நண்பர்களே, செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி கவிஞர் புதுவை ஞானகுமாரன் என்கிற தோழர் நாகசுந்தரம் அவர்களின் மறைவினையொட்டி அவரது நண்பர்கள், தோழர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அதில் பேராசிரியரும் என் நண்பருமான ஹேமலதா (9488077788) அவர்களின் அஞ்சலி…
அவர் நிழலில் .......... நானும், பிறரும்
அடக்க, அடக்க, அடங்காமல் மேலெழும்பி மேலெழும்பி வரும் துயரம் அது. இனி என்ன்? எப்படி? என்ற பிதற்றலான கேள்விகள் வெடித்தது. அர்த்தமற்ற வெறித்த பார்வையாக மற்றவர்களுக்கு தெரிந்தது என் பார்வை. நினைவுகள் புரட்டி எடுத்தது.
அவரின் நடை, பேச்சு, எழுத்துவேகம், அதிராத குரல், மென்மை, வருடும் புன்னகை, இலக்கிய பேராவல், படைப்பு சுகத்தை அனுபவிக்கும் அவரின் உவகை, அவரின் பேனா வேகம், பெரும் நட்பு வட்டம், சுழன்றடித்து சலிப்பில்லாமல் சலசலப்பில்லாமல் இயக்க பணியாற்றும் முனைப்பு, செயல் துடிப்பு, எளிமை, கல்வி பணியில் பிடிப்பு, சுற்றுச்சூழல் காக்க்கும் பொறுப்புணர்வு, தெளிவான அரசியல் ச்மூக பார்வை, மாற்றுக்கருத்தை பல சமயங்களில் வெளிப்படுத்தாமல் விழுங்கும் மௌனம், சில சமயங்களில் தன் கருத்தை மாற்றிக் கொள்ள மறுக்கும் பிடிவாதம், யாருக்கும் ஓடி உதவும் இயல்பு, காயங்களை புறக்கணிப்புகளை ஏற்கும் பக்குவம், எல்லையற்ற பொறுப்புகளுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளும் ஆளுமை, குடும்ப உறவு அனுசரிப்பு, பிள்ளைகளின் திறன் உணர்ந்து திசை செலுத்துதல் என அவரின் முழுவாழ்க்கையையும் நினைக்க நினைக்க அவர் இல்லாத வெற்றிடம் மிக பெரியதாகப் படுகிறது.
ஆர்.என்.எஸ் என்றும் ஞானகுமாரன் என்றும் நாகசுந்தரம் என்றும் நாகலூர் நாகசுந்தரம் என்றும் ஆசிரியர் நாகசுந்தரம் என்றும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நாகசுந்தரம் என்றும் புதுவை இலக்கிய, சமூக பரப்பில் அறியப்பட்ட பெருஞ்செயல் முனைப்பு கொண்ட நாகசுந்தரம் அவர்களின் இதயம் துடிக்க மறுத்துவிட்ட செய்தி இடியாய் செப்டம்பர் நாளில் நண்பர்கள் தலையில் இறங்கியது. தீரும் துயரம், தீரா துயரம் என உண்டெனில் இது தீரா துயரம்.
இச்செய்தியை அவரின் நட்பு வட்டங்களுக்கு சொல்லும் துர்பாக்கியம் எனக்கு வாய்த்த்திட்டது. தொலைபேசியில் நாம் அவர்களிடம் “நாகசுந்தரம் இனி இல்லை” என்றதும் எதிர்புறத்தில் நம்ப மறுத்து மௌனம் காத்து, நினைவு மறுத்து, கலைந்து சில நொடிகளில் உண்மை தாக்க வெடித்து கிளம்பியது அழுகையும் ஆற்றாமை ஓலங்களும். எத்தனை அழுகையை கேட்க நேர்ந்தது அன்று. “என்ன சொல்றீங்க? என்ன சொல்றீங்க? யாரு? யாரு இறந்துட்டாருன்னு சொல்றீங்க?” என நம்ப மறுத்த குரல்கள் அவை. “பத்திரிகை சம்மந்தபமா நாளைக்கு நான் அவரை சந்திக்க இருந்தேனே! ஐயோ!, “எங்கள் கூட்டத்திற்கு அழைப்பு தர இருந்தேனே, ஐயோ!” “நேற்று அவரை ஒரு புத்தக தொகுப்பு சம்பந்தமா சந்திக்க வேண்டியிருந்தது, முடியவில்லை. ஐயோ!” என எத்தனை ஆதங்கங்கள், அழுகைகள், செய்தி தவறாக இருக்க கூடாதா என்கிற ஏக்கங்கள்...
எனக்கான இழப்பு அதிகம். தோழன் இழந்தேன். இணைந்து பணி செய்யும் தருணங்களை இழந்தேன். என் எழுத்து காவலனை இழந்தேன். என் கருத்து பரப்பை செழிக்க செய்யும் உரத்தை இழந்தேன். வாதிடும் மறுமுனையை இழந்தேன், பேசுவதையே வாழ்வதிலும் கை கொள்ள வேண்டும் என்று தூண்டிய நெறியாள்கை இழந்தேன், என் சிறு சிறு படைப்புகளையும் உச்சி முகரும் பிரசுரித்து பார்க்க்கும் விமர்சகனை இழந்தேன். என் படைப்புகளின் தமிழ்பிழையை திருத்தி தலையில் குட்டும் கையை இழ்ந்தேன். வாசிப்பது சுவாசிப்பது போல் ஆகட்டும் என்பதை வாழ்த்து செய்தியாய் சொல்லிக்கொண்டேயிருந்த கிளியை இழந்தேன்.
புதுவை இலக்கிய பரப்பு இந்த மரணத்தால் இழந்தது ............ அதிகம். இளங்கவிஞர்களை எப்படிதான் அடையாளம் காண்பாரோ தெரியாது. இவர்களின் ஏராளமானோரை மேடையேற்றி பார்த்தார். பெண் படைப்பாளிகளை, கவிஞர்களை முன்னிறுத்தினார். புதுவையிம் உலவும் பல சிற்றிதழ்களின் ஆலோசகரானார். அவற்றின் பிரதான பங்காளிப்பாளர், “எழுதுங்கள்! எழுதுங்கள்! என்ற மந்திர வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டேயிருந்தார். எந்த மேடையையும் தன் கருத்து மேடையாக்கி கொள்ளும் ஆற்றல் அவரிடம் இருந்தது. முகிழம் சிறு சிறு இலக்கிய அமைப்புகளையும் நம்பிக்கையோடு ஆரத்தழுவிக் கொண்டார். ஆசிரியர்க்கு கடிதம், எதிர்வினை என்று சிறுசிறு கருத்து பதிவு தளங்களையும் புகுந்து வந்தார். புதுவை இலக்கிய பரப்பு முழுவதும் வியாப்பித்திருந்தார். கட்டுரை தொகுப்பு, சிறுகதை தொகுப்பு, ஆய்வு கட்டுரைகள் என்று அவர் பெயர்தாங்கி
வலம் வந்த நூல்கள் நிறைய.......
குறிப்பாக சொல்ல வேண்டுமென்று நினைத்தால் அவையும் நிறைய நிறைய நிழலாடுகின்றன... 1996 என்று நினைக்கிறேன். வளர்ந்து உயர்ந்து நின்ற நாகசுந்தரம் என்ற எழுத்தாளர் தனது சிறுகதை தொகுப்பு விமர்சன கூட்டத்தில் விமர்சன உரையாற்ற, அப்பொழுதுதான் எழுத துவங்கியிருந்த என்னை அழைத்தார். அப்பொழுது பொங்கும் ஆர்வத்தில், அவர் சிறுகதைகளை அக்குவேறு ஆணிவேறாக அலசி தள்ளினேன். இப்பொழுது யோசிக்கிறேன். ஏன் எல்லோரையும்போல் அவர்க்கு இணக்கமான பெரும் இலக்கியவாதிகளை கொண்டு விமர்சன கூட்டம் நடத்தி தன்னை அவர் உயர்த்திக் கொள்ளவில்லை? பொட்டில் தெரிக்கிறது உண்மை. என்னை விமர்சகராக வளர்க்கும் முனைப்பில் அவர் செய்துகொண்ட முடிவு அது. ஐயோ! என பதறுகிறது. பிரம்மாண்டங்களில் நம்பிக்கையில்லாதவர் அவர்.
அவரை குறித்து, அவர் செயலாற்றலை குறித்து, அவரின் சிந்தனைகள் குறித்து நாம் ஏதோ ஒரு வடிவில் பேசிக்கொண்டேயிருப்பது அவரை முன்னுதாரணமாக பலர் கொள்ளும் எழுச்சியை உருவாக்கும்.
ஒரு 150 பக்க டைரிக்குள் பல சுற்றறிக்கைகளை, கூட்ட அழைப்புகள், செய்தி சித்தரிப்புகள், கருத்து நோட்டீஸ்கள் என்று ஏராளமானவற்றை செருகிக் கொண்டு கருத்துலகமாய் அலைந்தவர் அவர். ஏன் என்னால் இப்பதிவை எழுதிகொண்டே போவதை நிறுத்த முடியவில்லை.... நிறுத்த முடியவில்லை....
என் குழந்தை கடந்த ஆண்டு என் தந்தையை (தாத்தாவை) இழந்தது. இந்த ஆண்டு நாகசுந்தரம் தாத்தாவை இழந்து தவிக்கிறது. இன்னும் எத்தனை இழப்புகளை பார்க்க போகிறாளோ?
குறிப்பு : நாகசுந்தரம் இறுதி சடங்கிற்கு முன் வீட்டில் கிடத்தப்பட்டிருந்தபோது அவர் தலைமாட்டில் அவரின் ஆதர்ச கவிஞர் பாரதியின் படம் வைக்கப்பட்டிருந்தது. ஆமாம்! நாம் நாகசுந்தரம் அவர்களை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறோம்.
Comments
பேராசிரியர் ஹேமா என் எதிரே அமர்ந்து தனது இதயம் வெடிக்கக் குமுறிக்கொண்டே பேசுவது போல் இருந்தது. ஒரு கட்டத்தில் அவரது தனிப்பட்ட இழப்புக்குள் அவர் நுழையும்போது, குபுக்கென்று ஒரு துளி கண்ணீர் துளிர்த்தது. தோழர்களின் தோழனாக, அந்தச் சொல்லை வெற்றுச் சொல்லாக இல்லாமல் அதன் உட்பொருள் அறிந்த நேயராக, பிரபஞ்ச ரகசியத்தினைக் கற்றுத் தேர்ந்துவிட்ட ஞானியாக வலம் வந்த அந்த அற்புத மனிதரின் ஆளுமையின் வீச்சை ஹேமாவின் அபார எழுத்துவன்மை பெரிய சித்திரமாக வரைந்து நிறுத்தியிருக்கிறது.
புதுவை ஞானகுமாரனை இழந்ததன் வலியை விடவும், அவரை நெருங்கி அறியும் வாய்ப்பைப் பறிகொடுத்துவிட்ட சோகம் அதிகம் வாட்டி எடுக்கிறது.
எஸ் வி வேணுகோபாலன்