இதோ இன்றும் ஒரு செய்தி மதிய உணவு இடைவேளையில் நம் தொண்டையை அடைத்து உணவு இறங்க மறைத்தது. அது திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு குழந்தை பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்து இறந்துவிட்டது. கடந்த சில மாதங்களில் இது எத்தனையாவது முறை என்ற எண்ணிக்கை ஆராய்ச்சியில் இறங்கிவிட்டு ஒரு உச் கொட்டுதலோடு மீண்டும் நம் வேலை பார்ப்போம். தமிழக ஊடகங்களுக்கு ஆகா, இன்றொரு செய்தி கிடைத்துவிட்டது என்ற நிம்மதி உணர்வு. இந்திய ஊடகங்களுக்கு அமிதாப்புக்கு தலைவலி வந்தால் மட்டுமே தலைப்பு செய்தி. எங்கோ ஒரு மூலையில் நேரும் குழந்தை இறப்பென்பது செய்தியல்ல.
ஏன் இப்படி? நம் வீட்டு குழந்தை லேசாக மூக்கு உறிஞ்சினாலே பிரபல டாக்டரை பார்த்து ஒரு 200 ரூபாயை அழுதுவிட்டுதானே மறுவேலை பார்க்கிறபோது, ஒரு குழந்தை இறப்பு என்பதை, இதில் நம் இனம், நம் நாடு என்ற அடையாளங்களுக்குக் கூட விலக்கில்லாமல் நம்மால் யதார்த்தமாய் ஒரு குற்ற உணர்வு கூட வேண்டாம், குறைந்தபட்ச அனுதாப உணர்வு கூட இல்லாமல் கடக்க முடிகிறது? உணர்வுகள் மறத்த ஊனமான யந்திரன்களாக ஏன் நாம் இருக்கிறோம்?
நம் தேசத்தில் ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 70000 குழந்தைகள் பிறப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதே சமயம் பிறந்த குழந்தைகளில் 1 முதல் 5 வயது வரை இறப்புச் சதவீதம் என்பது சுமார் 16.85% என்பதும் ஒரு புள்ளிவிவரத்தின் கணக்கு. இது உலகில் உள்ள 199 நாடுகளில் முதல் இடத்தை நமக்கு அளித்திருக்கிறது. இது போதாதென்று, எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் விகிதத்திலும் நமக்கு முதல் இடம். பிறக்கும் 1000 குழந்தைகளில் சுமார் 46 சதமான குழந்தைகள் எடை குறைவாகவே பிறக்கின்றன. நாம் வெட்கப்படுகிறோமா உண்மையாக?
கல்வி தனியார்மயம், தேசமெங்கும் விரவியிருக்கும் வறுமை அதனால் பெருகும் ஊட்டச்சத்துக் குறைவு, ஏழைகளை அவனது வறுமையகலாமல் காலத்திற்கும் வாட்டுவது, அரசின் அக்கறையின்மை, அரசின் பொறுப்பின்மை, அரசு இயந்திரத்தின் போலித்தனம் போன்ற பெரிய விஷயங்களில் விவாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். எனினும், லேசாக ஒரு தளத்தில் வைத்து பார்த்தால் என்ன என்று தோன்றியதில், ஒரு வேளை நூறுகோடி மக்கள் என்பதுதான் பிரச்சனையாயிருக்குமோ? பரப்பளவில் அவ்வளவாய்ப் பெரிதாக இல்லாத தேசத்தில் இருக்கின்ற பரப்பில் பெரும்பகுதி மனித இனமாக இருந்தால் உயிர் என்பது மதிப்பில்லாது போகுமோ?
சந்தையில் ஒரு பொருள் மிகுதியாய் கிடைக்கும்போது அதன் மதிப்பு வீழ்வது என்பது இயற்கை. உதாரணமாக விளைச்சல் பன்மடங்கு பெருத்ததால் தக்காளி விலை வீழ்ச்சி என்று நம் நாளிதழில் பார்த்திருக்கிறோம். அஃது இயல்பு. அப்படியானால் மனித இனமும் பெருகிக் கொண்டேயிருந்தால் அதன் மதிப்பும் வீழுமா? அப்படியென்றால் மனித உயிர் என்பதும் சரக்கு என்பதும் ஒன்றா? மனிதம் என்பது ஆற்றல், சக்தியல்லவா? ஒவ்வொரு மனிதனும் இந்த உலகை, இந்த இயற்கையில் ஏதேனும் வகையில் அசைவினை செய்துவிட்டுப் போகிறான். அழுகை ஒன்றே பிரதான இயக்கமாய்த் தொடங்கி, பின் தவழ்ந்து, நடந்து, மழலை கூறி, ஒலி-சொல்-வாக்கியம் என்று பரிமாணம் கண்டு, சுயம் பெற்று வாழ்ந்து மறையும் மனிதத்தினையும் பொருளினையும் ஒன்று போலவே கருதுகிறோமா? பொருளின் அழிவும், மனித இழப்பும் ஒன்றா? அவ்வாறு நாம் தன்னிலை மறந்து கருத நம்மை எது தூண்டுகிறது?
சுயநலமா? மனிதாபிமான இழப்பா? இல்லை, போதுமான சமூக கடமைகளை தான் தராமல் தொடர்ந்து நாம் நம்மைக் காத்துக்கொள்ள, நம் சந்ததிகளுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க நம்மைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டாற்போன்ற போராடப் பலவந்தப்படுத்தும் நம் அரசா? விடைகள் சுயவிமர்சனத்தோடு காணப்பட வேண்டும்.
வெண்மணி தீ நீண்டு கும்பகோணம் சரஸ்வதி பள்ளிவரை வந்தபோதும், கோர்குவானின் மஹி கண்ட ஆழ்குழாய் இறப்பு தொடர்ந்து இன்று நேரிட்டுள்ள துரையூர் குழந்தை இறப்பு வரை நமக்கு என்ன சேதி சொல்கிறது? இறந்து போன பின்பும் குழந்தையைப் பெருச்சாளிக்கு தீனியாக்கும் நிலையினைக் கண்டுநாம் என்ன செய்யப் போகிறோம்?
"பாரடா உனது மானிடப் பரப்பைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்; அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைத்துக் கொள்! உன்னை சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!"
– விடை சொல்லி நிற்கிறான் பாவேந்தன் பாரதிதாசன். விடை காணுவோமா?
Comments
ஒரு குழந்தையின் உடல், உள்ளம் ஆகிய இரண்டையும் இவர்கள் நோகடிக்கின்றார்கள். இறுதியில் அக்கறை இல்லாமையால் அவர்களை பலியாக்குகின்றனர்.
ஒரு பள்ளியில் ஒரு குழந்தை மரணித்தால் அப்பள்ளியின் லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட யாவரும் இனிமேல் கல்வி துறையில் செயல்பட தடை விதிக்க வேண்டும். மரணித்தக் குழந்தைகளின் குடும்பத்துக்கு அப்பள்ளிகள் நட்ட ஈடுக் கொடுக்க வேண்டும் ... !
எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றோர் - ஆசிரியர் கழகங்களை மேலும் வலுப் பெற செய்து, பெற்றோர்களும் - ஆசிரியர்களும் சீரிய முறையில் செயல்பட வேண்டும் ..
எத்தனை எத்தனை குழந்தைகள் இப்படி மரணிக்கும். நினைத்தாலே பதறுகின்றது ..