
அன்பு நண்பர்களே, வணக்கம். தமிழகம் முழுவதும் இப்போது சமச்சீர்க்கல்வி என்பது பரவலாகவும், விரிவாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் சில சாதாரண கேள்விகளும் அதற்குரிய விடைகளும் காணப்படாமலேயே இருக்கிறது. ஒரு சிறு முயற்சியாக என்னுடைய சில சாதாரண கேள்விகளுக்கு தமிழ் நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்ட செயலாளரும், பொருளாதார வல்லுனருமாகிய தோழர் ந.மணி அவர்கள் விடை சொல்லியிருக்கிறார். அவை :
1. தமிழக அரசால் மிக ஆர்பாட்டத்துடன் கொண்டு வந்திருக்கும் இந்த "சமச்சீர்கல்வி" உண்மையிலெயே
சமச்சீர்கல்விதானா?"
சமச்சீரான கல்வி (சமமான தரத்தில்) என்னும்போது, உயர்தரமான அவரவர்க்கு ஏற்ற அல்லது தேவையான கல்வியைக் குறிக்கப்பெறும். சமமான தரம் உருவாக்குவதும் செயற்படுத்துவதும் பாடத்திட்டம் மட்டுமல்லாது பள்ளி வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்தம் திறமை, பாட நூல்கள், தேர்வுமுறைகள், பள்ளி நிர்வாகம், ஆகிய பள்ளிக் கல்வியின் அங்கங்கள் அவற்றின் தொடர்பான யாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பெரும் திட்டம் என்பதில் ஐயமில்லை. கலைத்திட்டம், நன்கு பயிற்சி ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் மாணவர் விகிதம் இவற்றுள் ஏதாவது ஒன்று மட்டுமே சமமாக இருந்தால் மட்டும் சமச்சீர்க் கல்வியை உருவாக்க முடியாது (சமச்சீர் கல்விக்குழு அறிக்கை : பக் : 14)
இக்கல்விக் குழுவின் அறிக்கை 11 அத்தியாயங்களையும், 150 பக்கங்களையும் கொண்டது. சமச்சீர் கல்வியின் மேற்படி வரையறை மூன்றாவது அத்தியாயத்தில் துவக்கத்திலேயே வருகிறது. இதையெல்லாம் நன்கு அலசி ஆராய்ந்த தமிழக அரசுதான் ஒரே பாடத்திட்டத்தைக் காட்டி இதுவே சமச்சீர் கல்வி என்கிறது. எதுவும் இல்லாததற்கு இது பரவாயில்லை என்பதற்காகவோ அல்லது சமச்சீர் கல்வி என்னும் பெரும் திட்டத்தை நோக்கிய முதல்படி என்ற அளவிலோ இதைப் பாராட்டலாம்.
2. இந்த வகை சமச்சீர்கல்விதானா கல்வியாளர்களும், சமூக முன்னேற்ற சக்திகளும் எதிர்ப்பார்ப்பது?
அனைத்துப் பள்ளிகளும் தரமாக கல்வியை, அனைத்து மாணவர்களுக்கும் தர வேண்டும். எதுக்கும் லாயக்கு இல்லை, உருப்படவே உருப்படாது என சபிக்கிறார்களே அந்த மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான தரமான கல்வியைப் பெறவேண்டும். இது பொதுப்பள்ளி மற்றும் அருகமைப் பள்ளிகளால் மாத்திரமே சாத்தியம். ஒரு ஜன நாயக நாட்டில் குறைந்தபட்சம் கல்வியும் மருத்துவமும் எந்தவிதப் பாகுபாடும் இன்றி சரிசமமாக வழங்கப்படவில்லையெனில், எவ்வாறு ஜன நாயகம் ஆகும்? அது பண நாயகம் அல்லவா?
3. ஓராசிரியர் பள்ளி மற்றும் பெருமளவிலான ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது இதை எப்படி பாதிக்கும்?
சமச்சீர்க் கல்வி என்ற அரசின் சொல்லாடலைத் தவிர்த்து, "சமச்சீர் பாடத்திட்ட முறை" என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். இதில் கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு உண்டா எனத் தெரியவில்லை. இன்றைக்கு ஓராசிரியர் பள்ளியாகவும், ஈராசிரியர் பள்ளியாகவும் குற்றுயிரும் குலையுயிருமாய் ஜீவித்துக் கொண்டிருக்கும், இப்பள்ளிகள் தொடங்கப்பட்டபோதே இவ்வாறு துவங்கப்பட்டவை அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் நிரம்பி வழிந்த இப்பள்ளிகளுக்கு இன்று ஏன் இந்த நிலை ஏற்பட்டது? 1950களில் தொடங்கப்பட்ட இப்பள்ளிகளுக்கு வயதும் ஐம்பதை எட்டியிருக்கும். அப்போது இப்பள்ளியைஸ் சுற்றியிருந்த மக்கள் தொகை எவ்வளவு? அய்ந்து பத்தாண்டுகளுக்குப் பின்னர் மக்கள் தொகை எவ்வளவு அதிகரித்திருக்கும்? இந்திய மக்கள் தொகை வளர்ச்சியை "Population explosion" என்றே வர்ணிக்கிறார்கள். இவ்வாறு துரிதமாக வளர்ந்த மக்கள் எங்கே சென்றார்கள்? ஒவ்வொரு கிராமத்திலும் துவக்கப்பட்ட தொடக்கப் பள்ளிகள் இன்றைக்கு உயர் நிலை/மேல் நிலைப் பள்ளியாக எழுந்து நின்றிருக்க வேண்டுமல்லவா? மாறாக் பெருகிவந்த மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இன்றி, கட்டிட வசதி இன்றி, பாதுகாக்கப்பட்ட குடி நீர் வசதியின்றி, துரத்தியடிக்கப்பட்டார்கள். எங்கும் செல்ல வழியற்ற நிலையில் சபிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் தழைத்தோங்கும் சூழ்னிலையில் ஓர்/ஈராசிரியர் பள்ளிகளில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
4. மெட்ரிக் பள்ளிகள் அடித்து வரும் கொள்ளைகள் இனி இருக்காதா?
"பாம்பும் சாகாமல், தடியும் ஒடியாமல்" என்று கிராமத்தில் ஒரு பழமொழியுண்டு. அப்படித்தான் யதார்தத்திற்கு புறம்பாக சமச்சீர் கல்வி இருக்கப் போகிறது. "எம்புருசனும் கச்சேரிக்குப் போனான்" என்ற கதையாய் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் தங்களுக்கு தக்க "கும்பகோண மெட்ரிக் பள்ளிகளுக்கு" அனுப்பி வருகிறார்கள். அதில் ஏதேனும் சிறு மாற்றம் ஏற்பட்டாலே பெரிய விஷயம். எனவே தற்போதைய சமச்சீர்க் கல்விக்கும் (பாடத்திட்டத்திற்கும்) மெட்ரிக் கல்விக் கொள்ளைக்கு எந்தவிதத்திலும் தடையாக்க இருக்கப் போவதில்லை.
5. சமீபத்தில், தலித் முரசில் (4 மாதங்களுக்கு முன்னர்) அழகிய பெரியவன் அவர்கள் செயல்முறை கற்றல் என்பது தலித் மாணவர்களுக்கு எதிரானது என்றும் அது அவர்களை பின்னோக்கி இழுத்து செல்கிறது என்றும் கூறி வரும் நிலையில் சமச்சீர்கல்வி என்பது எப்படி தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கும் உதவியாக இருக்கும்?
தலித் குழந்தைகள் மட்டுமல்ல. எந்தவொரு குழந்தையையும் அழகிய பெரியவனை சற்று உற்று நோக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். குழந்தையின் அனைத்துக் கற்றல் செயல்பாடுகளும் செயல்வழிக் கற்றலே. எனவே, செயல்வழிக் கற்றல் என்பது இயல்பாய் கற்ற்ல் என்று பொருள்படும். செயற்கையாய், செயல்வழிக் கற்றல் இன்றி, இயர்கைக்கு முரணாக கற்றுத்தரும்போது, தலித் குழந்தைகளோ தலித் அல்லாத குழந்தைகளோ எந்தவொரு குழந்தைக்கும் கடினமானதே. ஏற்கெனவே படிப்பறிவு உள்ள குடும்பக் குழந்தைகளுக்கு அந்த இடைவெளியை இட்டு நிரப்ப குடும்பத்தில் ஏற்பாடு உண்டு. ஆனால், கல்வியறிவு அற்ற, பின் தங்கிய மக்களின் குறிப்பாக தலித் மற்றும் அதையொத்த நிலையில் வாழும் குழந்தைகளுக்கு கற்றுத் தர யார் இருக்கிறார்கள்? செயல்வழிக் கற்றலே சால சிறந்தது.
6. வட இந்திய தலித் தலைவர்கள் பலரது பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் தலித் மக்கள் முன்னேற்றத்திற்கு ஹிந்தி வேண்டாம்; ஆங்கிலம் தான் வேண்டும் என் கின்றனர். சமீபகாலமாக பல்வேறு அபத்த தீர்ப்புகளை சொல்லி வரும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கர்னாடக மா நிலத்தில் தாய்மொழி வழி கல்வி அமல்படுத்த முயன்றதை குறை சொல்லியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, வசந்தி தேவி தொடங்கிய கல்வியாளர்களும், ஜன நாயக சக்திகளும் காலம் காலமாக தாய்மொழி வழி கல்விதான் சிறந்தது என்று வாதிட்டு வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சமச்சீர்கல்வி இது குறித்து என்ன சொல்கிறது?
................ இதற்கான பதிலும் இன்ன சில கேள்விகளின் பதில்களும் நாளைய பதிவில்.
Comments