Skip to main content

சிவப்பின் உவப்பில் சிந்தை முழுக்க சித்தாந்தம்...........


என்னவோ தெரியவில்லை, அண்மைக்காலமாக மிக நெருக்கமாக பாதிப்பு ஏற்படுத்திய நண்பர்கள், தோழர்களை மிகக் குறைந்த இடைவெளியில் இழக்க நேரிட்டிருக்கிறது. இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் துணைப் பொதுச் செயலாளர் அசோகன் கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று மாரடைப்பில் விடைபெற்றிருந்தார். அதற்கு இரண்டே தினங்களுக்குமுன் தான் அவரது திருமணம் நடந்திருந்தது. 47 வயது அவருக்கு என்பது நெருங்கிப் பழகிய பலருக்கு வியப்பளித்தது. அத்தனை இளமையும் துள்ளலுமாகச் செயலாற்றியவர். அடுத்தது, தூங்காமல் தூங்கி (சந்தியா பதிப்பகம்) என்ற அற்புதமான நூலை எழுதிய மயக்க இயல் மருத்துவர் மாணிக்கவாசகம். 60 வயதுவரை அறுவை சிகிச்சை மேசைக்கருகில் நோயாளிகளின் புனர்வாழ்விற்கு வரமளிக்கத் தக்க ஆற்றலோடும், அது மறுக்கப்பட்ட வேளைகளில் உறவினர்களுக்கு ஆறுதல் மொழிகளோடும் வளையவந்த அவரே அறுவை சிகிச்சை மேசை மீது படுக்க நேர்ந்த கணத்தில் உரமழிந்து தவித்தவர். புற்றுநோய் அவரை அதிகம் தவிக்கவிடாது நான்கைந்து மாதங்களுக்குள் விடுதலை கொடுத்துவிட்ட நிகழ்வு சென்ற அக்டோபர் 23ல் நடந்தது. இளம்வயதில் செயலூக்கப் போராளியாக தெருவீதியில் மட்டுமின்றி, இணையவீதிகளிலும் முழங்கிய வித்தியாசமான தோழன் செல்வபெருமாள் தான் நேற்று (22 01 2010) இரவு நம்மைப் பிரிந்தது. மனிதகுல நேயர் என்பதுதான் மேற்சொன்ன மூவருக்கும் பொதுவான முகவரி. தொழிற்சங்க மேடையிலோ, மருத்துவர் உருவிலோ, களப் போராளியாகவோ வாழ்வின் சாரத்தை நேசித்தவர்கள், மற்றவர்களுக்காக வாழத் துடிப்பவர்கள் விரைந்து மரித்துவிடுவது கொடுமையிலும் கொடுமையானது.


செல்வபெருமாளின் எழுத்துக்களில் (http://santhipu.blogspot.com )ஒளிரும் நேர்மையும், துணிவும், அழுத்தமும் இயக்க இலட்சியத்தின்பால் அவர் கொண்டிருந்த விசுவாசத்தின் செம்மாந்த மேடையிலிருந்தே வெளிப்பட்டது. இதன் சுவடுகள் எதுவும் தெரியாத எளிய மனிதராக அவர் சக தோழர்களிடம் பழக முடிந்தது ஒரு ஆகச் சிறந்த கம்யூனிச குணாம்சம் இன்றி வேறென்ன....

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் செல்ல வாய்த்த தருணங்கள் ஒவ்வொன்றின்போதும் கடந்த காலங்களில் அவரைப் பார்க்கும் நேரங்களின் தோழமை வினவல்கள் உணர்ச்சி பெருக்குபவை. முக்கிய தலைவர்கள், தொழிற்சங்க அமைப்புகளின் தொலைபேசி எண் தேவைப்படும் நேரங்களில் அந்த அலுவலகத்திற்கு அழைத்தால் எதிர்முனையில் அவர் கிடைக்கும்போது தேவையான விவரங்களோடு, அப்போதைய அரசியல், சமூக நடப்பு ஏதும் பற்றிய கருத்து பரிமாற்றங்கள் இல்லாது அந்த அழைப்பு நிறைவு பெற்றதில்லை.

இ-மெயில் நதியில் நான் தயங்கித் தயங்கிக் காலை நனைக்கத் துவங்கிய பொழுதுகளில் சடாரென்று, அவரது பெயரோடு வலப்பக்கத்தில் ஒரு செவ்வக உரையாடல் பெட்டி கண் திறந்தபோது நான் திடுக்கிட்டுப் போனேன். இதை வாசித்தீர்களா, அதைப் படித்தீர்களா, எதிர்வினை செய்யக் கூடாதா என்பதாக இருக்கும் அவரது கேள்விகள். எனது கட்டுரையை சிலாகித்தும், ஏன் Bank Workers Unity இதழ் கைக்கு வரவில்லை என்றும் இருக்கும் வேறு நேரத்து பிரஸ்தாபங்கள். அவருக்கென்று பிரத்தியேகமா இதழ் சேருவதை மாதாமாதம் உறுதிசெய்வதை எனது முக்கிய வேலைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தேன்.

ஒருமுறை அவரது மெயிலிலிருந்து வந்திருந்த உரையாடல் குறித்து அறிந்துகொள்ள அடுத்தநாள் அழைத்தபோது அவர் அலுவலகம் வந்திருக்கவில்லை. அலைபேசியில் அழைத்துக் கேட்டபோது, 'அது நானில்லை தோழா, உ.ரா. வரதராசன் தான் எனது மெயிலிலிருந்து உங்களை உரையாட அழைத்திருந்திருப்பார்' என்றார். அது மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை அகில இந்திய மாநாட்டு ஆவணம் ஒன்றை மொழிபெயர்க்கும் வேலை தொடர்பான உரையாடல். இப்படி முக்கியப் பணிகளுக்காகத் திறந்து வைத்த குடிலாக இருந்தது அவரது மின்னஞ்சல் உலகம்.

சந்திப்பு வலைப்பூவில், அவரது ஆவேசமான எழுத்துக்களைப் போலவே, அழகியல் பரிமளிக்கும் பதிவுகளும் மின்னும். சென்னை மத்திய சிறைச்சாலை புழலுக்குக் குடி பெயர்ந்துபோகவும், பழைய சிறைச்சாலையை இடிப்பதற்குமுன் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து கொடுத்தபோது, செல்வபெருமாள் சென்றுவந்த அனுபவத்தின் பதிவை நாட்டு மக்கள் அனைவரும் வாசிக்கவேண்டும் என்று தோன்றும். அதிகாரத்தின் பிரம்புகள் வரலாறு நெடுக செய்துவரும் தவறுகள், குற்றங்கள், அராஜகங்கள், அயோக்கியத்தனங்கள் எல்லாவற்றையும் விசாரிக்கும் இடமாகப் பழைய சிறைச்சாலைகளை மாற்றினால்தான் என்ன என்று தோன்றும்.

வலைப்பூவில் புதிய வரவுகளற்றுப் போன ஒரு சோதனையான காலத்தில் அவரது திடீர் உடல் நலிவு தெரியவந்தது. அவரைப் பார்க்கும் துணிவற்றுப்போகச் செய்தன அவர் கடக்கத் துவங்கிய நோயின் கட்டங்கள். அவரது இருப்பின்போதே அவரது பிரிவின் விளைவுகள் பற்றிப் பேசவைக்கக் கூடிய கொடியவனாக வந்து தொலைந்திருந்தது புற்றுநோய்.

'சிங்காரவேலர் சிந்தனையாளர் மன்றம்' துவங்கி அரிய கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்ததில் அவர் பங்களிப்பு அதிகம். சிவப்பின் உவப்பில், சிந்தை நிரம்ப சித்தாந்தங்களே பெருகியிருந்த இந்தச் சின்னச் சிங்காரவேலர் இன்னுமின்னும் கருத்தியல் தளத்தில், தத்துவார்த்த விவாதத்தில், பண்பாட்டின் செவ்விய மொழியில் என்னென்னவோ சாதிக்கும் ஆற்றலும், கனவுகளும் கொண்டிருந்தவர் என்பதே இந்த மரணத்தின் துயரத்தைக் கூட்டுகிறது.
இரந்துகோள் தக்கதுடைத்தான சாக்காட்டைத் தேர்ந்தெடுத்துச் சென்றவரே, செல்வப்பெருமாள் தோழா, செவ்வணக்கம் உனது வசீகரிக்கும் ஆவேச நினைவுகளுக்கு............

எஸ் வி வேணுகோபாலன்


நெஞ்சம் கனக்கிறது. இப்போதுதான் அவர் எழுதிய சிங்காரவேலர் புத்தகத்தினை புதுவை அரசு புத்தக கண்காட்சியில் வைத்திருந்த அத்துனை பிரதிகளும் விற்று தீர்ந்து போன நிலையில் அவர் யார் என்று வியந்திருந்தேன். இதற்கு முன் பார்த்திராத, கேட்டிராத ஓர் ஆளுமையின் மறைவு என்னை அத்துனை அதிகமாக பாதித்தது. தோழருக்கு செவ்வணக்கம். ஒரு மனிதனின் வாழ்க்கை அவரது மறைவின் போதுதான் அதிகமாக புலப்படுகிறது. மீண்டும் அந்த அருமை தோழருக்கு, ஆளுமைக்கு, உழைப்பாளிக்கு, போராளிக்கு செவ்வணக்கங்கள்.



Comments

Anonymous said…
Nobody can pay tribute well than com.S.V.VENUGOPAL.His tribute is our tribute..vimalavidya

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...