புதுவையில் பாரதி புத்தகாலயம் – மாற்றுக் கல்விக்கான முதல் வாசிப்பு முகாம்
23.08.2014.
அன்று ஆகஸ்ட் 23 சனிக்கிழமை. புதுவையில் முதல்முறையாக பாரதி புத்தகாலயம்,
புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து
நடத்தும் ஆசிரியர்களுக்கான் வாசிப்பு முகாம் NKC அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, குருசுக்குப்பத்தில் நடைபெற்றது. மதியம் 0300
மணி என்று சொல்லியிருந்தோம். உருவையாறு பள்ளி ஆசிரியர் சதீஷ், பாரதி புத்தகாலய
ராம்கோபால், புதுவை அறிவியல் இயக்கத்தின் விஜயமூர்த்தி, முருகவேல், ஆசிரியர்
விசாகன் என எல்லாரும் காத்திருந்தோம். நேரங்கள் கழிய கழிய ஒன்று, இரண்டு என
ஆசிரியர்கள் வருகையில் நம்பிக்கையற்று நின்றிருந்த எங்களுக்கு முகாம்
ஆரம்பிக்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வந்தது நம்பிக்கையும்
மகிழ்வினையும் தந்தது.
ஆசிரியர் சதீஷ் தொடங்க, வரிசையாய் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே
அறிமுகப்படுத்தினார்கள். விரைவில் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு அறிவியல்
இயக்கத்தின் தலைவரும், பேராசிரியருமான நா. மணி அவர்கள் எழுதிய “பள்ளிக்கூட தேர்தல்” நூல் வாசிக்க குழுக்கள் தலைப்பட்டன. அந்தி வானம் மஞ்சள் போர்வை போர்த்த,
ஆசிரியர்கள் குழு குழுவாய் படித்த காட்சி இன்னும் மறக்காமல் நிற்கிறது நெஞ்சில்.
எவரும் படிக்காமல் இல்லை. எல்லாரும் படிக்கின்றனர்.
சுமார் ஒரு மணி
நேரம் கழிய அனைத்து குழுக்களும் ஒன்றாய் அமர்த்தி குழு அனுபவங்கள் துவங்கியது.
ஒன்றும் தப்பாமல் அனைத்து குழுக்களும் இந்த புத்தகம் தங்களுக்கு புதியதொரு
படிப்பினை தந்தது என தெரிவித்தது. வானூரைச் சேர்ந்த ஆசிரியர் இளங்கோ, தான்
விரும்பி வாங்கிய பணியிட மாற்றலை எப்படி அவரது பள்ளி மாணவர்கள் தங்கள்
பெற்றோர்களுடன் வந்து ஊர்மக்களோடு மாற்றல் வேண்டாம் என சொல்லுங்கள், நீங்கள்
எங்களுக்கு வேண்டும் என கோரிக்கை வைத்து மாற்றல் உத்தரவை மறுக்க செய்த நிகழ்வினை
சொல்லித் துவங்கியது முகாமின் வெற்றிக்கான கட்டியம் கூறுதலாக அமைந்தது. நிச்சயமாய்
ஆசிரியர் தினத்தன்று தனது சக ஆசிரியர்களுக்கும் “பள்ளிக்கூட தேர்தல்” புத்தகத்தினை பரிசாக கொடுப்பேன் என்றும், தனது செயல்பாட்டால் சக
ஆசிரியர்களும் ஏதோ ஒரு விதத்தில் பள்ளிக்கூடத்தில் கூடுதல் ஈடுபாட்டுடன்
செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
அடுத்ததாக வந்த ஆசிரியர்
ஒப்லிபன், தன்னிடம் பயின்ற மாணவி ஒருவர் பள்ளியை விட்டு செல்ல நிலை வந்தபோதும்
செல்ல விரும்பாததை தெரிவித்து, ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களின் மனதில் இடம்
பிடிப்பதை கடமையாக கொள்ள வேண்டும் என்றும் கூறினார். நல்லாசிரியரும், நாடக
நடிகருமான ஆசிரியர் இராமலிங்கம் அவர்கள் அடுத்த குழுவின் சார்பாக வந்து பணி
செய்யும் அந்த குழந்தைகளின் சமூகத்தோடு ஓர் ஆசிரியர் இணக்கமாக இருக்க வேண்டும் என
வலியுறுத்தினார். கண்டமங்கலம் ஆசிரியர் சேகர் முதலில் தான் மாணவர்களை
அடித்ததாகவும், அறிவியல் இயக்கத்தாரின் தொடர்பால் தான் தற்போது அடிப்பதில்லை
என்றும், வாசிப்பு என்னும் பழக்கம் கட்டாயம் ஓர் ஆசிரியருக்கு இருந்தே ஆக வேண்டும்
என்றும் சொன்னார்.
உருவையாறு பள்ளி ஆசிரியை ஹெலன் ராணி அவர்கள் தான் பள்ளியில் படிக்கும் மாணவ,
மாணவியருக்கு உளவியல் ஆலோசனை தருவதாகவும், விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள
ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார். மாணவிகள் பள்ளி இடைநிற்றலை தடுக்க தான்
எப்போதும் அவர்களது வீடு வரை சென்று முயல்வதாகவும், அவ்வாறே தனத் பள்ளி மாணவிக்கு
நடைபெற இருந்த அநீதியான குழந்தை திருமணத்தை தான் முன்முயற்சி எடுத்து
தடுத்ததாகவும் சொன்ன போது அரங்கம் கைதட்டலில், பெருமிதத்தில் நிரம்பியது.
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர் தலைமை ஆசிரியர்
சண்முகசாமி குழு அனுபவங்களின் தொகுப்புரையில் எல்லா ஆசிரியர்களும் நல்லாசிரியரே,
இந்திய கல்வி முறையில் மாற்றம் தேவை; ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வியாக
கல்வி முறை மாற வேண்டும்; சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டியதும், அரசியல்
கல்வியும், சமூக பாதுகாப்பு கல்வியும் அவசியம் என உறுதியாக தெரிவித்தார்.
28 பேர் கலந்து கொண்டு 3 மணி தொடங்கி 630 மணி வரை நடந்தாலும் எவரும் கலையாத
வாசிப்பு முகாம் இத்தகைய நல்லதோர் ஆசிரியர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி
தங்களை தாங்களே மெருகேற்றுவதிலும், ஆசிரியர்களை வாசிக்க வைப்பதிலும் இம்முகாம்
வெற்றியே. ஆசிரியர்களை அழைத்து வந்த இளைஞரான சதீஷும், முகாம் தொடங்க ஆலோசனையும், நல்லதோர் அறிவியல்
இயக்க பாடலோடு முகாமை துவங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் இராச.செயராமன் அவர்களும் வெகு
ஆர்வத்துடன் வாசிப்பு முகாமினை நடத்தியதும் முகாம் சிறக்க உதவியது. ஆசிரியர் ..
மேலும் இத்தகைய ஆசிரியர்களை எதிர்நோக்கி அடுத்த முகாம் காத்திருக்கிறது.
அருமையான படங்கள் தந்து உதவியர் தோழர் சண்முகசாமி.
Comments