Skip to main content

காற்றலை வழியாக வீடு நிறைத்தவர்




கொஞ்சம் உங்கள் பழைய நினைவுகளை அசைபோடுங்களேன். அதாவது ஏகதேசம் தொலைக்காட்சி பெட்டிகள் நமது வீட்டின் அந்தஸ்தினை கூட்டிய காலங்கள். வானொலி என்னும் ஊடகம் விவிதபாரதி, ரூபவாஹிணி என்று மாயம் காட்டிய காலங்கள். குடும்பம் குடும்பமாக அதிகாலை வந்தே மாதரம் என்னும் வானொலியில் விழித்த காலங்கள். "பிரேக்கிங் நியூஸ்", பிளாஷ் நியூஸ்" என்று சொல்லி சொல்லியே எந்த செய்தியும் நம்மை சலனப்படுத்தாமல் மனம் மரக்கட்டையாக்கிய அநியாய செய்தி தொலைக்காட்சி சேனல்கள் இல்லாமல், செய்திகள் வாசிப்பது சிவராமன் என்று ஒரு குரல் செய்தியின் தன்மையை நம்மை உணர செய்திட்ட அந்த நல்ல காலம். எல்லா நாட்களிலும், எல்லா வீடுகளிலும் அநேகமாக காலை 7:25 மணிக்கு சமையலறையில் இருக்கும் அம்மாவிற்கும், பத்திரிகையில் முகம் பார்த்திருக்கும் அப்பாவிற்கும், நேற்றைய வீட்டு பாடத்தை அவசர அவசரமாக செய்யும் குழந்தைகளுக்கும், தாத்தா, பாட்டி என அனைவரின் காதுகளையும், சிந்தையையும் ஒருசேர சேர்த்த வானொலியின் "இன்று ஒரு தகவல்" சொன்ன முகம் தெரியாத அந்த குரல் ஒலித்த காலம்.



அந்தக் குரல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுடையது. "அதாவது", என சற்றே இழுத்து தொடங்கும்போது வானொலியை நோக்கி நம் கவனம் முழுமையும் இழுப்பவர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தென்கச்சிநத்தம் என்கிற ச சிற்றூரில் பிறந்தவர். படித்தது விவசாயம். வானொலியில் பணி கிடைத்ததும் விவசாயத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கே. அதுநாள் வரை விவசாய அறிவிப்புகளை "நெல் பயிரில் கும்பகோணம் பகுதியில் பூச்சிகடி அதிகம் தென்படுகிறது, அதற்கு ......... போடவும்" என்கிற ஏதோ வேதாகமம் படிக்கும் பாதிரியின் குரலில் ஒலித்ததை மாற்றி "ஆங்.. கும்பகோணம் பகுதியில் இருக்கும் விவசாயிகளே, உங்க அருமையான உழைப்பில் விளைந்திருக்கும் நெற் பயிரிலே பூச்சிங்க தொல்லை அதிகமாக இருக்குதாமா, என்ன?, நீங்க அந்த........ பூச்சி மருந்தை போடுங்க, கட்டுப்படுத்திடலாம், ஒன்னும் கவலையில்ல, விளைச்சல் அமோகமா இருக்குமுங்க" என்கிற தொனியில் விவசாயிகளோடு தோள் நின்று முதன்முதலில் வானொலியில் சொன்னவர். இது ஏதோ எளிதான விஷயம் என்றெல்லாம் நினைக்காதீர்கள். சாஸ்திரிய சங்கீதத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நாட்டுப்புற கலைகளை சவலைப்பிள்ளையாக கவனிக்கும் வானொலியில் இத்தகைய மாற்றத்திற்கெல்லாம் பெரிய போராட்டத்தினை நடத்தியாக வேண்டும். அந்த வகையில் ஒரு கலகத்தை ஏற்படுத்தியவர் தென்கசசியார்.

இதற்குப்பிறகே அவருக்கு புகழினை தந்த "இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சியின் தொடக்கம். சென்னை வானொலியில் அவர் பணியாற்றி வந்த சமயத்தில்தான் இந்த நிகழ்ச்சியை அவரே குறிப்பிடுவதை போல் அபபோதைய சென்னை வானொலியின் இயக்குநர் திரு.கோ.செல்வம் என்பவரது முன்முயற்சியால் துவங்கியது. ஒரு முறை அவருடைய நண்பரோடு பேசும்போது தெரிய வந்தது, இந்த நிகழ்ச்சி ஒரு "ஃபில்லர்" (ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதிக்கும், அடுத்த நிகழ்ச்சியின் துவக்கத்திற்கும் இடையே உள்ள சில மணித்துளிகள்) என்கிற அடிப்படையிலேயே துவங்கப்பட்டது. பின்பு வந்த காலங்களில் தென்கச்சியாரின் உழைப்பினாலும், தொடர்ச்சியான வாசிப்பினாலும் அந்த நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்தை ஈட்டித்தந்த நிகழ்ச்சியாக பரிணமித்தது. வானொலி வரலாற்றிலேயே சுமார் 12 ஆண்டுகள் தொடர்ந்து வந்த நிகழ்ச்சி அது ஒன்றே. ஒரு செய்தியை குட்டிக் கதையாக்கி, இறுதியில் ஒரு நகைச்சுவை துணுக்கோடு 3 முதல் 4 நிமிடங்களில் சுவைப்பட சொல்ல முடிந்தது தென்கச்சியாரின் திறமை..

தென்கச்சியாரின் உழைப்பும் வானொலியின் அவரது பற்றும் வியப்பிற்குரியது. வானொலி நிகழ்ச்சிகளெல்லாம் சுமார் 2 முதல் 3 மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டு நிகழ்ச்சிகளை தயார் செய்துகொள்ள வேண்டும். அப்போதெல்லாம் கணிப்பொறி வராத காலம். வட்டமாய மிக அழகாய் ஒரு ஒழுங்கோடு சுழலும் இந்து என்ற பெயர் கொண்ட டேப் கொண்டே நிகழ்ச்சிகளை பதிவு செய்துகொள்ள வேண்டும். திடீரென்று அறுந்துவிட்டால் ஓடிச்சென்று அறுந்த இடத்தை ஒட்டி பின் மீண்டும் துவங்க வேண்டும். அது எப்போது அறுந்து விடும் என்பது தெரியாது. நாம் பேசும்போது மிக கவனமாக பிசிறில்லாமல் பேசிவிட வேண்டும். அதற்காகவே பலமுறை ரிகர்சல் எல்லாம் செய்துகொண்டு பேசுவார்கள். தென்கச்சியார் ஒரு டேக்கிலேயே முடித்து விடுவாராம். இப்போது டேப் இல்லை. பேச்சின் நடுவில் தும்மினாலும், இருமினாலும், கனைத்தாலும் எடிட்டிங் செய்துவிடலாம். ஒவ்வொரு நாள் "இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சியின் துவக்கத்தில் பதட்டத்தோடே இருப்பாராம். முடிந்ததும் தான் தண்ணீர் குடிப்பாராம். இந்த பதட்டம் மிகச்சிறந்த பாடகர்களுக்குகூட ஒவ்வொரு மேடை கச்சேரிக்கும் முன்னரும் இருக்குமாம்.

வானொலியில் ஒரு நிகழ்ச்சி பதிவு செய்வதென்பது ஒரு நபர் வேலையல்ல. சுழலும் டேப் முன்னர் ஒருவர் அமர்ந்து பதிவுக்கருவியை இயக்க வேண்டும். பேசுகிறவர் ஸ்டுடியோவில் பேச வேண்டும். அப்போதுதான் சாத்தியம். ஆனால் தென்கச்சியார் அவரது நிகழ்ச்சிகளை தனியாகவே பதிவு செய்வாராம். அதுவும் அதிகாலை 6:30 மணிக்கே. ஒரு முறை அவர் நிகழ்ச்சியை பதிவு செய்துகொண்டிருந்தபோது துப்புரவு செய்யும் பெண் அந்த காலைப்பொழுதில் அவர் தனியாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை பார்த்து பயந்தேவிட்டாராம். தென்கச்சியாரை "ஏன் தனியாய் பதிவு செய்கிறீர்கள்? யாரும் கேட்டுவிடப்போகிறார்கள் என்கிற பயமா?" என கேட்டபொழுது, "எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம். யாரும் எதிரில் இருந்தால் பேசவராது, அதனாலே நானே தனியாகவே பதிவு செய்யத் தொடங்கினேன்" என்றாம் பல்லாயிரக்கணக்கான வானொலி நேயர்களை காற்றலையின் மூலம் தன் குரலில் கவர்ந்தவர்.

இன்று தென்கச்சி கோ.சுவாமிநாதன் நம்மோடு இல்லை. அவர் குரல் நம் குட்டிக்காலத்து நினைவுகளாக நம்மோடு பலகாலம் இருக்கும்.


Comments

N.Mani said…
very good observation about thenkatchi
N.Mani said…
very good observation about thenkatchi

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற