Skip to main content

சுகந்தி டீச்சரும் அண்ணா விருதும்


சுகந்தி டீச்சர், இந்தப் பெயர் சென்ற ஆண்டு (2009) டிசம்பர் மாத துவக்கத்தில் அசாத்திய தைரியத்திற்கும், கடமையுணர்ச்சியின் உச்சத்திற்கும், மிக உயர்ந்த தியாகத்திற்கும் அர்த்தம் கொடுப்பதாக தமிழ் சமூகத்தில் பலராலும் பேசப்பட்டது. அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் இந்தப் பெயர் குறித்து அவர் அவர்களுக்கே உரிய பாணியில் செய்தி வெளியிட்டது. இன்னும் தெரியாதவர்களுக்கு, சுகந்தி டீச்சர் என்பவர் 21 வயதே ஆன பெண் ஆசிரியர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் ஒன்றியம் அருகே கட்டிப்புலம் கிராமத்தின் கலைவாணி பள்ளி என்கிற தனியார் கிராமப் பள்ளியின் ஆசிரியை. இப்போது தெரிந்திருக்குமே. இன்னும் தெரியாதவர்களுக்கு, உங்கள் மேல் தப்பல்ல. உங்கள் மறதியே காரணம். வேறு ஒன்றுமல்ல. மக்களின் மறதியில்தானே பல தவறுகளும், ஊழல்களும், பெரிய குற்றங்களும், ஏன் படுகொலைகளுமே மறைக்கப்படுகின்றன, தீயர்களும், கொடும்பாவிகளும், பொய்யர்களும் தலைவர்கள் ஆகிறார்கள். இப்போதும் தெரியாதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். ஏனெனில், அது யாதொரு பயனும் தரப்போவதில்லை. நீங்கள் மானாட மயிலாட, டீல் நோ டீல் என் எதையும் பார்க்கலாம். இது எதற்கு?

அஜய் செல்வபாரதி {6}, விஜிலா{5}, ஜெயசூர்யா{6}, ஜெயபிரகாசம்{5}, ஹரிஹரன்{4}, ஈஸ்வரி{7}, மஹாலக்ஷ்மி{8}, அபினயா{8} மற்றும் அஜய் சிவபிரகாசம்{6}. இவர்களோடு சுகந்தி {21}. உங்களுக்கு சொல்ல வேண்டாம், அடைப்புக் குறிகளுக்குள் இருப்பவை வயதைக் குறிப்பதென்று. இவர்கள் அனைவரும் நாககுடையான் கிராமத்தை சேர்ந்தவர்கள். பத்து கிலோமீட்டர் தள்ளியிருக்கும் தனியார் பள்ளியான கலைவாணி மெட்ரிக் பள்ளிக்கு இவர்கள் பள்ளி பேருந்தில் பயணம் செய்பவர்கள். இப்படியாக பயணம் செய்தவர்கள் சென்ற ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பேருந்து காமாட்சியம்மன் குளத்தில் விழ மரணத்தை தரிசித்தார்கள். செம்மொழி காவலர் முதலான எண்ணற்கரிய பட்டங்களை கொண்டிருக்கும் மிகவும் மாண்புமிக்க கலைஞர் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 50,000/‍, மற்றும் மரணம் நிச்சயம் என்று தெரிந்த பின்னும் தீரமாக சில குழந்தைகளை காப்பாற்றி தன்னுயிர் கொடுத்த சுகந்தி டீச்சருக்கு ரூபாய் ஒரு லட்சமும் கொடுத்து உதவியுள்ளார்(?!!!!!). இது தவிர, 2010 குடியரசு தின விழாவில் முதல்வர் கையால் அண்ணா விருதும் சுகந்தி டீச்சருக்கு கொடுக்கப்பட்டது. அதை அவரது தந்தை மாரியப்பன் பெற்றுக்கொண்டார். அண்ணா விருது என்பது ரூ. 5000/‍ மதிப்பிலான தங்க முலாம் பூசிய பதக்கமும், ரூ.25000 மதிப்பிலான காசோலையும் ஆகும்.

இந்த விபத்து முதலில் எப்படி ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டது என ஒருமுறை பார்ப்போமே. அநேக ஊடகங்களில் இந்த விபத்து மிக துரதிருஷ்டவமானது; வாகனத்தை ஓட்டி சென்ற ஓட்டுநர் வாகனத்தை செலுத்தியபோது கையில் செல்போன் கொண்டு பேசிக்கொண்டிருந்தார்; அந்தப் பேருந்து பராமரிக்கப்படாமல் மிக மோசமான நிலையில் இருந்தது; அப்பள்ளியின் தாளாளர்களை கைது செய்ய வேண்டும்; அந்த டீச்சருக்கு மிக உயரிய விருது அளித்து கௌரவிக்க வேண்டும்; அந்த பள்ளிக்கு அரசு அங்கீகாரம் இல்லை; என்ற தளத்திலேயே செய்திகள் வந்தன. மிக மெல்லிய குரலில் அரசு இது போன்ற பள்ளிகளுக்கு எப்படி அங்கீகாரம் தந்தது என்ற கேள்விகளும் ஒலித்தன. தீக்கதிர், ஜனசக்தி போன்ற தினசரிகள் இந்த விபத்திற்கு அரசின் கல்விக் கொள்கையே காரணம் என்கிற சரியான பாதையை காட்டின.

ஊடகங்களின் பார்வை ஒரு புறம் இருக்க, நாம் பார்க்க வேண்டிய செய்திதான் என்ன? இந்த விபத்து ஓட்டுனரின் கவனக்குறைவால் மட்டும்தான் நிகழ்ந்ததா? இந்த விபத்திற்கு வேறு யார்தான் பொறுப்பு? முதலில்,தனியார்மயமான கல்வி. தமிழகத்தின் ஒரு மூலை கிராமத்திலும் ஒரு தனியார் மெட்ரிக் ஆங்கில பள்ளி. இந்திய அரசால் இதுதான் ஒரு பள்ளிக்குரிய அமைப்பு முறை என்கிற வரையறை எல்லாவிதத்திலும் மீறப்படும் தனியார் மெட்ரிக் ஆங்கில பள்ளிகள் வீதிகள்தோறும். ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து அதனை பல அறைகளாக தடுத்து (பெரும்பாலும் தடுப்புகள்கூட இருப்பதில்லை) அவையே வகுப்புகள். குறைந்தபட்சம் 12வது வகுப்பு படித்திருந்தால் கூட ஆசிரியர் ஆகலாம். ஆசிரியர்கள்கூட பெண்களாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். மாறாக கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு இழைக்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் என்பது போல் இங்கும் . சுமார் ரூ.800/‍ க்கூட ஆசிரியர்களாக வேலை செய்கிறார்கள். குழந்தைகளை ஒரு மந்தையாக பாவித்து அதட்டியும், மருட்டியும் எதற்கும் பயந்தவர்களாக, சுத்தமாக தன்னம்பிக்கை இல்லாதவர்களாக அவர்களது இயல்பினை மரித்துப் போகச் செய்து, இயந்திரங்களாக மாற்றும் வேலை செய்கின்றன பள்ளிகள். இவைகளுக்கு எந்த நியதியும் இல்லை. பள்ளிக் கட்டணம், உடை, புத்தகங்கள், பாடத்திட்டம் என்று எதற்கும் எந்த நியதியும் இல்லை. அந்த அந்த பள்ளி நிர்வாகங்களே எல்லாவற்றையும் நிர்ணயிக்கலாம். அரசு வெறுமனே வேடிக்கை பார்க்கும். அதுதான் சமச்சீர் கல்வி வரப்போகிறதே, இனி கட்டணக் கொள்ளை என்பதெல்லாம் இருக்காது என்பதெல்லாம் பம்மாத்து. பாடத்திட்டம் தவிர மற்ற எல்லாமும் அப்படியே இருக்கப்போகிறது என்கிறபோது எப்படி கட்டணக் கொள்ளை இருக்காது என்று கூற முடியும்?

ஆளுகின்ற அரசாகங்கள் தான் இம்மாதிரியான பள்ளிகளுக்கும் கல்விக்கும் காரணம் என்பது நிச்சயம். அவர்களின் பொறுப்பற்ற தன்மையே இம்மாதிரியான விபத்து நேரவும் காரணம்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் நஷ்டதொகை கொடுத்துவிட்டு மீண்டும் அடுத்த விபத்தினை எதிர்ப்பார்த்து இருக்கின்றன அரசுகள். அரசால் எப்படி எல்லா மக்களுக்கும் கல்வி இலவசமாக தரமுடியும்?; அரசுப்பள்ளிகள் தரமானதாக இல்லை; அரசு ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்வது இல்லை; அரசால் கட்டமைப்பினை அமைத்துத்தர முடியாத போது தனியாரின் உதவியை நாடுவது எல்லா விதத்திலும் நியாயமே; நல்ல கல்வி என்பதற்கு கொஞ்சம் காசு கூடுதலாக செலவழித்து தானே ஆக வேண்டும்; என்பது போன்ற தங்களின் வசதிக்கு மட்டுமேயான சுய நல கருத்துக்களை பெருத்த குரலில் அலற முடிந்த உயர்தர, நடுத்தர மத்தியதர வர்க்கம், பொதுப்புத்தியின் ஒருமித்த குரலாக விதைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த வர்க்கத்திடம் எல்லா ஊடகங்களும் இருக்கிறது என்பதாலே அது அனைவருக்குமான குரலாக தங்கள் குரலை சொல்கிறது.

நண்பர்களே, இந்த விபத்தின் மேலும் சில பரிமாணங்கள் அடுத்த பதிவில்..........

Comments

இந்த மானாட மயி(ரா)லாட ரசிகரால் இதையெல்லாம் கவனிக்க எங்க நேரமிருக்கிறது.
அவர் குடும்பத்தையே சாமாளிக்கமுடியாமல் திண்டாடுகிறார்.
ஏதோ போங்க எல்லோரும் மறந்ததை, நீங்கள் நினைவு வைத்துள்ளீர்கள். கும்பகோனம் பள்ளி
மறந்துட்டோமே!!!
N.Mani said…
comrade document the details of punishment given the erring management including govt officils.

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற