விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே..
இறக்கை விரித்தே இறக்கை விரித்தே வானம் ஏறி….
விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் பறத்தல் என்பது குறியீடு. மனுச பய புள்ளையான நம்முள் எல்லாருக்கும் விமானத்தில் பறத்தலே பெரும் பரவச அனுபவம், உண்மையாகவே இறக்கை முளைத்து பறக்க முடிந்தால்… ஆம் தேவதைகளாகி இறக்கை விரித்து பறந்தோமானால்…அந்த நாள் என்று வரும் என ஏக்க பெருமூச்சு விடலாம்… இல்லை இறக்கை போன்ற ஒரு செயற்கை பொருள் வைத்து பறக்கும் காலமும் வரலாம். அப்பொற்காலம் வெகுவேகமாக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், உங்களைப் போலவே நானும்.
பறவையை கண்டான்… விமானம் படைத்தான் என்ற அளவே என்னுடைய அறிவியலறிவு… ஆனால் பறத்தல் என்பது எப்படி சாத்தியமாகிறது.. அது ஏன் ஒரு பறவைக்கு இறக்கை நீளமாகவும்.. இருங்கள் இருங்கள்… முதலில் இறகு என்பது இறக்கை என்பது வேறு என்பதும் எனக்கு புரிந்தது இப்புத்தகத்தில் தான். அதாவது இறகு என்பது பலது சேர்ந்ததுதான் இறக்கையாம்.. என்னத்தே 12 வரைக்கும் படிச்சு.. என்னத்தே அதற்கு பிறகு பிஸிக்ஸ் இளங்கலை வேற படிச்சு… அடப்போங்கப்பா.. இது தெரியலயே எனக்கு என அசிங்கமா போச்சு.
பறவைகளில் எவை எவை பறக்கும்? பறக்காது இருக்கும் கோழிக்கும், அதன் பெரியம்மா நெருப்புக்கோழிக்கும் என்ன ஆச்சு? எல்லாப் பறவைகளுக்கும் இறக்கை ஒரே அளவா.. சிறியதும் பெறியதும் ஏன் ஆச்சு.. அதாவது கொஞ்சமா பறந்தா சிறிய இறக்கை போதுமாம், ரொம்ப தூரம் பறக்கிற மாதிரி இருந்தா பெரிசா வேணுமாம்… புறா, காக்கா, குருவி என்பவை நம் வீட்டில் பறந்துகொண்டு கீழே லேண்ட் ஆவதற்கும், ஒரு கழுகு லேண்ட் ஆவதற்கும் வித்தியாசம் இருக்காம், அதற்கு ஒரு அறிவியலும் இருக்காம்.
கழுகு லேண்ட் ஆகும் ஸ்பீடிற்கும், காக்காய் அண்ணன் லேண்ட் ஆகும் ஸ்பீடிற்கும் கூட வித்தியாசம் இருக்காம், கழுகு செம ஸ்பீடு.. 200 கிமீ வேகமாம். இது காக்கா இறகு, மயிலிறகு என புஸ்தகத்தில் வைக்கிறோமே, அது தானா விழுகாதாம்.. அவங்களா மனசு வைச்சு சரி இது தேவையில்ல, புதுசு வேணும் என நினைச்சாதான் விழுமாம். இத்தனூண்டு இறகுதான் என்னென்ன வகையில் அதற்கு பறப்பதற்கு, உணவிற்கு, தேவைப்படும் வெப்பத்திற்கு உதவுதாம்… பறவைகள் V வடிவத்தில் பறப்பதற்கும் என்ன காரணம் என்ன, ஏழு கடல் தாண்டி வேடங்தாங்கல் வந்தடையும் பறவை பறந்துகிட்டே தூங்குமாம், தண்ணீரை சேர்த்து வைச்சு குடிச்சுக்குமாம், ஒரு பறவை (ரீங்காரப் பறவை என நினைக்கிறேன்), பறந்துகிட்டே ஒரே இடத்தில் நின்னு அப்படியே பூவின் தேனை ஸ்ட்ரா இல்லாமலே, பூவும் கசங்காமல் குடிக்குமாம்…
அடப் போங்கப்பா… பறவைகள் பறக்கும் நுட்பம் குறித்து ஏராளமான தகவல்கள், எளிய புரிந்துகொள்ள கூடிய வகையான மொழியில்.. தமிழில் இவ்வளவு எளிமையா சுவாரசியமா ஒரு அறிவியல் புஸ்தகம் நான் படிச்சு நாளாச்சு. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்னும் தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடு ஒன்னு இருக்கு.. அது செம்ம சூப்பராக இருக்கும். அது போலவே இது இருக்கு. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.. சொற்பிழை எழுத்துப்பிழை இல்லாம, ஒவ்வொரு பக்கத்திற்கும் அதன் வலது பக்க மேல் மூலையில் ஒவ்வொரு வகையான பறவையின் படம், என உண்மையிலே அமர்க்களமான வரவு.
ஆனா என்ன இப்படியான புத்தகங்களில் நான் காணும் ஒரே குறை இருக்கு. தேவையான இடங்களில் வண்ணங்களை பயன்படுத்துவது அவசியம் என நினைக்கிறேன். அதுவும் பறவைகள் பறத்தல் என்பதற்கெல்லாம் என்ன என்ன வண்ணத்தில் படங்கள் கிடைக்கின்றன, அதையும் பயன்படுத்தி இருக்கலாம். கேட்டா இதன் விலையே ரூ.120/-.. அதையும் போட்டா இன்னும் கூடும் என சொல்வாங்க (எங்காளுங்க தான்!) . அதற்கும் ஒரு பதில் இருக்கு என்கிட்டே. அதாவது ஆங்கிலத்தில் பேப்பர்ப்பேக் ஹார்ட்பவுண்ட் வடிவங்கள் என இரு வடிவங்கள் பயன்படுத்துகிற மாதிரி பாரதி புத்தகாலயமும் ஒன்றை பேப்பர்பேக் என்ற வடிவத்தில் வண்ணங்கள் இல்லாம குறைந்த விலையில் நிறைய பிரதிகளாகவும், ஹார்ட்பவுண்ட் வடிவமாக வண்ணங்களுடன் வழவழ தாளில் தேவைப்படும் விலையை வைத்து குறைந்த எண்ணிக்கையில் அச்சடித்து அதையும் வெளியிடலாம்..
சீக்கிரம் செய்யுங்க தோழர்களே..
வானவாசிகள்
என்னும் முனைவர் பெ. சசிக்குமார் அவர்களின் பிரமாதமான இந்நூலிற்கு ஆசிரியருக்கும்,
புக்ஸ்பார் சிலரன் (பாரதி புத்தகாலயம்) நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்… இவரின் இதே நிறுவனத்தின்
விண்வெளி மனிதர்கள் என்னும் மற்றொரு அறிவியல் புத்தகத்தையும் கையில் எடுத்துள்ளேன்,
இதே போன்ற சுவாரசியத்தை எளிய வகையில் அறிவியலை சொல்லும் மொழியை கொண்டிருக்கும் என்ற
உறுதியில்…..
Comments