இந்த புத்தகத்தை யாரெல்லாம் படிக்கலாம்? கோயமுத்தூர் வாசிகள் முதலில் படிக்க வேண்டும். நம் ஊரில் என்ன நடக்கிறது அதன் பின்னணி என்ன என்பதை நாமே அறியாவிட்டால் எப்படி? அடுத்து திருப்பூர் நாகர்கோவில் வாசிகள் மற்றும் சென்னை வாசிகள். அப்புறம் என்ன, விரைவில் தமிழகமெங்கும் குடிநீர் விநியோகம் தனியார் மயமாக உள்ளதால் எல்லா தமிழக மக்களும். ஸ்மார்ட் சிட்டி கோதாவில் பல விஷயங்கள் நடந்து வரும் புதுச்சேரி மக்களுக்கு இந்த அபாய பின்னணி தெரியவேண்டியது அவசியம்.
சரி, அப்புறம் யாரெல்லாம் படிக்க வேண்டும் என்கிறீர்களா? எப்போதும் மக்களுக்காக களம் காணும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் அவசியம் வாங்கிப் படித்தாக வேண்டும். களத்தில் அறிவு இன்றி எப்படி? அப்புறம் தலித் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக சொல்லி நிற்கும் கட்சியினர் அதன் உறுப்பினர்கள். ஏனென்றால் எப்போதும் பாதிப்பு அடித்தட்டு மக்களுக்கு தான் முதலில் நேரும். சரி, இவர்கள் படித்தால் மட்டும் போதுமா?
தரமான குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்றும், நீர் என்பது வணிக பொருளல்ல எப்போதும் என நினைப்பவர்களும், இந்த கம்யூனிஸ்டுகள் எப்போதும் பயமுறுத்துவதே வேலையாக வைத்திருக்கிறார்கள் அப்படியெல்லாம் தண்ணீர், மின்சாரம் எல்லாம் தனியார்மயமாகாது என அலுத்துக் கொள்பவர்களும், தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுப்பது என்கிற இனத்தில் வந்தவர்கள் இனப்பெருமை காத்திட வேண்டாமா அதற்காவது படித்திட வேண்டும். அம்மா நீர் வந்த போதே இது ஏற்பதற்கில்லை, என்ன சொன்னாலும் குடிநீரை வணிகப்படுத்துகிறது தமிழக அரசு என கருத்து கொண்டு அந்த அரிதான அதிசயப் பிறவிகளா நீங்கள், தோழர் முருகவேள் அவர்களும் பாரதி புத்தகாலயத்தாரும் உங்களுக்கு துணையாக இருக்கிறார்கள்.
கடைசியாக, எங்கோ இருக்கும் உலக வங்கிக்கு கோயமுத்தூர் திருப்பூர் மீது அப்படி என்ன கோபம் இருக்க போகிறது என்றோ அல்லது பிரான்ஸ் சூயஸ் நிறுவனத்திற்கு இந்தியா எப்படி கண்ணுக்கு தெரிய வந்தது என்கிற சந்தேகம் உள்ளவர்கள் படிக்கவும். அப்படியே மக்கள் ஒன்றும் சும்மா இருக்க மாட்டார்கள் கொதித்து எழப் போகிறார்கள் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு, உலையில் சோறு கூட சும்மா பொங்காது, கொதித்தால் தான் பொங்கும், கொதிக்கிற வேலையை நாம் செய்ய இந்தப் புத்தகத்தின் துணையுடன் தான் செய்ய முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
குறிப்பாக, பெண்கள். இவர்கள் தான் நீரோடு அதிகம் இருப்பவர்கள். சமையல் செய்வது, துணி தோய்ப்பது என எல்லாவற்றுக்கும் தேவையான நீரை காசு கொடுத்து பெற வேண்டும் என்பது என்றால் என்ன அவர்களோடு பேசிப் பாருங்கள். ஆம், பேசிப் பாருங்கள் அவர்களாகவே வீதிக்கு வருவார்கள்.
தோழர் இரா. முருகவேள் மிக விரிவாக பலவற்றையும் பதிவிட்டு உள்ளார். 90களில் தொடங்கிய உலகவங்கி, ஐ.எம்.எப் ஆகியவையோடு தொடங்கிய முதலாளித்துவம் எப்படி தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்து சாதாரண மக்களை விழுங்க எத்தனிக்கிறது என்பதையும். எப்படி இந்தியாவெங்கும் தண்ணீர் வணிகப் பொருளாகி இருக்கிறது என்பதையும், அதன் பின்னே உள்ள பன்னாட்டு பகாசுர கம்பனிகள் குறித்தும் பல தகவல்கள் சொல்லி இருக்கிறார். சில புதிய அதிர்ச்சிகர இதுவரை அவ்வளவாக கவனத்திற்கு வராத தகவல்களும் உள்ளே இருக்கின்றன. மிக முக்கியமான நேரத்தில் வந்திருக்கிற சரியான புத்தகம்.
Comments