வாசகர்கள் எங்கிருந்து வருவார்கள்? வருவார்களா?

ஆனால், அவர்களின் அந்த கேள்வியை அர்த்தமற்றதாக்கி வந்து நின்றனர் மக்கள். சரியான உணவில்லை, மின்சாரம் இல்லை, மருந்துகள் இல்லை, ஆனாலும் வாசிப்பை நோக்கி மக்கள் வந்தனர். புத்தகம் வாசித்தல் மட்டுமல்ல தீவிர வாசிப்பு கொண்ட இளம் போராளி ஒருவர் புத்தகம் வாசிக்க மக்கள் கேட்கின்றனர், விவாதம் செய்கின்றனர், அவர் விவாத தலைமையும் கொள்கிறார். நம்ப முடியாத ஒன்றாக நீங்கள் நினைத்தால், வேறு வழியில்லை எனக்கு உங்களை காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு வெளியிட்டிருக்கும் இந்த புத்தகத்தை வாசிக்க சொல்வதை விட.

அப்படியா ஒரு நூலகமா, இந்த சூழலிலா, எப்படி நூலகம் நடத்தப்படுகின்றது என்ற நமது ஆவலை போலவே பிரான்ஸ் நாட்டு பத்திரியாளர் தெல்ஃபின் மினூய் அவர்களுக்கும் எழ அவர்கள் மிக சிரமப்பட்டு தராயா நகரத்தின் போராளி ஒருவரை தொடர்பு கொள்கிறார். வீடியோ கால்தான் எப்பொழுதும். உங்கள் நூலகத்தை பற்றி பேசுங்கள் என்ற சொன்ன போது அந்த போராளி இடைவிடாமல் பேசுகிறார், நூலகத்தின் வாயிலாக அந்த தாராயா நகரின் கலாச்சாரம், பண்பாடு, எழுத்தாளர்கள், சிரிய கவிஞர்கள், தாராயா நகரின் போர்க்குணமிக்க வரலாறு என எல்லாம் வெளிப்படுகிறது. மினூய் அதை அப்படியே வார்த்தைகளில் வடிக்க, இதோ இந்த நூல் நம் முன்னே.

இறுதியாய் ஒரு கொடும் நாளில் பஷாரின் விமானங்கள் அம்பரல்லா குண்டுகள் போட்டு தராயா நகரை தகர்க்க, அந்த நூலகமும் தகர்க்கப்படுகிறது. போராளிகள் வேறு வழியின்றி நகரத்தை விட்டு செல்கின்றனர். ஆனாலும், என்ன அந்த போராளிகள் போகும் இடம் தோறும் வாசிப்பை விதைப்பார்கள், தராயா நகரம் என்ற ஒன்று முற்றாய் இற்று விழும் வரை எவரோ ஒருவர் அங்கே சிதிலங்களில் ஒரு பக்கத்தை எடுத்து வாசித்து கொண்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு மிக சிறப்பு. என்ன எளிமை. வார்த்தைகளில் சிக்கனம். அதைவிட வரிகளின் நீளம் குறைவு.

வாசிப்பை நேசிப்போர், ஏன் இந்தப் புத்தகத்தை தவறவிடவேண்டும். என்ன செய்ய தோழர், படிக்கக் நேரமே கிடைக்கலே என்று சொல்வோரும் இப்புத்தகத்தை வாசித்துவிடலாம்.

சிரியாவில் தலைமறைவு நூலகம், தெல்ஃபின் மினூய், தமிழில் : எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி, காலச்சுவடு வெளியீடு, விலை: 175, பக்கங்கள் : 144.

குறிப்பு : என் நண்பர் தோழர் ஜெ.பாலசரவணன் மார்ச் மாத புதிய புத்தகம் பேசுது இதழில் எழுதியுள்ள இந்த நூல் அறிமுகத்தை கட்டாயம் வாசியுங்கள். அது இந்த அறிமுகத்தை விட உங்களுக்கு பல செய்திகள் எளிமையாக சொல்லும்.
https://bookday.co.in/book-introduction-library-of-the-underground-in-syria/






Posted by ramgopal at 22:47 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: காலச்சுவடு, சிரியாவில் தலைமறைவு நூலகம், நூல் அனுபவம், வாசிப்பு

பார்த்தீனியம் - தமிழ்நதி


ஈழப்போர் குறித்த இலக்கியங்கள் வரிசையில் என்னுடைய அடுத்த வாசிப்பு "பார்த்தீனியம்". சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வாசிக்கப்பெற்ற கோவிந்தனின் புதியதோர் உலகம் என்ற நூலில் தொடங்கியது என் ஈழ போர் குறித்த வாசிப்பு. அப்படியே ஷோபாசக்தி அவர்களின் "ம்", “கொரில்லா", “இச்சா" என தொடர்ந்து கூர்வாளின் நிழலில், நீண்ட காத்திருப்பு என தொடர்ந்து இப்போது பார்த்தீனியம். சில பெயர்கள் மறந்துவிட்டன. {ஒரு பனை... என தொடங்கும் நூலும் இதில் அடக்கம்}.

நாவல்கள் வாசிப்பில் ஒரு சுக அனுபவம் இருக்கிறது. அது நமக்காக காலங்களை கடத்தும். கொரானா நோய் தொற்று பரவல் ஊரடங்கு என வெறுமை சூழந்திருந்த காலத்தில் பரணி, தமயந்தி, அமரநாயகம், தனபாக்கியம், ஜெனிபர் என பாவப்பட்ட ஈழதமிழர்களோடும், எங்கே வானூர்தியும் ஹெலிகாப்டரும் தலைக்குமேல் பொம்ப் இடுமோ என்ற கவலையுமாக 512 பக்கங்கள் சுவாரசியமாக கடக்க செய்திட்ட எழுத்து வித்தைக்கும், நாவல் நிகழ் காலத்தில் நம்மை காலமாற்றம் செய்தமைக்காக தமிழ்நதி பாராட்டுக்குரியவர்.

80களில் நடக்கும் கதை களம். இதில் எத்தனை கதாபாத்திரங்கள் உண்மை, எவை புனைவு என்பது தமிழ்நதிக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று சொல்ல இயலும், கதாபாத்திரங்களின் பெயர்கள் வேண்டுமானால் புனைவாக இருக்க கூடும், ஆனால் கதை மாந்தர்களின் இயல்புகள் உண்மையாகவே இருக்கும் என்பது ஈழப் போர் நாவல்களின் யதார்த்தமாக இருக்கிறது. ஒரு பரணியோ, அமரநாயகமோ, ஈஸ்வரியோ, சுகந்தன், தமயந்தி, வானதி என எல்லோரும் ஏதோ ஒரு பெயரில் நிச்சயமாந்தர்களாகவே இருப்பர்.

முதலில் இலங்கை ராணுவத்தின் அட்டூழியம், கொடுமைகள், வன்முறைகள், பிறகான இயக்கங்களிடையே இருந்த கசப்புணர்வு கொலைகளாக மாறுவது, என்பதிலிருந்து ஈழப்போரில் இந்திய ராணுவம் செய்திட்ட அட்டூழியங்கள் அக்கிரமங்களே கதையின் மைய சரடாக மெல்ல நகர்கிறது. பிரதானமான கருப்பொருளாக தோழமை இயக்கங்களிடையே நிகழ்ந்த கசப்பான போரின் இயல்பை குலைத்த பகைமை, கொலைகள் என்பதாகவே இருக்கிறது. இயக்கம் உண்மையானது நீதியானது என நினைத்து சேரும் இளைஞன் இயக்கத்துள் நடக்கும் காம்ப்ரமைஸ் கண்டு வருந்தியும், இயக்கங்கள் காலப்போக்கில் செய்திட்ட தேவையற்ற கொலைகள் என்பதை கண்டு வேதனையும் கொள்கிறான். சக மனிதர்கள் சாக கொடுத்துவிட்டு, இனத்தின் பெண் குழந்தைகள் வேட்டை இரையாக மாறிவிட்ட பொழுதிற் கூட கையறு நிலையில் இருப்பதாக இயக்கத்தில் இருப்பவர்களே உணரும்படியாக வல்லாதிக்க அரசின் கொடுமையும், அந்த வல்லாதிக்க அரசோடு இணைந்து சொந்த குடிகளையே சாகடிக்கும் இயக்கங்களின் செயல்பாடும் அவனை பெரிதும் வருந்த செய்கிறது, குழப்புகிறது, முடிவில் தேவைப்படும் காலத்தில் தேவையற்ற முடிவினையும் எடுக்க செய்கிறது. [இங்கே வல்லாதிக்க அரசு என்பது இந்திய அரசே என சொல்ல தேவையில்லை}. ரொம்பவும் நாசூக்காக பிரதான இயக்கமாக மாறிய விடுதலைப்புலிகள் இயக்கத்துள்ளும் எழுந்திட்ட சிக்கல்கள், காம்ப்ரமைஸ்கள், தவறுகள் குறித்தும் குறிப்பிட தவறவில்லை தமிழ்நதி.


ஆனால் இக்கதை அந்த இயக்க இளைஞனின் பார்வையில் மட்டுமே நாவல் நகர்வதில்லை. அவனின் காதலியாக முதலில் அறிமுகமாகும் வானதி என்னும் பாத்திரம் வழியாகத்தான் நாவல் பெரிதும் கடக்கிறது. அந்த வகையில் பெண்களின் பார்வையில் போரினை பார்த்திட்ட இலக்கியப் பார்வை கொண்ட நாவல் என சொல்லலாமா என்றால் நிச்சயமாக. குடிகார கணவரோடும் போர் சூழல் தவிர்த்த இயல்பானதொரு வாழ்வு வாழ ஒவ்வொரு கணமும் ஏங்கும் தனபாக்கியம், எந்த வம்பு தும்புக்கும் போகாதவனாகிய மகனை இராணுவம் பிடித்து செல்ல அதற்காக உயிரற்ற உடலாக நடை போட்ட ஈஸ்வரி அம்மகன் விடுதலை பெற்று நேராக இயக்கத்தில் சேர்கையில் அம்முடிவினை ஆமோதிக்கிறாள். இதுதான் அநேக ஈழ தாய்களின் நிலை என புரிகிறது. முதலில் இயக்கத்திற்காக காதலை தவிர்க்கிறானே என தவித்த வானதி பின்பும் அவன் இயக்கத்தை தவிர்த்துவிட காலநிலை கருதாமல் எடுக்கப்பட்ட முடிவினால் காதலை தவிர்க்கும் பெண்ணாக மாறுகிறாள். ஆம், போர் என்ற கொடுமை காலத்திலும் பூக்கிற பூக்கள் போல காதலும் பூக்கத்தான் செய்கிறது, கைகூடாமல் போகிறது.

முதலில் துவக்குகள் கொடுத்து போரினை ஆதரித்த இந்திய அரசு பின் தனது துவக்குகளால் நேரிடையாக எதிர்கொள்ளாமல் சதியாக சமாதானம் என சொல்லி பின் கொலை புரிந்திட்ட அப்படுபாதகங்களைப் பேசிய நாவல் இது ஒன்றுதானா என தெரியவில்லை. ஆம், அஹிம்சை நாட்டிலிருந்து தான் அவ்வளவு வன்முறைகளும் நடந்தேறின. எப்படி சாதாரணர்கள் மென்மேலும் ஏழைகளாக நிராதவற்றவர்களாக, வெறுமை கொண்டவர்களாக பாவப்பட்ட சனங்களாக போர்ல் மாற்றுகிறது என்பதின் அடுத்த பதிவுதான் பார்த்தீனியம். ஆம், ஈழப்போரின் சிந்திய ரத்தத்தில், துவக்குகளால் சரியப்பட்ட உடல்களின் வெம்மையில், வாழ்வழிந்து அகதிகளாக மாறியவர்களின் தொலைந்த கனவுகளில் எழுதப்பட்ட அடுத்த எளிய படைப்பு இது.

நற்றினை பதிப்பகம் வெளியீடு, 2016 512 பக்கங்கள். #புத்தகம்

Posted by ramgopal at 00:33 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: தமிழ்நதி, நற்றிணை பதிப்ப்பகம், நூல் அனுபவம், பார்த்தீனியம், வாசிப்பு

Monday, 6 April 2020

நீண்ட காத்திருப்பு - அறிமுகம்


எந்த அதிர்ச்சி தரும் தகவலும் இல்லை. ரொம்ப சுவாரசியமாக திரில்லர் போன்றும் இல்லை. இலங்கை போர் தொடர்பான புத்தகங்களில் நம்மால் புத்தகத்தை கீழே வைக்காமல் நெஞ்சம் கனத்து படிக்க முடியாமல் வைக்கப்பட்ட புத்தகங்களில் இது சேராது. ஆனாலும், ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது, இப்புத்தகம் தன்னுடைய வார்த்தைகளில் அதை பொதிந்து வைத்திருக்கிறது. ஒரு மூச்சில் படித்துவிட என்னால் முடிந்தது.

போரில் சிறைபிடிக்கப்பட்ட ஒரு இராணுவ அதிகாரியின் சிறை அனுபவமும், விடுதலைக்கான பின்னான சில தினங்களுமே இப்புத்தகம். இலங்கை கடற்படையின் அதிகாரி கொமடோர் அஜித் போயகொட போரில் விடுதலைப்புலிகளால் சிறைபிடிக்கப்படுகிறார். அவரோடு அப்போரில் கைதான ஒருவர் என தொடங்கி, பின் 22 பேர் இணைகின்றனர். சிறை வாழ்வின் ஆரம்ப காலங்களில் விடுதலைக்கான எந்த சிந்தனையும் இல்லை, எனினும் மரணம் குறித்த பயமும் அவர்களுக்கு அவ்வளவாக இல்லை. ஆனாலும் போரில் இராணுவம் முன்னேறும் தருணங்களில் இவர்கள் சிக்கலுக்கும், புலிகள் முன்னேறும் தருணங்களில் ஆசுவாசமும் பெறுகிறார்கள்.

இந்தப் புத்தகத்தின் கதாநாயகர் கடைசிவரை கொமடோராகவே இலங்கை அரசின் பிரதிநிதியாகவே நடந்துகொள்கிறார். அதைவிட முக்கியம், புலிகளும் அவ்வாறே நடத்த முயல்கின்றனர். ஆனால், அதன் பின்னே செஞ்சிலுவை சங்கத்தின் பங்கும், உலகத்தின் பார்வையில் கண்ணியமானவர்கள் என்ற தோரணையுமே இருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிடாமல் இல்லை. “சார், என்ற விளியிலே கடைசிவரை நடத்துகின்றனர்; அவர் மேல் தாக்குதல் நடத்தப்படவில்லை; சில வேளைகளில் தனித்த மரியாதையும் கிடைக்கிறது.

சிறைவாழ்க்கையிலும் அவரது எதிர்கால நம்பிக்கை என்பது ஒன்று கடந்தகாலங்களின் நினைவிலும், இரண்டு, எப்படியும் இந்த நொடி வாழ்ந்து கடந்துவிட்டால் அடுத்த நொடி காத்திருக்கிறது என்ற எண்ணமும் தருகிறது. சிறைவாழ்வில் ரொம்ப கடினமான பொழுதுகளிலும் இந்த எண்ணங்களுமே 8 வருடத்தை கடக்க வைத்திருக்கிறது.

கொமடோர் புலிகள் மீது வைக்கும் விமர்சனமாக 30 வருட போர் என்பது மனங்களை அயர்ச்சிக்குள்ளாக்கியது என்பதும், 10 வருட காலத்திற்குள்ளாகவே அவர்களை இலக்கை எட்டி இருக்க வேண்டும் என்பதாக மட்டுமே இருக்கிறது. சிங்களவராக இருந்தும் தமிழ் மக்கள் மேல் அவருக்கு வெறுப்பு என்பது இல்லை. மாறாக போரில் பாதிக்கபட்ட பாவப்பட்டவர்கள் என்பதாகவே தமிழர்கள் மீதும் சிங்களவர்கள் மீதுமே இருக்கிறது. இலங்கை ராணுவத்தையும் அவர் விமர்சனம் செய்கிறார். முன்னேற்றம் கண்டு கடந்து சென்ற ராணுவம் இலக்கில்லாமல், இதயமே இல்லாமல் சூறையாடிய தன்மையும் சொல்லி இருக்கிறார். 



விடுதலை பெற்று சுனாமி சமயத்தில் உதவி செய்துவிட தெற்கு இலங்கை நோக்கிய பயணத்தில் தன்னை சிறையில் வைத்திருந்த புலிகளின் பிரதிநிதிகளை பார்க்கிறார். அவர்களும் சேர் எப்படி இருக்கிறீர்கள் என விசாரிக்கிறார்கள். ஒருவர் படகுபயணம் செய்து அவர் குழந்தையுடன் இவரை கண்டு செல்கிறார். இதில் தான் மானுட சாரம் வெளிப்படுகிறது.

சிறைக்காலத்தில் தன்னை புலிகளின் உளவாளி ஆக செயல்படுகிறார் என அரசு குற்றச்சாட்டு வைக்க விடுதலைக்கு பின்னான காலத்தில் அதை அவர் மறுத்து தன்னை நிரூபிக்கிறார். ஆனாலும், சந்தேக நிழல் இன்னமும் மீதி இருக்கிறது. விடுதலை பெற்றதன் பின்னான உலகம் அவருக்கு பெரிய தளர்வையும், வருத்தத்தையுமே தருகிறது. அதிலே தான் இப்புத்தகமும் பிறக்கிறது.

இதை படிக்கும் போது என் நினைவுக்கு ஷோபாசக்தியின் "கொரில்லா"நினைவுக்கு வராமலில்லை. இப்புத்தகத்திலும் ஒரு இடத்தில் இவ்வாறு வருகிறது. அது "புலிகள் சிங்கள இராணுவத்தினரை சிறைபிடித்து அவர்களை நடாத்திய தன்மைக்கும், எதிர் இயக்கத்தவர்/ஒற்றர்கள்/நம்பிக்கை துரோகிகள் என்று சிறைபிடித்து அவர்களை நடத்திய தன்மைக்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது.

வடலி பதிப்பகம் வெளியீடு, 204 பக்கங்கள், நீண்ட காத்திருப்பு- கொமடோர் அஜித் போயகொட, தமிழில் : தேவா

Posted by ramgopal at 08:25 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: அஜித்போயகொட, நீண்ட காத்திருப்பு, நூல் அறிமுகம், வடலி, வாசிப்பு

Monday, 10 February 2020

வெக்க - நூல் வாசிப்பனுபவம்

முதலிலேயே சொல்லிடறேன் ஆமா, இது புத்தக விமர்சனம் அல்ல. இது மட்டுமல்ல இதற்கு முன் நான் படித்த புத்தகங்கள் குறித்த பதிவும் இனி வருபவையும் அப்படியே. ஒரு புத்தகத்தை படிச்சா எனக்கு என்ன பதிய தோன்றுமோ, அதையே பதிவிடுகிறேன். (அப்பாடா..!).

ரொம்ப ரொம்ப தயங்கித்தான் புத்தக கண்காட்சியில் வாங்கினேன். அஞ்ஞாடிக்கு விருதெல்லாம் கொடுத்தது தெரிந்த பிறகுமே எனக்கு தயக்கந்தான். ஏனென்று தெரியவில்லை. இருந்தாலும் என்னவோ தோணி புத்தகம் எடுத்தேன். ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கியவுடன் அப்புத்தகத்தை படிப்பதெல்லாம் உடனே சாத்தியப்படுவதில்லை. சில நேரங்களில் அபூர்வமாக உடனே படிப்பதும் உண்டு. அது புத்தகத்தின் அளவினை பொறுத்தது.

முதல் 10 பக்கங்களை படித்து முடிப்பதற்குள் ரொம்ப சிரமாகிவிட்டது. இப்படியே இன்னும், 25 பக்கங்கள் போனால் அவ்வளவுதான். 180 பக்கமே உள்ள இந்த நாவல் மட்டுமல்ல, இனி பூமணி அவர்களுக்கு டாட்டா காட்டிவிடலாம் என்று கூட எண்ணந்தான். சென்னையை ஒட்டிய குட்டி நகரமான காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்து இதோ இனி வரும் காலமும் கூட புதுவையிலே என்றான எனக்கு அதாவது முழுக்க முழுக்க வட தமிழகத்துகாரனுக்கு தென் திசை தமிழ் கஷ்டம்தான். அதுவும் கிராமம் என்றால் என்ன என்பதை சினிமாவிலும் பேருந்தில் கடக்கையில் ஒரு நிறுத்தமாக பழக்கம் உள்ள ஒருவனுக்கு இக்கதை களம் சிரமமாகவே இருந்தது.

என்னடா இது, சினிமா ஒபனிங் மாதிரி ஒரு கொலை, சேசிங், குண்டுவெடிப்பு என அமர்க்களமாக தொடங்கிய (இது மாதிரி வேறு ஏதேனும் நாவல் துவங்குதா என்ன?, துப்பறியும் நாவல் தவிர) இந்நாவல் கோவில்பட்டி பகுதி(?) தமிழால் சுவாரசியமில்லாமல் போய்விடுமோ என்ற என் பயமும் தயக்கமும் 20 பக்கங்கள் கடந்த பின் காணாமல் போனதா தெரியவில்லை, புத்தகத்தை முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் இன்னும் அடுத்து அடுத்து என்னவெல்லாம் நடக்கவிருக்கிறதோ என்ற எதிர்பார்ப்பும் இரண்டு மூன்று சிட்டிங்கிலேயே நாவலை முடிக்க வைத்தது. புத்தகத்தை முடித்த பின்பும் சில வார்த்தைகள் அர்த்தம் புரியாமலே இருக்கின்றன. யோசிக்கையில் ஒன்றும் பிரச்சனையில்லை, ரஷ்ய நாவல்களில் எத்தனை வார்த்தைகள் புரியாமல் பல படித்திருக்கிறேன். ஆக, வார்த்தைகள் அல்ல உணர்வுகளே புத்தகத்தை கடத்துகின்றன போலும்.

சரி, நாவல் பத்தி என்ன சொல்ல? அது வந்து பல வருஷம் ஆயிட்டுது. ஆனாலும் எனக்கு புதுசுதான். அது மாதிரியே இன்னும் பூமணி என்ற ஆளுமையை அறியாத ஆட்கள் போய் வாங்கி படியுங்க.. வாட்ஸப், டவுன்லோட், டேட்டாஸ்பீட், ஆன்லைன் என சலித்து போன வாழ்க்கையில் சற்று ஆசுவாசம் கொள்ள, வாழ்க்கை சுவாரசியமானதுதான் என சொல்ல வைக்க தமிழ் மண் சார்ந்த எழுத்துக்கள் உதவுகின்றன. நன்றி பூமணி சார். இப்போது, அஞ்ஞாடி படித்துவிடும் ஆசை வந்துட்டுது, ஆனாலும் அளவுதான் பிரச்சனை.

நாவலில் ஒரு இடத்தில் இப்படி ஓர் அம்மா சொல்கிறாள்: "எதுக்கு ஆடு மேய்க்க வேண்டும், நேரத்துக்கு சாப்பிட வராம.. பேசாம வீட்டிலேயே இருக்கலாமா இல்லையா? ".பிறந்த குழந்தையை எப்படி நீட் தேர்வுக்கு தயார் செய்வது என யோசிக்கிற மத்தியதர வர்க்கம் இருக்கையிலே இந்த எளிய தாயின் பெரிய கவலை தான் நாவலை சுவாரசியம் ஆக்கியது எனக்கு..

இந்த அனுபவம் அசுரன் படம் வருவதற்கு வெகு காலம் முன்பு. 2018 டிசம்பரில். 

Posted by ramgopal at 04:13 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: டிஸ்கவரி புக் பேலஸ், நூல் அனுபவம், பூமணி, வெக்க

Thursday, 6 February 2020

பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்


புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம், அதுவும் சிறார் கதைகள் என்னும்போதே ஒரு பயம் மற்றும் தயக்கம் இருந்தது. என்ன பயம், ஏன் தயக்கம் என கேட்டது புத்தக அட்டையில் இருந்த யூமா வாசுகியின் பெயர். மனுசன் சூப்பருங்க. யூமா வாசுகி, நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன் என இன்னும் சில பெயர்கள் சிறார் இலக்கியம் எடுக்கையில் எனக்கு எந்த தயக்கமும் கொடுக்காதவர்களாக இருக்கிறார்கள்.

அப்படியே புத்தகத்தை திறந்தா பூனை, நாய், எலி, கிளி, மாடு, குரங்கு என எல்லாமும் என்னவெல்லாம் கதைகள் சொல்லுது.. அப்படியே கட கடவென பக்கங்கள் வெகு வேகமாக நகர, அட இன்னும் என்னவெல்லாம் இருக்குன்னு மனசுக்குள்ள குறுகுறுப்பு.

தொடர்ந்து கடந்தா அடுத்தாற்போல சிவப்பு மிளகாய் மூக்கன், இட்லி கண்ணன், தோசை நாக்கன் என பூதங்கள், அப்ப மரம், புலி, சிங்கம், முள்ளம்பன்றி என அட போங்க அமர்க்களம்.. அப்படியே இட்லி கண்ணன், தோசை நாக்கன் கதையை அபி கீர்த்தனா குட்டிகளிடம் நம்ம கற்பனையையும் மிக்ஸ் பண்ணி சொன்ன என்னா சிரிப்பு, அப்பா அடுத்த கதை அடுத்த கதைன்னு நச்சரிப்பு. அப்புறம் என்ன அடுத்த ஆப்ப மரம் கதையையும், அந்த தங்க பாம்பு கதையையும் சொல்லியாச்சு. இன்று இரவு முருகேசனும் புலியும், குண்டப்பா குண்டம்மா கதைகளை சொல்லனும்.


பசங்க கிட்ட இந்த கதைகளை சொல்லாம விட்டுறக் கூடாது என நமக்கே ஒரு குறுகுறுப்பு வந்தால் அந்த கதைகள் சூப்பரு என்பது என் கருத்து. ஆமாங்க, அந்த வகையில பேரன்பின் பூக்கள் புத்தகம் புக்ஸ் பார் சில்ரனின் முக்கிய படைப்பு. ஆசிரியர் சுமங்களாவிற்கு வணக்கங்கள். யூமா வாசுகி சார், கலக்குறீங்க போங்க
Posted by ramgopal at 22:01 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: சிறுவர், நூல், புக்ஸ் பார் சில்ரன், பேரன்பின் பூக்கள், யூமா வாசுகி, வாசிப்பு
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Popular posts

  • பாரதியை பயில்வோம்
                       இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் ...
  • DESPITE THE STATE - நூல் அறிமுகம்
      Despite the state. கடந்த 15-20 நாட்களாக ஒரே புத்தகத்துடன் சுற்றி வருகிறேன் . உலகமயத்திற்கு பின்னான இந்தியாவில் எப்படி மாநிலங்...
  • ” பாட்டுத்திறத்தாலே “
    பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவ...
  • நீண்ட காத்திருப்பு - அறிமுகம்
    எந்த அதிர்ச்சி தரும் தகவலும் இல்லை . ரொம்ப சுவாரசியமாக திரில்லர் போன்றும் இல்லை . இலங்கை போர் தொடர்பான புத்தகங்களில் நம்மால் ...
  • பேரன்பின் பூக்கள் - நூல் அறிமுகம்
    புக்ஸ் பார் சில்ரன் மற்றும் சித்திரச் செவ்வானம் இலக்கியம்(?) வெளியீடு. இந்த ஆண்டில் நான் வாசித்த இறுதி புத்தகம். 350 ரூபாய்க்கு 399 பக்க...
  • தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} - சு. தியடோர் பாஸ்கரன்
    தமிழ் வாசகர்களுக்கு தியடோர் பாஸ்கரன் என்ற பெயர் ஒன்று போதும் புத்தகத்தை எடுக்க . சினிமா குறித்ததாகட்டும் , இயற்கை குறித்ததாகட...
  • பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி
    அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் ....
  • The River of Kaveri – Tulika Publishers.
    The River of Kaveri – Tulika Publishers. சமீபத்தில் வாங்கிய புத்தகம். புத்தகத்தின் பக்கங்களில் ஒரு புறம் வரிகளில் வார்த்தைகள் தைத்து நிற...
  • பாவ்லோ பிரையரேவும் அறிவொளி இயக்கமும்
    பாவ்லோ பிரையரே - மிக சமீபகாலமாக பாரதி புத்தகாலயத்தின் புண்ணியத்தில் தமிழகத்தில் ஒரு சில வாசகர்களுக்கும், பல பார்வையாளர்களுக்கும் ஒரு அறிம...
  • பதிமுகம் - நூல் அறிமுகம்
    நீங்கள் கம்யூனிஸ்டுகள் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு கடைசியாக படித்த நாவல் வந்து எத்தனை வருடமிருக்கும் ? அந்த வாழ்வியல் அழகில் மயங...

Recent Posts

Categories

Aparna Karthikeyan (1) Dear Mrs Naidu (1) despite the state (1) DYFI (1) kaveri (1) Leftword (1) Minne Vaid (1) mrajshekhar (1) My Brigadissta Girl (1) Nine rupees an hour (1) P.Sainath (1) PARI (1) review (1) Sarojini Naidu (1) scroll.in (1) SFI (1) The anatomy of hate (1) The East Was Read (1) Thomas Franco (1) tulika publishers (1) Vijay Prasad (1) அ.கரீம் (1) அ.மங்கை (1) அகநி (1) அஞ்சலி (6) அரசியல் (2) அரசியல் கட்டுரை (2) அரவிந்த் குப்தா (2) அழகிய பெரியவன் (1) அறிவொளி இயக்கம் (1) அஜித்போயகொட (1) ஆதி வள்ளியப்பன் (3) இந்துத்துவா (1) இயற்கை வரலாற்று நூல் (1) உடல் நலம் (1) உடல்நலம் (2) உணவு பாதுகாப்பு (1) உலக புத்தக தினம் (3) எடுவார்டோ கலியானோ (1) எதிர் வெளியீடு (1) ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் (1) ஒல்கா (1) கடலாடிகள் (1) கட்டுரை (7) கதை (6) கம்யூனிசம் (1) கலாச்சாரம் (1) கல்வி (9) கல்வியும் / பள்ளிக்கூடமும் (7) கவிதை (3) கற்பித்தல் (2) கஜா புயல் (1) காம்ரேட் டாக்கீஸ் (1) கார்ல் மார்க்ஸ் (1) காலச்சுவடு (1) காவேரி (1) கியூபா (1) குடும்பம் (1) குழந்தைகள் உளவியல் (5) குறுநாவல் (1) கொ.மா.கோ.இளங்கோ (1) ச (1) சஞ்சீவி மாமா (1) சந்திராயன் (1) சமூகம் (4) சர்மிளா சய்யித் (1) சவுத் விஷன் (1) சாக்ரடீஸ் (1) சார்லி சாப்ளின் (1) சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை (1) சிந்தன் (1) சிந்தன் புக்ஸ் (1) சிரியாவில் தலைமறைவு நூலகம் (1) சிறுவர் (1) சினிமா கொட்டகை (1) டிஸ்கவரி புக் பேலஸ் (1) தண்டோராக்காரர்கள் (1) தமிழ்நதி (1) தலித் (1) தாழிடப்பட்ட கதவுகள் (1) தியடோர் பாஸ்கரன் (2) தொழில் (1) தொழிற்சங்கம் (1) நற்றிணை பதிப்ப்பகம் (1) நினைவு நாள் (2) நீ கரடி என யார் சொன்னது (1) நீண்ட காத்திருப்பு (1) நூல் (4) நூல் அறிமுகம் (13) நூல் அனுபவம் (3) நூல் குறித்து (8) நூல் விமர்சனம் (9) பகத்சிங் (2) பணிக்கரின் பேத்தி (1) பழங்குடி (2) பாந்த் சிங் (1) பாரதி புத்தகாலயம் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பார்த்தீனியம் (1) பாவ்லோ பிரையரே (1) பி.எஸ்.கிருஷ்ணன் (1) பிறிதொரு பொழுதில் (1) புக்ஸ் பார் சில்ரன் (4) புதுவை (1) புதுவை சிபிஐஎம் (1) புத்தகம் (7) புத்தகம். செழியன் (1) பூமணி (1) பெண் (1) பெண் கல்வி (1) பெண் விடுதலை (1) பேரன்பின் பூக்கள் (1) மணல் பூத்த காடு (1) மருதன் (1) மொழிபெயர்ப்பு (1) யூமா வாசுகி (2) ரமேஷ் பாபு (1) ரிவோல்ட் (1) ரேவதி லால் (1) ரேஷன் கடை (1) வட ஆற்காடு (1) வடலி (1) வம்சி வெளியீடு (1) வறீதையா கான்ஸ்தந்தின் (1) வாசகசாலை (1) வாசிப்பு (28) வாசிப்பு பட்டறை (3) வாசிப்பு முகாம் (1) வாழும் மூதாதையர்கள் (1) வெக்க (1) வெண்மணி (1) ஜி.செல்வா (1)

Blog archive

  • ▼  2021 (1)
    • ▼  February (1)
      • DESPITE THE STATE - நூல் அறிமுகம்
  • ►  2020 (17)
    • ►  September (1)
    • ►  April (4)
    • ►  February (2)
    • ►  January (10)
  • ►  2019 (16)
    • ►  December (8)
    • ►  November (3)
    • ►  October (5)
  • ►  2017 (4)
    • ►  February (3)
    • ►  January (1)
  • ►  2016 (1)
    • ►  October (1)
  • ►  2015 (1)
    • ►  January (1)
  • ►  2013 (3)
    • ►  October (1)
    • ►  August (1)
    • ►  June (1)
  • ►  2012 (5)
    • ►  September (2)
    • ►  July (1)
    • ►  May (1)
    • ►  March (1)
  • ►  2011 (2)
    • ►  April (1)
    • ►  March (1)
  • ►  2010 (9)
    • ►  December (2)
    • ►  October (1)
    • ►  August (1)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2009 (27)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (1)
    • ►  July (2)
    • ►  June (5)
    • ►  May (4)
    • ►  April (6)
    • ►  March (1)

Blogger Pages

  • Home

Text Widget

Simple theme. Theme images by luoman. Powered by Blogger.