Skip to main content

ஏகாதிபத்தியமும் நித்தியானந்தாக்களும்

ஏகாதிபத்தியமும் நித்தியானந்தாக்களும் என்ற தலைப்பைக் கண்டவுடன் பலர் முகத்தைஸ் சுருக்கலாம். இன்னும் சிலர் "ஆரம்பிச்சுட்டாங்கையா, ஆரம்பிச்சுட்டாங்க" எனக் கூறலாம். கட்டுரையைப் படித்து முடித்த பிறகு நித்தியானந்தாக்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நீங்களே உணர்வீர்கள்.



1. நித்தியானந்தா முதல் அனைத்து ஆனந்தாகளும் அல்லது சாமியார்களும் 25 முதல் 35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்கக் காரணமென்ன?

2. அனைத்து ஆனந்தாகளும் நுனி நாக்கு ஆங்கிலம் எங்கு கற்று வந்தார்கள்?

3.இத்தகைய எல்லா சாமியார்களும் இங்கு மடத்தை துவங்கும் முன்னர் அமெரிக்காவிலோ கனடாவிலோ இரண்டாண்டுகள் வரை தங்கியிருந்து பயிற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறதே எப்படி?

4.ஒவ்வொரு ஆனந்தாவின் மடமும் துவக்கத்திலேயே பலகோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்படுகிறதே அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? உதாரணமாக, நித்தியானந்தா ஆசிரமம், வேலூர் நாராயிணி அம்மன்(சுமார் 400 கோடி), ஆந்திர மா நில இராஜமுந்திரி இளவட்ட சாமியார் (பெயர் தெரியவில்லை), இத்தனை நூறு கோடிகள் எங்கிருந்து வந்தது?

5.நித்தியானந்தாவிற்கு நிதி மேலாளர் கனடா நாட்டுவாசி ஒருவர் தான் என்பதன் பிண்ணனி என்ன? இதேபோல் மற்ற சாமியாரகளுக்கும் நிழலாக இருப்பது இயக்குவது வெளி நாட்டுக்காரர்கள் தான் என்கிறார்களே இதன் உண்மையென்ன

6. இந்தியாவில் மாநிலத்துக்கு ஒரு இளவட்ட சாமியார் என்பதோடு நில்லாமல், ஆசிய நாடுகள் முழுக்க, குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அதிசயக் கோவில்களும், மடங்களும் தோன்றி வளர்கிறதே இதற்கெல்லாம் ஏதேனும் தொடர்பு உண்டா அல்லது எதேச்சையாக நடந்து வருபவையா?

7. கும்பகோணம் திட்டை, வசிஸ்டேஸ்வரம் ஆகிய இந்துக் கோவில்களுக்கு பில்கிளிண்டன் தங்கை, ஊடக ஏகாதிபத்திய நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் அதிபரின் மகள் ஆகியோர் வந்து சென்றது தன்னிச்சையானதா?

8. அமெரிக்காவில், அமெரிக்க அரசால் இந்துக் கோயில்களை நிர்வகிக்க அமைச்சர் அந்தஸ்தில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாராமே! இந்துக் கோவில்கள், இந்துக்கள் மீதுள்ள அக்கரையா அல்லது ஆசிய நாடுகளில் உருவாகிவரும் அல்லது உருவாக்கப்படும் ஆனந்தாக்களுக்கும் இந்தத் துறைக்கும் தொடர்பு உண்டா?

9. ஆசிய நாடுகளில் உலகமயத்தால் நவீன சாமியார்கள் உருவாக்கி திசை திருப்புதல், அமைதியை சீர்குலைத்தல் என்ற ஏகாதிபத்திய சதியின் ஒரு கூறு ஆனந்தாக்கள் என்ற அய்யத்திற்கு ஆணித்தரமான பதில் என்ன?

இவ்வாறு அய்யத்தை அதிகரிக்கும் அல்லது உறுதிப்படுத்தும் கேள்விகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

கௌபீன யோக்கியாம்சம் நிறைந்து (கோமணத் துணிகூட ஒழுக்கத்தின் சாட்சி) வழிந்த தர்மபுரம் ஆதீனம், மதச்சார்பின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் விளங்கும் குன்றக்குடி மடம், திருப்பனந்தாள் மடம், செங்கோல் மடம், தொண்டை மண்டல ஆதீனம், துலாவூர் மடம், திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம் போன்ற தமிழ் நாட்டு மடங்கள் தமிழையும் சைவசித்தாந்தத்தையும் முன்னிறுத்தி உலகம் உண்மை என்ற சித்தாந்தத்தைப் பரப்ப உருவான பிராமணர் அல்லாதார் மடங்கள்ம் வெறும் சொத்து நிலங்களின் பாதுகாவலானதாக மாறிவிட்டது. இன்றைக்கும் 4000 திவ்வியப்பிரபந்தப் பாடல்களைப் பாடி தமிழ் வளர்க்க முயலும் வானமாமலை மடம் போன்றவையும் சமஸ்கிருதம் வளர்க்க உருவான பௌண்டரீகபுரம் மடங்களும் அந்தத் தரப்பு மக்களைக் கவர முடியவில்லை. சங்கர மடம், சிருங்கேரி மடம், அகோபில மடம் போன்ற உலகம் பொய் என உபதேசிக்க தோன்றிய பார்ப்பன மடங்கள் சித்தாந்தத் தோல்வி கண்டுவிட்டது. சுதந்திரப் போராட்ட காலத்தில் தோன்றிய அரவிந்தர் ஆசிரமங்களும் காற்று வாங்குகிறது.

மடங்களின் மீதும் ஆசிரமங்களின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதைத் தொடர்ந்து, ஆரோக்கியமான சிந்தனையும் முற்போக்கு அரசியல் சார்பும் அடுத்து முளைக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்த ஏகாதிபத்தியம், இத்தகைய சதிச்செயலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கணக்கிட்டுப் பார்த்தால் நமது அய்யங்கள் ஆரோக்கியமானதே எனப் புலப்படும்.

நவீனக் கல்வி, நவீன கேளிக்கைப் போக்குகள் ஆகியவற்றை மையமாக வைத்து, நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் உலகமயச்சாறு கலந்து நவீன ஆசிரமங்கள் உருவாகி வருகிறது. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மடங்கள்/ஆசிரமங்கள். பசும்புல் தரைகள், இயற்கை சூழல், யோகாசனம் உடல், மன நோய் வைத்தியங்கள், அகமன இச்சைக்கு அந்தரங்க சிகிச்சைகள். ஆடம்பரம், நுனி நாக்கு ஆங்கிலம் ஆகியவையாக இளவட்ட மடங்கள் நாடிபிடித்து உருவாக்கப்பட்டுள்ளது.

சித்தாந்தத்தின் மீதான கருத்துப் பிரச்சாரம் மடங்களில் தோற்றுப் போய் தனிமனித / தனிப்பட்ட பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளது. கொலை செய்பவன், கொள்ளை இலாபம் அடிப்பவன், ஏமாற்றுப் பேர்வழி. பல்வேறு தவறான வழிகளில் பணம் சேர்ப்பவர்கள் ஆகியோர் தங்களது தொழிலைத் தொடர்ந்து கொண்டே நிம்மதியாக வாழ்வது எப்படி? கடவுளின் கருணையைப் பெறுவது எப்படி என்று இந்த நவீன மடங்களில் கற்றுத்தரப்படுகிறது. கூடவே மாற்றத்தை எதிர் நோக்கும் பெருவாரியான மக்களை திசை திருப்பி, நல்லன பற்றி அறியவிடாமல் இரும்புத் திரையிட்டு மறைக்கப்படுகிறது. உலகமயத்தால் வேலையிழந்தோர், தொழிலில் நட்டமடைந்தோர், தொழிலில் தோற்றுக் கொண்டிருப்போர் ஆகியோரை உழைக்கும் மக்களோடு நேச சக்திகளாக அணி சேரவிடாமல் முதலாளித்துவ சக்திக்குள்ளேயே தீர்வுகளைத் தேடி முடங்கிப்போகிறவர்களாக மாற்றுகிறது. ஒரே மடம், ஒரே நித்யானந்தா. நல்லதோ கெட்டதோ ஒரே சாமியாரை நம்பியிருக்கும் மக்களாகவும் இருக்கவிடாமல், அவ்வப்போது பிரேமானந்தாக்களை, நித்தியானந்தாக்களை அவர்களாகவே அம்பலப்படுத்தி அதிலும் நிலைத்திருக்கஸ் செய்யாமல் சீர்குலைவு செய்கிறார்கள். ஆளும் வர்க்கத்தின், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் ஏகபோக ஆதரவு, பன்னாட்டு முதலாளிகளின் பண மழை, இவையெல்லாம் ஏகாதிபத்திய ஆசியின்றி நடைபெறாது என்று எண்ணத் தோன்றினால் அதற்கான பதிலளிப்போர் யாரும் இல்லை.

வழக்கம் போல் பி.கு : இக்கட்டுரையின் ஆசிரியர் தோழர் மதி. இவர் ஈரோடு மாவட்டத்தின் தமிழ்னாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் ஆக உள்ளார். இவரை tnsfnmani@gmail.com என்கிற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


Comments

hariharan said…
இணைப்பு பொருந்திவருகிறது...

சாமியார்களும் விளம்பரதாரர்களின் நிகழ்ச்சிதானோ?
www.bogy.in said…
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
Anonymous said…
உங்கள் யூகம் சரி என்றே தோன்றுகிறது. ஆசிய மக்கள் பொருள் கவர்ச்சி மாயையில் மயங்கி வெறும் நுகர்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும். அதற்கு அவர்கள் தொடர்ந்து எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் பாரம்பரிய விசயங்களை கண்மூடித்தனமான வகையில் பின்பற்ற வேண்டும். அறிவுபுரட்சியோ , கேள்விகள் கேட்கும் மனோபாவமோ வந்துவிடக்கூடாது. அதற்கு மக்களை தொடர்ந்து ஏதோ ஒரு பழமையான, ஆனால் விஷய ஞானம் இல்லாத ஒரு போதை நிலையில் வைத்து இருக்கவேண்டும். அதற்கு இவ்வாறான ஆனந்தாக்கள் தேவைப்படலாம். ஒரு கட்டத்திற்கு மேல் பழைய ஆனந்தாக்களை ஓரம் கட்டிவிட்டு புதிய ஆனந்தாக்களை உலவ விடலாம்.

இந்த ஆனந்தாக்களின் உபதேசங்களில் ஒரு பொதுவான இடது சாரிய சிந்தனை கூட தென்படுவதில்லை என்பதை கவனிக்க வேண்டும். போகிறபோக்கில் இன்ஸ்டன்ட் முக்தி என்று கூறிக்கொண்டு பல்லைகாட்டிகொண்டு ஒரு சாமியார் டிவி யில் விளம்பரமாக தோன்றினாலும் தோன்றலாம். நம்புவதற்கு ரெடி யாக நம்மவர்கள் இருக்கும்போது ஏகாதிபத்தியம் நன்றாகவே கோலோச்சும்.
தோழர் ராம்கோபால்

வணக்கமும் வாழ்த்துக்களும்...

அருமையான பதிவு. நித்யானந்தா விஷயத்தில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் இந்த சீரிய முயற்சியை கட்டுரை ஆசிரியர் இன்னும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று கருதுகிறேன். அற்புதமான வடிவத்தில் புறப்பட்டிருக்கிறார். அதைத் தொடர வேண்டும். ஊடகங்களது அரசியலையும் அம்பலப் படுத்த வேண்டும். ஆபாசத்தை விற்பவர்களே அதற்கு எதிரான வழக்கை தொடுப்பவர்களாகவும், அவர்களே வாதாடுபவர்களாகவும், இறுதியில் தீர்ப்பையும் அவர்களே சொல்பவர்களாகவும் இருக்கும் இந்த அராஜகத்தை என்ன சொல்வது. அதற்கும் மணி அவர்கள் அழகான அலசலைச் செய்ய முடியும்.....தொடரச் சொல்லவும்....

எஸ் வி வேணுகோபாலன்

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...