Skip to main content

வாழ்வின் உயிர்த்துளி ஏந்தியிருக்கும் குவளைகள்........




சைப்ரஸ் மரத்தால்
நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பான வகையில்
ஒரு பெட்டி செய்தேன், எதற்காக?
அதில் பை லெடியன் என்ற
எனது பெயர் குறிக்கப் பட்டிருந்தது
என் வாழ்நாள் முழுவதும் ஓர் எழுத்தாளனாகவே
இருந்துவிட்டேன்..
என் மூவாயிரம் கவிதைகளையும், உரைநடையையும்
எழுபது பாகங்களாக நான் சேகரித்து வைத்தேன்
கடைசியில் அவை அழிந்தும் தொலைந்தும்
போய்விடும் என்று எனக்குத் தெரியும்
இருந்தும்
அவை வீசி எறியப் படக் கூடாது என்றே விரும்பினேன்
எனவே அவற்றைப் பூட்டி
ன் கவனத்திலேயே வைத்திருப்பேன்.
எனக்கு மகன்களோ
என் எழுத்தின் மீது கவனம் கொண்டவர்களோ
இல்லை
என்னால் செய்ய முடிந்ததெல்லாம்
அவற்றை என் மகளிடம் கொடுத்து
என் பேரனிடம் ஒப்படைக்க விடுவதுதான்...


- சீனக் கவிஞன் பை ஜூயி
(கி பி 772 - 846)
தமிழில்: சுந்தர்ஜி



பா
ங்க் ஒர்க்கர்ஸ் யுனிட்டி பத்திரிகையின் ஏப்ரல் இதழின் முகப்பு அட்டை என்னை பாதித்தபடி இருக்கிறது. மாநகரத்தின் மழை நீர் பெருகிய தெருவின் குறுக்கே, தான் நடக்கவே தள்ளாடும் மனிதர் ஒருவர் மெனக்கெட்டு புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு கடக்கும் அந்தக் காட்சி (புகைப்படம்: சி சி விஜயகுமார்) எத்தனையோ சிந்தனைகளை விதைத்தது. கம்சனிடமிருந்து காப்பாற்றி குழந்தைக் கண்ணனைத் தனது தலைமேல் தாங்கி யமுனை நதி கடந்து செல்லும் வசுதேவர் பற்றிய புராணக் கதையைக் கூட நினைவிற்குக் கொண்டுவந்தது. புத்தகங்களின் மேலான காதல் அவற்றைப் பார்க்கும்தோறும் மேலும் மேலும் கூடுகிறது.

எத்தனையோ கேளிக்கைகள், விளையாட்டுக்கள், ஊடகத் தாக்கங்கள் வந்தபின்னாலும், விடாப்படியாய்ப் புத்தகம் தேடி அலைபவரும் நிறைய கண்ணில் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். புத்தக் கண்காட்சிகளில் கூட்டம் பொங்கத் தான் செய்கிறது. விதவிதமாகவும், ரசனை மிக்கதாகவும் புதுப்புதிதாய் நூல்கள் குவிகின்றன. நாளேடுகளில், வார மாத இதழ்களில் நூல் மதிப்புரை, புத்தக அறிமுகம் எல்லாம் இடம் பெறவே செய்கின்றன. வாசகர் இல்லாத உலகத்தில் இவற்றுக்கு என்ன வேலை இருக்க முடியும். எனவே வாசகர் திரள் இருக்கத்தான் செய்கிறது... புத்தக தினத்தைத் தமது சொந்த பிறந்த நாளாகவே கருதுகிற அளவிற்கு வெறி பிடித்த வாசகர்கள் எண்ணற்றோர் இருக்கவே செய்வர்.

புத்தக அலமாரியில் குடியிருப்பவை நூல்கள் அல்ல, மனித இதயங்கள், வாழ்வின் உயிர்த்துளி ஏந்தியிருக்கும் குவளைகள். உடைந்த உள்ளத்தை இதமாக்கவல்ல மருந்து சீசாக்கள். கனவுப் பைகள். இலட்சிய வேகத் தீக்குச்சிகள் அடுக்கிய வத்திப் பெட்டிகள். வருங்கால விடியலுக்கு வற்றாது வழங்கவல்ல பொற்காசு உண்டியல்கள்...........இன்னும் எவ்வளவோ சொல்லப்பட்டிருக்கிறது. புத்தகங்கள் அறிமுகப்படுத்தும் பரவச உலகில் குடிபுக நேரம் என்ன, காலம் என்ன...

ரஷியப் புரட்சிக்கு உரமூட்டியத்தில் நூல்களுக்கு இருந்த பங்கு அளப்பரியது. ஆயுதங்கள் இல்லாது கூட ஒரு புரட்சி சாத்தியப் படக் கூடும், புத்தகங்கள் இல்லாது அல்ல என்பார்கள் சமூக விஞ்ஞானிகள். எழுத்துக்களுக்கு காட்சிப்படுத்தும் ஆற்றலும் இருப்பதால், ஒரு பேச்சு எழுப்பும் ஆவேசத்தை, ஒரு சித்திரம் உருவாக்கும் உருக்கத்தை, ஒரு புகைப்படம் வழங்கும் தகிப்பை ஒரு நூலிலிருந்து வாசகனால் பெற்று விட முடிகிறது. கண்ணீர் வழியச் சிரிக்க வைக்கவும், கதறிக் கதறி அழவைக்கவும் இயலுகிறது நூல்களுக்கு. யாருமற்ற அறைக்குள் இருந்து கொண்டே எல்லோரோடும் கலந்து கொண்டிருக்க வைக்கின்றன நூல்கள்.

பழைய நூல்களின் ஏடுகள் முந்தைய வாசகரின் பிரிவினாலேயே தமது நிறமும் மணமும் இழந்து மக்கிப் போயிருக்கின்றன என்றார் ஒருவர். வாசிக்கப் படாமல் போனவைக்கு அதிக நிறமிழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். கடந்து போனவர்களின் தடயங்களோடு கையில் சேரும் புத்தகங்களுக்கு நம்மிடம் சொல்ல எத்தனையோ செய்திகள் இருக்கும்.

கால வெள்ளத்தில் கரையாமல் இருப்பவை நூல்கள் என்று சொல்ல விரும்பினாலும், காலத்தைக் குறித்த விழிப்புணர்வைச் சொல்லிக்கொண்டிருப்பவையே நிற்கத் தக்க நூல்களாக இருக்க முடியும். மனிதத்தை உயர்த்துபவை எவையோ, மனித நீதிக்கு முரணான எதையும் எதிர்க்கத் தூண்டுபவை எவையோ அவையே நிற்க வேண்டுபவையும் ஆகும்.

ஏப்ரல் 23 , உலக நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் என்பதாலேயே உலக புத்தக தினமாய் மலர்ந்திருக்கிறது. மனிதர்கள் ஒற்றை ஒற்றை ஆளாகப் பிரிந்து கிடக்க சாபமிடப்பட்டு வரும் புதிய தாரள மய சூழலில், அடுத்தவர் உடல் மீதும், உள்ளத்தின் மீதும் வன்முறை செலுத்தக் கூசாதவர்களாக மாந்தர்களைப் பயிற்றுவிக்கும் ஏகாதிபத்திய சவால் நிறைந்த பெருவெளியில் மெனக்கெட்டு நூல்களை தலைமேல் தாங்கி அடுத்தடுத்த தலைமுறைக்கும் நூல்களைக் கொண்டு சேர்க்கத் தூண்டட்டும் உலக புத்தக தினம்.

மெல்லுணர்வின் இசைக் காற்றாகவும், இயற்கை கொண்டாடியாகவும் எழுதிக் குவித்துச் சென்ற சீனக் கவி பை ஜூயி படைத்த உலகம் அவன் மறைந்து பல நூறு ஆண்டுகள் கடந்தும் நம் முன்னே வதிவதைப் போலவே தழைக்கட்டும் புத்தக உலகம்.......

உலக புத்தக தினம் எஸ் வி வேணுகோபாலன்
நண்பர்களே, மீண்டும் தோழர் எஸ்.வி.வி.யின் கட்டுரை சுமந்து இப்பூ மலர்கிறது. வாசித்து இன்புறுங்களேன்..

Comments

vimalavidya said…
Minute feelings and fond has been described smoothly...When I was studying 6th std I left/desrted my house with Rs 2/-That time I carried my impotant books and "Manjari " old issues.Because of my love with books.I never wanted to go for school but want to study always..That was my love when I was young..I used to take books from public library and cut the school and used to finish the reading...Such a love I could not expected from my son..Books are my assets..they are my great lovers...i never lagging behind to spend for books..SVV has rememberd my youthful time...

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...