Skip to main content

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது. அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது. எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர். தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு. ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது. புதைக்க கூட இடமில்லை. இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை. இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில்.

இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில், ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது, அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல. ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஆம், மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்றனர். சேதம் அதிகம் உள்ள புத்தகங்களை தவிர்த்து மீதம் இருப்பவற்றை சேகரிக்கின்றனர். சுத்தம் செய்கின்றனர். முறையாக நூலகங்களில் அடுக்குவது போல் எண்ணிட்டு அடுக்குகின்றனர். இவ்வளவும் செய்த பிறகு அந்த கேள்வியை அவர்கள் எதிர்கொள்கின்றனர். நூலகத்திற்கு வாசகர்கள் எங்கிருந்து வருவார்கள்? வருவார்களா?

ஆனால், அவர்களின் அந்த கேள்வியை அர்த்தமற்றதாக்கி வந்து நின்றனர் மக்கள். சரியான உணவில்லை, மின்சாரம் இல்லை, மருந்துகள் இல்லை, ஆனாலும் வாசிப்பை நோக்கி மக்கள் வந்தனர். புத்தகம் வாசித்தல் மட்டுமல்ல தீவிர வாசிப்பு கொண்ட இளம் போராளி ஒருவர் புத்தகம் வாசிக்க மக்கள் கேட்கின்றனர், விவாதம் செய்கின்றனர், அவர் விவாத தலைமையும் கொள்கிறார். நம்ப முடியாத ஒன்றாக நீங்கள் நினைத்தால், வேறு வழியில்லை எனக்கு உங்களை காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு வெளியிட்டிருக்கும் இந்த புத்தகத்தை வாசிக்க சொல்வதை விட.

அப்படியா ஒரு நூலகமா, இந்த சூழலிலா, எப்படி நூலகம் நடத்தப்படுகின்றது என்ற நமது ஆவலை போலவே பிரான்ஸ் நாட்டு பத்திரியாளர் தெல்ஃபின் மினூய் அவர்களுக்கும் எழ அவர்கள் மிக சிரமப்பட்டு தராயா நகரத்தின் போராளி ஒருவரை தொடர்பு கொள்கிறார். வீடியோ கால்தான் எப்பொழுதும். உங்கள் நூலகத்தை பற்றி பேசுங்கள் என்ற சொன்ன போது அந்த போராளி இடைவிடாமல் பேசுகிறார், நூலகத்தின் வாயிலாக அந்த தாராயா நகரின் கலாச்சாரம், பண்பாடு, எழுத்தாளர்கள், சிரிய கவிஞர்கள், தாராயா நகரின் போர்க்குணமிக்க வரலாறு என எல்லாம் வெளிப்படுகிறது. மினூய் அதை அப்படியே வார்த்தைகளில் வடிக்க, இதோ இந்த நூல் நம் முன்னே.

இறுதியாய் ஒரு கொடும் நாளில் பஷாரின் விமானங்கள் அம்பரல்லா குண்டுகள் போட்டு தராயா நகரை தகர்க்க, அந்த நூலகமும் தகர்க்கப்படுகிறது. போராளிகள் வேறு வழியின்றி நகரத்தை விட்டு செல்கின்றனர். ஆனாலும், என்ன அந்த போராளிகள் போகும் இடம் தோறும் வாசிப்பை விதைப்பார்கள், தராயா நகரம் என்ற ஒன்று முற்றாய் இற்று விழும் வரை எவரோ ஒருவர் அங்கே சிதிலங்களில் ஒரு பக்கத்தை எடுத்து வாசித்து கொண்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு மிக சிறப்பு. என்ன எளிமை. வார்த்தைகளில் சிக்கனம். அதைவிட வரிகளின் நீளம் குறைவு.

வாசிப்பை நேசிப்போர், ஏன் இந்தப் புத்தகத்தை தவறவிடவேண்டும். என்ன செய்ய தோழர், படிக்கக் நேரமே கிடைக்கலே என்று சொல்வோரும் இப்புத்தகத்தை வாசித்துவிடலாம்.

சிரியாவில் தலைமறைவு நூலகம், தெல்ஃபின் மினூய், தமிழில் : எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி, காலச்சுவடு வெளியீடு, விலை: 175, பக்கங்கள் : 144.

குறிப்பு : என் நண்பர் தோழர் ஜெ.பாலசரவணன் மார்ச் மாத புதிய புத்தகம் பேசுது இதழில் எழுதியுள்ள இந்த நூல் அறிமுகத்தை கட்டாயம் வாசியுங்கள். அது இந்த அறிமுகத்தை விட உங்களுக்கு பல செய்திகள் எளிமையாக சொல்லும்.
https://bookday.co.in/book-introduction-library-of-the-underground-in-syria/

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...