குழந்தை
இலக்கியம் குறித்து
கருத்து சொல்லவெல்லாம்
நான் இல்லை.
இருந்தாலும்
கடினமாக வார்த்தைகளை,
தொடர்
சங்கிலிகளாக
வாக்கியங்களை
அமைத்தல் என்பதை
SMS காலத்தில்
குழந்தைகள் பெரிதும்
விரும்புவதில்லை
என்பது என்
கணிப்பு.
இவையெல்லாம்
தாண்டி வாசிக்க
வைக்க வேண்டுமென்றால்,
ஒன்று
அவை சித்திரக்கதையாக
இருக்க வேண்டும்
அல்லது விஷ்ணுபுரம்
சரவணின் வாத்து
ராஜா போல்
மிகவும் விறுவிறுப்பாக
இருக்க வேண்டும்.
என்
வீட்டில் அப்படித்தான்,
இப்படியே
எங்கும் என
நான் சொல்லவில்லை.
என்
அனுமானம் படியே
Dear Mrs. Naidu இருக்கிறது.
12-13 வயதுக்கு
மேல் உள்ள
குழந்தைகள் எளிதாக
படிக்கக் கூடிய
புத்தகம்தான்.
பெங்களூர் மாநகரில் ஒரு ”காக்கா முட்டை” குழந்தை. பெண் குழந்தை. 12வயதான சரோஜினி. அவள் தன் பள்ளியில் கொடுக்கப்பட்ட பிராஜெக்ட்களில் ஒன்றாக ஒரு பிரபலத்திற்கு கடிதம் எழுதுகிறாள். அது ஆன்னி மிஸ்ஸால் கொடுக்கப்பட்டது. சுற்றுச்சுவர், கேட் போன்றவை இல்லாத வழக்கமான அம்பேத்கர் கார்ப்பரேஷன் ஸ்கூலில் பிராஜெக்ட் கொடுப்பது என்றால் அது அவர்களால் மட்டுமே முடியும். ஏன் என்றால் அவர்கள் மட்டுமே அந்த பள்ளிக்கு நேரத்திற்கு வருபவர். தலைமை ஆசிரியரோ அல்லது மற்ற ஆசிரியர்களோ எப்போதுமே ஒரு சில நாள் மட்டுமே வரும் பள்ளியில் ஆன்னி மிஸ் மட்டுமே தொடர்ச்சியாக வருகிறார், பள்ளியை நடத்துகிறார். சரோஜினிக்கு அவள் தாய் வீட்டு வேலை செய்யும் இடத்தின் வக்கீல் விமலாராவ் மேடம் எப்போதோ கொடுத்த புத்தகம் ஒன்று கவிக்குயில் சரோஜினி நாயுடு பற்றியது. எப்போதும் பெரும்பாலும் காமிக்ஸ் படிக்க விரும்பும் குழந்தை சரோஜினி தன் பெயர் கொண்ட ஒரு பிரபலத்தின் வாழ்க்கையை படித்து மிகவும் பிடித்துவிட தன் பள்ளி பிராஜெக்ட ஆக அவருக்கு கடிதம் எழுத துவங்குகிறாள். கடிதத்தில் எல்லாவற்றையும் எழுதுகிறாள். அவளது குடும்ப சூழலையும் தனது குடும்ப சூழலையும் ஒப்பிட்டு எழுதுகிறாள், கழிவிரக்கம் இல்லாமல். நாயுடுவின் தாயைப் போலவே சரோஜினியின் தாயும் உறுதிமிக்கவராக, தீர்மானங்கள் எடுப்பதில் நெஞ்சுரம் கொண்டவராக இருப்பதை ஒப்பிடுகிறாள். இப்படியாக கடிதம் நீள்கிறது.
தன் சக இருப்பிட நண்பன் அமீர் அருகிலிருக்கும் தனியார் பள்ளியில் சேர்ந்துவிட(அவரது அப்பாவுக்கு காசு கொஞ்சம் கிடைச்சுதாம்), தானும் எப்படியாவது அப்பள்ளியில் தன் நண்பனோடு சேர்ந்துவிட துடிக்கிறாள். தன் வாழிடத்தில் அருகிருக்கும் பகுதியில் நடைபெற்ற (அது பாஸ்ட் டென்ஸ் தானே!) நடைபெற்றுகொண்டிருக்கும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்திலிருந்து கிடைத்த தன் தோழி தீப்தி வந்தபின்னும் தொடர்கிறது அவளது ஆசை. ஆன்னி மிஸ் ஒருநாள் பள்ளியில் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து சொல்ல, அங்கிருந்து கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த செய்தி அவளுக்கு கிடைக்கிறது. அச்சட்டம் தனியார் பள்ளிகள் 25 சதமான ஏழை குழந்தைகளை கட்டணம் இல்லாமல் சேர்க்க வேண்டும் என்ற சரத்தினை சொல்கிறது என்பதை கண்ட சரோஜினி தம் அம்மாவிடம் சொல்கிறாள், தானும் தனியார் பள்ளியில் (அமீர் படிக்கும் பள்ளி என்றெல்லாம் அம்மாவிடம் சொல்லவில்லை) சேரவேண்டும் என்று. அம்மாவும் தன் குழந்தையை கூட்டிக்கொண்டு க்ரீன்ஹில் தனியார் பள்ளிக்கு (அங்கேதான் அமீர் படிக்கிறான்!)செல்கிறாள்.
ஏதோ ஜவுளி கடையில் நுழைந்தது போன்ற உணர்வை அப்பள்ளி அங்கிருக்கும் கண்ணாடி சுவர்கள் மூலம் அவர்களுக்கு ஊட்டியது. தயக்கத்துடனே உள்ளே சென்றவர்களுக்கு கர்நாடகாவில் நர்சரிக்கு முன் வரை மட்டுமே அந்த இடஒதுக்கீடு என சொல்லி பள்ளி நிராகரிக்கிறது. இப்படியான ஒற்றை வாக்கியத்தில் அந்நிகழ்வினை எளிதில் கடந்துவிட முடியாது. குழந்தை மற்றும் தாயின் தயக்கம், செக்ரட்டரியின் அலட்சியம், திமிர் பார்வை, பிரபலர் சிபாரிசில் வந்தாலும் ஏகடியம், வருமான சான்றிதழ் குறித்த சந்தேகம்,(எல்லோரும் பணக்காரராக இருக்க ஆசைப்படும்போது ஒருவர் தான் ஏழையாக ஏன் நடிக்க வேண்டும், ஏன் வருமான சான்றிதழின் உண்மைத்தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்று சரோஜினி எண்ணுகிறாள்), ஏழையுடன் கை கொடுத்தவுடன் டெட்டால் ஊற்றி கை கழுவும் நாகரிகம் என்னும் அப்பட்டமான மனித விரோத செயல்பாடு என்பவனவற்றையெல்லாம் நீங்கள் புத்தகம் படித்து தெரிந்துகொள்ளுங்கள். ஆசிரியரின் எழுத்து வண்ணம் திறம் கொள்ளும் மற்றொரு இடம் இது. வழக்கமாக கை கோர்த்து நடக்கும் தாய், தன்னை சற்றேறக்குறைய இழுத்தபடி தனியார் பள்ளியை விட்டு வெளியேற, குழந்தை சரோஜினி சிறிது நேரம் கழித்து நிதானித்த தாயிடம் கேட்கிறாள், என்னம்மா? அம்மா சொல்கிறாள், “I need some fresh air”. சாரிம்மா, என்னால் தானே நீ அவமானப்பட நேர்ந்தது என சரோஜினி சொல்ல, “ஆசைப்படும் ஒன்று கிடைக்கவில்லையென்றால் வருத்தப்படாதே, என்றுமே கிடைக்காது என்று மன்னிப்பு கோராதே, வேறு ஒரு வழியை கண்டுபிடி” என்கிறாள் தாய்.
பின் என்ன நடக்கும், அவள் எப்படியோ போராடி அந்த தனியார் பள்ளியில் சேர்ந்துவிட்டாள் என்றுதானே! அப்படியெல்லாம் இல்லை. இந்தியாவின் தலையெழுத்தையே மாற்ற வல்லமை கொண்டதாக கருதப்படும் கட்டாய கல்வி உரிமை சட்டம் எத்தனை மோசடித்தனமானது என்பதை இக்கதையின் பின் நிகழும் நிகழ்வுகள் நமக்கு சொல்கின்றன. என்னதான் தனியார் பள்ளியில் 25 சத ஒதுக்கீட்டில் சேர்ந்தாலும் தலித் மாணவர்கள் எய்ம்ஸ் வரை அனுபவிக்கும் சாதிய தீண்டாமை போலவே வறுமையின் தீண்டாமையும் தொடர்கிறது. அதுமட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீடு மட்டுமே கோரும் அரசியல் கட்சிகளும், மாணவர் சங்கங்களும், அச்சட்டத்தின் முக்கிய அம்சமான அரசுப் பள்ளியை வலுப்படுத்துதல் என்பதை புறம் தள்ளி நிற்கும் அவலத்தையும் சுட்டுகிறது. ஆம், சரோஜினி பின் தான் படிக்கும் அரசுப் பள்ளியின் முகத்தை மாற்ற முனைகிறாள். வறுமையின் பிடியில் இருந்தாலும் மனிதம் துளிர்க்க உதவிகள் பல இடத்தும் அவளுக்கு கிடைக்கின்றன. ஆனாலும், அக்குழந்தை சரோஜினி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் ஏன் வாலண்டரி சர்வீஸ் பெற்று செய்ய வேண்டும் என்றொரு முக்கிய வினாவினைத் தொடுத்து அரசையும் நாடுகிறாள். இப்படியாக கதை சுவைபட தொடர்கிறது.
என்னடா இது, கதை அரைகுறையாக முடிந்துவிட்டதோ என எண்ணலாம். கதை சொல்வது என் நோக்கமல்ல. கதையாசிரியரின் மொழி நடையும், வசனங்களும், யதார்த்த சித்தரிப்புகளுமே இக்கதையின் வலு சேர்க்கும் விஷயங்களாகின்றன. இக்கட்டுரையின் துவக்கத்தில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டிருக்கும். அவ்வாறே அந்த நாவலிலும் பல இடங்கள் வருகின்றன. அது ஒரு குழந்தை ஒரு கட்டுரை/கடிதம் எழுதும்போது அடித்தல் திருத்தல்களோடு எழுதுமே அச்சாயல். இது அக்கடிதத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகின்றன. நாவலாசிரியர் மாதங்கி சுப்ரமணியன் கடிதம் மூலம் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை கதையாக சொல்கிறார் என்றே முதலில் எண்ணினேன். ஆனால் நாவலாசிரியர் சரோஜினியின் கடிதம் வாயிலாக பெண்களின் உறுதி, தீர்மானிக்கும் திறன், தனியார் பள்ளிகளின் இரக்கமற்ற முகம், அரசுப் பள்ளிகளின் அவலம், ஆட்சியுள் உள்ளோர்களின் அரசுப் பள்ளிகள் குறித்த பாராமுகம், வறுமை என்றாலும் அங்கு எப்போதும் நீக்கமற படர்ந்திருக்கும் மானுடம், பாசம், சூழல் மறந்த குழந்தைகளின் நட்பு என பலவும் பேசுகின்றன. இந்நாவல் வெற்றியை கோரும் இடங்களாக அவற்றையே நான் பார்க்கிறேன். அப்படியே என் நண்பர்கள் பலரும் பார்ப்பதால் நான் இந்நாவல் குறித்து இங்கு பேசுகிறேன்.
இது ஒரு யங் ஜுபான் புக்ஸ் வெளியீடு. இறுதி வரிகளாய் இப்புத்தகத்தில் இருப்பவை, இவை- “It feels like forgetting the earth. It feels like moving the skies.“
Comments